நீயா நானா – மருத்துவர்கள் Vs. பொதுமக்கள்



எனது முகநூல் சகோதரிகளில் ஒருவர் ஈரநிலா. இது நீயா நானா பதிவுதான். தற்போது முகநூலில் எனது வெளியில் விவாதிக்கப்படும் பொருள் இது. இந்த விவாதங்களின்   தொடர்ச்சியாக நான் பெரிதும் மதிக்கும் ஒரு மருத்துவ ஆளுமையும், எழுத்தாளர் ஆளுமையும் பிரிந்துவிட்டார்கள்.

சகோதரி  நீயா நானா குறித்து நடுநிலைமையோடு எழுதியிருக்கிறார் என்று தோன்றியதால் அவரது அனுமதி பெற்று இங்கே பகிர்கிறேன்.



'நீயா நானா – மருத்துவர்கள் Vs. பொதுமக்கள்' பார்த்தேன். அந்நிகழ்ச்சியின்  தொடர்ச்சியாக பேஸ்புக்கிலும் சில நாட்களாக விவாதங்கள் தீவிரமாக நடந்துவருகின்றன. இருதரப்பிலும் ஞாயங்கள் இல்லாமல் இல்லை! நிகழ்ச்சியைப் பொருத்தவரையில் கோபிநாத் அதை நடத்தியவிதம் அவ்வளவாகப் பாராட்டும்படியாகயில்லை என்பதைச் சொல்லியே ஆகவேண்டும். தன் பணியின் தன்மையை மறந்துவிட்டு, ஏதோ பொதுமக்களின் பிரதிநிதியைப்போன்று  நிகழ்ச்சியைக் கொண்டுசென்றுள்ளார். நம்மைப்போன்று அவருக்கும் மருத்துவத்துறையின் மேல் பல வருத்தங்கள் இருக்ககூடும். ஆனால் தான் அந்நிகழ்ச்சியை நடத்துபவராக இருக்கும்போது, மனதில் இருக்கும் முன்முடிவுகளைக் கொஞ்சம் மூட்டைக் கட்டிவைத்துவிட்டு நடுநிலையாய் இருப்பதைப்போன்று  நடிக்கவாவதுவேண்டும் என்பதை மறந்துவிட்டார் போலிருக்கிறது.

பொதுமக்கள் சார்பில் பேசியவர்களில் இருவருக்கு இரத்தக்கொதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டன; நிச்சயம் மருத்துவ ஆலோசனைத்தேவை என்பதை அங்கிருந்த மருத்துவர்கள் யூகித்திருப்பார்கள். 'மாஸ்டர் செக்- அப்' என்பதின் பொருளை இன்னும் தெளிவாக விளக்கியிருக்கலாம். மருத்துவர்களை விளக்கவிட்டிருக்கலாம். கேள்விகள் கேட்க நிறைய நேரம் கொடுக்கும்போது பதில்கள் சொல்லவும் அனுமதிக்க வேண்டாமா? அவர்கள் சொல்லும் பதில்களை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறதோ இல்லையோ! முழுவதுமாக அவர்கள் சொல்ல விரும்புவதைச் சொல்லி முடிக்கும்வரை பொறுமைக்காக்கும் பக்குவம் மக்களிடம் இல்லையென்றால், பிறகு விவாதம் என்று அதை அழைக்கமுடியாது. அழைத்துவைத்து 'கல் எறிதல்' - அவ்வளவுதான்! பூசிமொழுக முயல்கிறார்களா? மொழுகட்டும். பார்வையாளர்களுக்கும் அது விளங்கும். மொழுகி முடித்த பின்பு ஈட்டியால் இடித்து நோண்டலாம். கல் எறியலாம். அதைவிட்டுவிட்டு விடாமல் குற்றம் மட்டுமே சாட்டிக்கொண்டிருந்தால் எப்படி? விவாதம் என்று சொல்லப்படும் பெரும்பான்மையான நிகழ்சிகள் இப்படித்தான் நடக்கின்றன.

சமுதாயத்தின் நன்மைக்காக எடுக்கப்படுவதே 'மாஸ்டர் செக்- அப்' என்று சொல்லி, காசநோயை உதாரணமாகக்காட்டித்தானே சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டார் ஒரு மருத்துவர். காசநோய்க்கான சோதனைகள், 'மாஸ்டர் செக்-அப்' பில' இடம்பெறாதது ஏன்? என்று ஒருவர் எழுப்பியக் கேள்விக்கு நல்ல பதிலை மருத்துவர்கள் எவருமே வாய்ப்பிருந்தும் தரவில்லை. மருத்துவர்களின் சார்பாகப் பணக்காரர் ஒருவர் பேசினார். ‘ஏழைக்கேற்ற எள்ளுருண்டை!’ என்று சொல்லாமல் சொன்னார். ஆனால் அவர் சொல்ல வந்தச்செய்தி -  ஏழை, பணக்காரன், நடுத்தரவர்க்கம் என்று எல்லோரும் நம் நாட்டில் மருத்துவச்சிகிச்சைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. அது மற்ற நாடுகளில் இல்லை, என்பதோ என்று எனக்கொரு சந்தேகம்.ஆனால் அதைச்சொல்லிய விதம் படுமோசம். உதாரணங்களைக்  கொடுக்கும்போது மருத்துவர்களும்கூட மிகக்கவனமாகயிருத்தல் நல்லது. உங்களை அடிப்பதற்கு நீங்களே கற்களைப் பொறுக்கித் தருகிறீர்களே!

மருத்துவர் இராஜ்குமார் ஞாயமான கருத்து ஒன்றை முன்வைத்தார். உடல்நலம் சரியில்லையென்றால், முன்பெல்லாம் என்ன செய்வோம்? அருகிலிருக்கும் நமக்குப் பழக்கமான மருத்துவரிடம் போவோம். அவர் பரிசோதித்துவிட்டுத் தேவைப்பட்டால் குறிப்பிட்ட பெரிய மருத்தவரிடம் செல்லுமாறு அறிவுறுத்துவார். இன்று நாம் என்ன செய்கிறோம்? வயிறு வலியா? நேரே போவது இரைப்பைகுடலியல் மருத்துவரிடம். அவரென்ன செய்வார்? பரிசோதனைகளுக்குப் பரிந்துரைப்பார். இப்படியாகத் தொடர் அசீரணத்திற்கு ஸ்கானிங் செய்துவிட்டு, ‘ஒன்றுமில்லை’ என்று வந்தவுடன் மருத்துவரைக்குறை சொல்வதுதானே  நம் வழக்கம்? ஆனால் M. D படித்த பெரிய மருத்துவர்களுக்கு, ‘அசீரணமாக இருக்குமோ?’ என்னும் ஐயம் ஏன் வருவதில்லை?  ஏன் உடனடியாகப் பரிசோதனைகளைச் செய்யச்சொல்லி செலவு வைக்கின்றனர்?  சரி. அப்படியே அவர்கள் நம்மிடம், ‘உனக்கு ஒன்றுமில்லை. வெறும்  அசீரணம்தான்!’ என்று சொன்னாலும் நாமும் நம்ப வேண்டுமே.?!  'ஏதோ பெரிய டாக்டர்-ன்னு போனா..ஜெலுசில் எழுதித்தரான்' என்று ஏளனம் செய்வதும் நாம் தானே? ;)

இன்றைய மருத்துவத்துறை ‘Management-driven' என்பதை மூன்று  மருத்துவர்கள்  துணிச்சலாகச் சொன்னார்கள். நல்லது. அவர்களுக்காவது அத்துணிச்சல் இருந்ததே. பின்விளைவுகள் என்னவாக இருக்குமோ! பாவம். அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும்  மருத்துவக்கல்லூரி கட்டுகிறார்கள். மருத்துவர்கள் மருத்துவமனைக் கட்டுகிறார்கள். கல்லூரி நடத்துபவர் ‘சீட்டுக்கு இவ்வளவு’ என்று நன்கொடைக்கேட்கிறார். மருத்துவமனை நடத்துபவர், ‘நோயாளிக்கு இவ்வளவு’ என்று செலவு நிர்ணயிக்கிறார். நமக்காக வாங்கிப்போட்ட எந்திரங்களுக்கெல்லாம் வேறு யார் பணம் கட்டுவார்? மருத்துவர் ராஜ்குமார், மருத்துவர்களெல்லாம் கல்லூரிகள் நடத்தும் தொழிலதிபர்களால் பாதிக்கப்பட்டு நட்டத்தில் இருப்பதாகச் சொன்னார். அவருடைய நிலையிலிருந்து பார்க்கும்போது அது உண்மைதான். தொழிலதிபர்கள் இல்லையென்றால், மருத்துவக்கல்லூரி நடத்துவதையும் மருத்துவர்களேச்செய்வார்கள். அதை முடியாமலாக்கிய தொழிலதிபர்களால் பாதிக்கப்பட்டு நட்டமடைந்தவர்கள்தானே மருத்துவர்கள்! :P

இரண்டு நாட்கள் முன்பு எடுத்த பரிசோதனைகளையே வேறு மருத்துவரிடம் செல்லும்போது மீண்டும் புதிதாக எடுக்கச்சொல்வதைக்குறித்துக் குற்றம் சாட்டப்பட்டது.  ஆனால் பலரும் அப்படிச் சொல்வதில்லை என்பது என் அனுபவத்தில் நான் கண்டது . சில மருத்துவமனைகள் வற்புறுத்துகின்றனர் என்பதும் உண்மை. சில சமயங்களில் அப்படி மறுபடியும் எடுத்துவிடுவது நன்மையில் முடிந்த கதைகளும் உண்டு. அறிவுறுத்தும் மருத்துவரின் ஞானம் மற்றும் நோக்கத்தைப் பொருத்து அதன் விளைவும் அமையும்.

‘அதிகமாகப் பரிசோதனைகள் செய்வது, தேவையற்ற ஆய்வில் முடியும். அதைத் தவிர்க்கலாம்!’ என்று ராஜ்குமார் ஒப்புக்கொண்டார். அங்கிருந்த மற்ற மருத்துவர்கள் அதை அவ்வளவாக வரவேற்கவில்லை என்று தோன்றியது. எனக்கோர் ஐயம்! 'தேவையற்ற பரிசோதனை' என்பதை எப்படி முடிவு செய்வார்கள்?  மருத்துவருக்கு ஏற்படும் ஐயங்களைத் தீர்த்துக்கொள்ளவே பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. ஒரு மருத்துவர், ‘வேண்டாம்!’ என்று ஒதுக்கும் பரிசோதனை, வேறொரு மருத்துவருக்கு முடிவுகள் எடுக்கக்கண்டிப்பாகத்  தேவைப்படலாம். அதை அவர் பரிந்துரைக்கத்தான் செய்வார். அதேபோல ஒரு மருத்துவருக்கு எழும் சந்தேகம் மற்றவருக்கு எழாமல் போகலாம். இப்படிப் பல காரணிகள் இருக்க எப்படி ‘இது தேவை, இது தேவையில்லை’, என்று வரையறுப்பார்கள் என்பது புரியவில்லை.

பரிசோதனைகள் தேவையா? இல்லையா? என்று நிறையப்பேசினார்கள். ஆனால் செய்யப்படும் பரிசோதனைகள் சரியாகச் செய்யப்படுகின்றனவா? என்பதைப் பற்றி ஒன்றுமே பேசவில்லை. இறுதில் வந்த தம்பதியினரின் கதை மனதை உலுக்கிவிட்டது. ஆயிரத்தில் ஒரு குழந்தைக்கு வரும் கிருமிப்பாதிப்பு அவர்களது குழந்தைக்கு வந்தது வருத்தமானது. பிரசவம் நடத்திய மருத்துவமனையும் மருத்துவர்களும் அதைச் சரிவரக் கையாளாதது கொடுமை. அது கொடுமை என்றால், கடந்த ஜூன் மாதம் நான் படித்து ஆடிப்போன வேறொரு கதையுள்ளது. அதைக் குறித்து அன்று நான் எழுதிய பதிவைக் கீழே காண்க!

https://www.facebook.com/notes/eeranila-dakshinamurthy/மரித்துப்போனது-சிசு-மட்டுமல்ல-மனிதநேயமும்-தான்/723639874361669

என்ன இருந்தாலும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த மருத்துவர்களை  'நீயா நானா?' குழுவினர் இன்னும் கொஞ்சம் மரியாதையாக நடத்தியிருக்கலாம் என்பது என் கருத்து. ஆயிரம்தானிருந்தாலும் மருத்துவர்கள் இல்லையென்றால் உலகின் மக்கள் தொகையில் பாதி இன்றிருக்காது. மருத்துவத்துறைக்கும் மருத்துவர்களுக்கும் மனிதகுலம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது என்பதை மறுக்கமுடியாது!

நிகழ்ச்சியில் பேசிய சில மருத்துவர்களிடம் இரண்டு வேண்டுகோள்கள் வைக்க வேண்டும்..
1. கொஞ்சம் தமிழ்நாட்டு மக்களுக்கும் புரியும்படி தமிழில் பேசிப்பழகுங்கள்.
2. கோபிநாத் சொன்னதைப்போன்று உங்களுடைய தனிப்பட்ட தேவைகளுக்காக ஒன்றுகூடி ஒற்றுமையாகச் செயல்படும் நீங்கள், மக்களுக்குப்பயன்படும் வகையிலான மாற்றங்களைக் கொண்டுவரவும் ஒற்றுமையாக நின்று செயல்படுங்கள்!

Comments

  1. 1. கொஞ்சம் தமிழ்நாட்டு மக்களுக்கும் புரியும்படி தமிழில் பேசிப்பழகுங்கள். உண்மையான வார்த்தை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி தோழர்

      Delete
  2. உண்மைதான் ..சில நேரங்களில் நிகழ்ச்சி ஒரு சார்பாக அமைந்து விடுகின்றது....நல்லபதிவு....வாழ்த்துகள் ஈரநிலாவிற்கும் பகிர்ந்த உங்களுக்கும்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோதரி

      Delete
  3. தோழர்,
    நல்ல பகிர்வு.
    மேற்குறித்த விவாதகளத்தை நான் பார்க்கவில்லை.
    ஆனால் எனக்குத் தெரிந்து நம் ஒவ்வொருவருக்குள்ளும் , நமக்கோ நம்மைத் தெரிந்தவர்களுக்கோ நிகழ்ந்த, மனிதாபிமானமற்ற, மறக்க நினைக்கின்ற மருத்துவ(ர் ) மனைகளில் ( இதுவே தவறான சொல்லாடல் )பெற்ற மோசமான அனுபவம் நிச்சயம் இருக்கும். பிறருக்கிருக்கிறதோ இல்லையோ
    எனக்கிருக்கிறது. சேவை தொழிலாக மாறிய பின் , மருத்துவம், கல்வி போன்ற துறைகளில் பணம்படைத்தவர் பணமற்றவர் எனும் பாகுபாடு இயற்கைதான்! ஆனால் நியாயமான கூலி பெறுவதோ, செய்யும் தொழிலால் பிறரை ஏமாற்றாமத தொழில் தர்மத்தோடு இருப்பதோ மட்டுமே எல்லாராலும் வேண்டப்படுவது. அறியாமையைப் பயன்படுத்தி ஆதாயம் அடைதலுக்குப் பெயர் ஏமாற்றுதல் தானே? தெரியாதவர்களிடம் உயிரைப் பிணையாக வைத்து நடத்தப்பெறும் பேரம் எவ்வளவு அசிங்கமானது?
    தாங்கள் சுட்டிய சகோதரியின் வேறொரு பதிவில் ,
    //களைகள் வளர்ந்துவிட்டன என்பதற்காகப் பயிர்களையும் சேர்த்து எரித்தல் சரியோ? நன்மையைப் போன்று தீமையும் பாரபட்சம் இன்றி எல்லாத் துறைகளிலும் பரந்து நிறைந்துள்ளது//
    என்றுள்ளார். ஆனால் பயிரை விஞ்சிக் களைநிறையும் நிலத்தை களைநிலம் என்றுதானே அழைக்க வேண்டும்?
    பெரும்பான்மையோரைக் கொண்டுதானே ஒரு துறையின் அடையாளம் எழும்? விதிவிலக்குகள் இருக்கலாம். அவற்றைப் பொதுமைப்படுத்தும் விதியாகக் கொள்ள முடியாது.
    “வாக்கத்தவன் வாத்தியார் போக்கத்தவன் போலீஸ்“ என மக்கள் மத்தியில் வழங்கப்படும் பழமொழி செல்வாக்குற்றது அதனால் தானே?
    அதிகாரம் இருக்கிறது என்ற மமதையில் முறையற்ற வரிகளால் மக்களைக் கசக்கிப் பிழிந்து வசூல் செய்யும் மன்னன், ஊருக்குச் செல்லும் பயணியிடம் வேலினைக்காட்டி “ இருப்பதைக் கொடுத்துவிடு! இல்லாவிட்டால் கொன்று விடுவேன்“ என்று சொல்லும் வழிப்பறிக்கொள்ளைக்காரனைப்போன்றவன் என்று சொல்லும் திருக்குறள்.
    ( வேலொடு நின்றான் இடுவென்றது போலும்
    கோலொடு நின்றான் இரவு )
    வழிப்பறிக் கொள்ளைக் காரன் இருப்பதைக் கொடுத்து விட்டால் உயிரோடு விட்டுவிடுவான்.
    ஆனால் இங்கு உயிரோடு இருக்க வேண்டுமானால் இருப்பதை கொடுத்து விட்டு , வீட்டுக்குச் சென்று அக்கம் பக்கத்தில் கடன்வாங்கியோ, அல்லது சொத்தை விற்றோ கேட்கும் பணத்தை ஏன் எதற்கெனக் கேட்காமல் திரும்ப வந்து கட்டியாக வேண்டியிருக்கிறது.
    இப்படிச் செலவு செய்து உயிர்மட்டுமே உடைமையெனக் கொண்டு அதுவும் போயிருக்கக் கூடாதா என உலவும் அநேக நடைபிணங்களைக் கொண்டுள்ள நம் நாட்டில் மருத்துவத்தைத் தங்கள் மரபுரிமையாய்ப் பெற்ற நாவிதர் சமூகத்தை மதிக்கத் தவறிய நம்இனம் இன்று படித்தவர்களின் கையில் பட்டு பாழ்படும் மருத்துவத் துறை முன் மண்டியிட்டு அழுவது வேடிக்கை.
    எந்தப் பாரம்பரிய மருத்துவமும் உயிர்ப்பேரம் அல்லது பிணப்பேரம் நடத்தியதாக நம்மிடம் வரலாறில்லை.
    ஏனெனில் அவர்கள் பாமரர்கள்!
    “ படித்தவன் சூதும் பாவமும் பண்ணினா
    போவான் போவான் ஐயோன்னு போவான் “
    என்ற பாரதியின் குடுகுடுப்பைக்காரன் பாட்டை நினைக்கிறேன்.
    ஐயோ வென்று போகாமல் இருக்க என்ன செய்வது என்பதையும்
    இவர்கள் படித்து விட்டார்கள் என்பது பாவம் பாரதிக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆக விஜூ அய்யா ...
      அதகளம் பண்ணீருக்கீங்க ...
      //நம் நாட்டில் மருத்துவத்தைத் தங்கள் மரபுரிமையாய்ப் பெற்ற நாவிதர் சமூகத்தை மதிக்கத் தவறிய நம்இனம்//
      உண்மைதான் அய்யா..

      Delete
  4. எனது வாழ்வியல் அனுபவங்கள், மருத்துவத் துறை சார்ந்த கசப்பான அனுபவங்களையே கொடுத்துள்ளன

    ReplyDelete
    Replies
    1. ஜெட் இஞ்சின் தோத்தது போங்க ...
      நன்றி தோழர்

      Delete
  5. அருமையான கருத்தைக் கொண்டப் பதிவு..கோபிநாத் நடுநிலை வகித்து நிகழ்ச்சியை நடத்தியிருக்கலாம். ஆனால் மருத்துவம் பெரியதொரு வியாபாரமாகிவிட்டதே என்பது வருத்தம்தான். என் குடும்பத்திலும் மருத்துவர் உண்டு. நல்ல சேவை மனப்பான்மை உடைய மருத்துவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களை மதிக்கும் அதே நேரத்தில் அனைத்து மருத்துவர்களும் அப்படி இல்லையே என்று வருந்தவும் செய்கிறேன். குறிப்பாகப் பெருநகரங்களில் பெரும்பான்மையான மருத்துவர்களுக்கு மக்களின் மனம் பற்றிக் கவலையில்லை..பல நிகழ்வுகள் இருக்கின்றன..அவற்றையெல்லாம் சொல்ல ஒரு தொடர் பதிவே போட்டுவிடலாம்..எந்த ஒரு சிறு கிளினிக் பார்த்துச் சென்றாலும் அந்த மருத்துவர் நகரின் பெரிய மருத்துவமனைகளில் ஒன்றோடு இணைந்திருக்கிறார், அங்கு வரச் சொல்லி விடுகின்றனர். ஒரு உதாரணத்திற்கு நான் கருவுற்றிருந்தபோழுது அம்னியாடிக் நீர் வெளியேறவே மருத்துவரை அழைத்தேன், காலை எட்டரை மணிக்கு. "மருத்துவமனை சென்று எமெர்ஜென்சியில் சேர வேண்டியதுதானே, நான் பூஜையில் இருக்கிறேன், என்னைத் தொந்திரவு செய்துகொண்டு.."
    இன்னொருமுறை மகனுக்கு வாந்தி என்று அழைத்துச் சென்றேன், முன்பதிவு செய்யாததால் காத்திருக்கவேண்டும் என்றனர். முன்பதிவு செய்தவர்களை விட நூறு ருபாய் அதிகம் வாங்கிக்கொண்டனர். ஒரு மணி நேர காத்திருப்பிற்குப் பின், உள்ளே அழைத்தனர். மருந்துச்சீட்டு எழுத ஆரம்பித்த மருத்துவரிடம் ஒரு கேள்வி கேட்டேன், "நான் ஏற்கெனவே அழுத்தத்தில் இருக்கிறேன்..முன் பதிவு வேறு இல்லை, சீட்டை வாங்கிக் கொண்டு போங்கள்"!!! நூறு ரூபாய் அதிகம் கொடுத்தாலும் ஒரு கேள்வி கேட்க கூடாது..
    இதெற்கெல்லாம் மகுடம் வைத்தது போல ஒன்று உண்டு, நான் பாதிக்கப்பட்டது...
    மருத்துவர் என்றாலே பயம் இப்பொழுது!! எதற்கெடுத்தாலும் ஊருக்கா போக முடியும், தெரிந்த மருத்துவரைப் பார்க்க?
    என் தோழியின் அக்கா பையனுக்கு மெரிட்டில் MD சீட், ஆனால் ஒரு கோடி கேட்கிறார்களாம்..அவர் படித்துவந்தபின் என்ன செய்வார்??!!!!

    ReplyDelete
    Replies
    1. பிரச்சனையின் வேர் எங்கே என்பது தெரிந்துவிட்டாதா ... சகோதரி
      //ஆனால் ஒரு கோடி கேட்கிறார்களாம்..அவர் படித்துவந்தபின் என்ன செய்வார்??!!!!//

      Delete
  6. நம்க்கு ஒரு உடல் ரீதியான பிரச்சினை என்றால் நாம் முதலில் ஒரு நல்ல பொது மருத்துவரிடம் தான் செல்ல வேண்டும். அவர்கள் பரிசோதித்து நமக்கு என்ன என்று சொல்லியபின் நிபுணரிடம் செல்லுவதே நல்லது. அனுபவம். வீட்டிலும் மருத்துவர் உள்ளதால். ஏனென்றால் நிபுணரிடம் சென்றோம் என்றால், அவர் தனது நிபுணம் சார்ந்த துறையில் மட்டுமே சோதனை செய்யச் சொல்லுவார். உதாரணமாக...நமக்கு வாய்வுப் பிடிப்பு இடது புறம் வந்தால் அது நெஞ்சில் வலி வரலாம்....நாம் அணுகுவது இதய நிபுணரை. நமது மருத்துவர்கள் நிபுணராக இருந்தாலும், அவரும் அடிப்படை மருத்துவம் படித்துவிட்டுத்தானே ஒரு குறிப்பிட்டத் துறையில் நிபுணத்துவம் பெறுகின்றார். அப்படி இருக்கும் போது அவர் தன் துறை சார்ந்த தோதனைகளை மட்டுமே ஏன்செய்யச் சொல்ல வேண்டும். நமது பிரச்சினை அவர் துறை சேர்ந்தது இல்லை என்று தெரிந்துவிட்டால் அவர்கள் அது என்னப் பிரச்சினை என்று சொல்லி அந்த மருத்துவரை அணுகச் சொல்லலாமே. ஒருவேளை நிபுணர் ஆகிவிட்டால் அடிப்படை மருத்துவம் மறந்துவிடுமோ?!!!!

    ReplyDelete
    Replies
    1. இருக்கலாம் என்றே தோன்றுகிறது ...

      Delete
  7. நன்றி தோழர்

    ReplyDelete
  8. நன்றி தோழர்

    ReplyDelete

Post a Comment

வருக வருக