தூண்டில் ... நல்லா மாட்டினேன் நான்

எனக்கும் விருது? 

ஒரு நல்ல ஆசிரியனின் வகுப்பறைக்கும் தாயின் கருவறைக்கும் சன்மானம் தரக்கூடிய கருவூலம் உலகில் இல்லை என்பது உணர்ந்தால் புரியும். அத்தகு நல்ல ஆசிரியர்களை கண்டு அவர்களின் ஒரு சிறிய துளியையாவது போலச்செய்யும் (காப்பி அடிக்கும்)விளையாட்டு எனது. 

இரண்டாம் வகுப்பின் ராபர்ட் அய்யா, ஆறாம் வகுப்பின் ஆசிரியை கிளாடி குணவதி, ஒன்பதாம் வகுப்பின் தமிழாசிரியர் தாமஸ் தமிழ்ச்செல்வன் பன்னிரெண்டாம் வகுப்பில் உயிரியல் ஆசிரியர் பசுங்கிளி, தாவரவியல் ஆசிரியர் ரவீந்திரன், கல்லூரியில் பேரா. நவநீதன், பேரா. ஜோதி, பேரா. அரங்குளவன், பேரா. பாலா, பேரா. முத்துராமன் கல்வியியல் கல்லூரியில் பேரா. ஜம்புநாதன், பேரா. சின்மயானந்தம், பணியில் சேர்ந்தவுடன் திகைத்துப் பார்த்த ஷாகுல் ஹமீது, அரசுப்பணியில் சேர்ந்தவுடன் சந்தித்த அறிவியல் ஆசான் சோமசுந்தரம்,இன்றும் எனது ஆசிரியராக தொடரும் அய்யா முத்துநிலவன், என அது எழுத எழுத நீண்டு கொண்டே போகும் பட்டியல். இவர்களின் பாதிப்பு எனது ஆசிரிய ஆளுமையில் நிறைவே இருக்கும்.  

இவர்களின் யாருக்கும் விருதுகள் வழங்கப்பட்டதாக நினைவில்லை. ஆனால் விருதுக்கு மிகத் தகுதியானவர்கள். 

விருதுகள் குறித்து நகர்வது எனது ஆசிரியத்தின் நோக்கம் அல்ல.  சொல்லப் போனால் நானே எனக்கான விருது விண்ணப்பத்தில் கையொப்பமிடும் அந்தத் தருணத்தில் எனது ஆசிரியம் தகுதி இழக்கிறது என்பதே எனது தெளிவு.  (விருது பெற்றோர் மன்னிக்கவும், இது எனது சொந்தக் கருத்து.) 

பல ஆண்டுகளுக்கு முன்னர் நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பம் ஒன்றை டிஸ்னியின் இணயதளத்தில்  பார்த்தேன். அது முழுக்க முழுக்க மாணவர்களாலே முன்மொழியப்பட்டு பரிந்துரைக்கப்பட்டு வழங்கப்படும்! 

இதைப் போன்று ஒரு ஆசிரியரின் மாணவர்கள் தருகிற மரியாதையும் நேசமும் மட்டுமே அவருக்கான விருது. இப்படி சிந்தித்தால்  பல நல்ல ஆசிரியர்களை நாம் மனம் பளிச் பளிச் என மனத்திரையில் ஓடவிடுவதே அவர்களுக்காண மானசீகமான உண்மையான விருது.

இன்றய தினத்தில் எனது அலைபேசியின் குறுஞ்செய்தி பெட்டியை எனது மாணவர்கள் நிரப்பினார்கள்! இதுவே போதுமானது. அவர்களில் ஒரு தொழில் அதிபர், ஒரு மாவட்ட ஆட்சியரும் இருந்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது. 

முகநூலில் நண்பர்கள் வாழ்த்தைப் போலவே மாணவர்களும் உள்டப்பியை நிறைத்தனர். 

இதைவிட  வேறென்ன விருது வேண்டும்?

இப்படி இருந்த என்னை எங்கள் கல்லூரியில் பேசவேண்டும் வாருங்கள் என்று அழைத்தார் கிங்க்ஸ் உணவக கல்லூரியின் தாளாளர். ஜே.சி சுந்தரவேல். ஜேசி இளைஞர் பேரியக்கத்தின் செயல்பாடுமிக்க உறுப்பினர் என்பதால் நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டேன். 

விழாவிற்கு சென்றதும்தான் தெரிந்தது நான்கு நல்ல ஆசிரியர்களுக்கு விருது தரப்போகிறார்கள் என்பது. 

அடுக்கி வைக்கப்பட்ட கேடயங்களில் ஒன்றில் எனது பெயரும் இருந்தது! 

நண்பர் எனது பதிவுகளைப் படித்திருக்கிறார் குறிப்பாக பள்ளிவரமாட்டேன் என்று விஷத்தைக் காட்டி மிரட்டிய மாணவன் ஒருவன் குறித்த பதிவு

எனக்கு நகைப்புதான் வந்தது. வகுப்பின் முன்னணி மாணவர்கள் குறித்து கவலைகொள்ளும் எனக்கு பள்ளியை விட்டு வெளியேறத் துடித்த சரியாக படிக்காத ஒரு மாணவனோடு ஏற்பட்ட அனுபவம் இந்த விருதை வாங்கித் தந்திருக்கிறது! 

வாழ்வின் முரண்கள் சுவையூட்டுபவைதான். 

பேச வரச் சொல்லி என்னைப் பொறிவைத்துப் பிடித்து எனக்கு இந்த விருதினை  வழங்கிய கிங்க்ஸ் உணவகக் கல்லூரி தாளாளர் ஜே.சி சுந்தரவேல் அவர்களுக்கு நன்றிகள். 

விருதினை பெற்ற மூத்த ஆசிரியர்களோடு அமர்ந்திருப்பது எனக்கு சங்கடத்தை தந்தது. வேங்கடகுளம் பள்ளியின் முதகலை ஆசிரியர் திரு.ரூபன் அவர்கள், வேதியல் ஆசிரியர். திரு. நவநீதன் அவர்கள் தலைமை ஆசிரியர் திரு. சிவகுருநாதன் என பெரும் சாதனை புரிந்த ஆசிரியர்கள் அமர்ந்திருக்க நான் உடன் அமர்ந்திருந்தது பெரிய விசயம். 

அசத்தலான அமைப்பில் இருந்த கல்லூரியில் மாணவர்களின் கரகோஷம் எனது கல்லூரி நாட்களை நினைவுபடுத்தியது. தங்கள் ஆசிரியர்களுக்கு கேக், பரிசுப்பொருட்கள் என அதகளம் செய்துவிட்டனர். கல்லூரிச் சாலை. 

இதற்கும் மேல் நான் முதுகலை ஆசிரியராக பணியாற்றிய பி.எஸ்.கே நிறுவனங்களின் தாளாளர் திரு.கருப்பையா அவர்கள் கரங்களால் எனக்கு இந்த விருதை வழங்கச் செய்த ஜே.சி. சுந்தரவேல் அவர்களுக்கு எனது நிறைவான நன்றிகள். 

கேட்காமல் தரப்பட்ட விருது என்றாலும் கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கிறது. மிக நீண்ட பயணத்தின் முடிவில் வரவேண்டிய ஊர் திடுமென பயணத்தின் பாதியிலேயே வந்தமாதிரி.

எனி ஹௌ நன்றிகள் ஜே.சி. சுந்தரவேல்,

நிகழ்வின் ஒருங்கிணைப்பிற்காக நன்றி ஜே.சி. முருகராஜ்.  

Comments

  1. பயணிகளுக்குத்தான் ஊர் பற்றிய கவலை எல்லாம் தங்களை போல் சாரதிகள் தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருப்பது தானே சிறப்பு:))
    சரியான அங்கீகாரம்தான் சகா:) வாழ்த்துகள்:))

    ReplyDelete
  2. அட.. மாலையில் -நம் வலைப்பக்க ஆசிரியர் குரு, சகோதரி மு.கீதா உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்ட- நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் கூட சந்தித்தோம் சொல்லவே இல்ல கஸ்தூரி? முதலில் என் வாழ்த்துகளை ஏற்கவும். “விண்ணப்பித்து வாங்குவதா விருது?” எ்ன்று தினமணியில் கட்டுரை எழுதியவன்தான் என்றாலும், இதுபோலத் தரமறிந்து சொல்லாமலே அழைத்துத் “தரும் விருது” பற்றிப் பெருமையே படுகிறேன். அதுவும் உங்களுக்கு..என்பதில் பெருமகிழ்ச்சி. நாம் நடத்திய ஆர்எம்எஸ்ஏ ஆசிரியர்களுக்கான வகுப்புகளில் ஓரளவு நிறைவாக இருந்த வகுப்புகள் ஆங்கில வகுப்புகள் எனில் அதற்கான காரணம் கஸ்தூரி என்பது புதுக்கோட்டை மாவட்டத்துக்கே தெரியும். (அப்போதுதான் நாம் முதலில் சந்தித்தோம் என்றும் நினைவு) அன்றுமுதலே உங்களின் கல்வித் தேடலுக்கு நானும் ஒரு ரசிகன். நீங்களோ -“இன்றும் எனது ஆசிரியராக தொடரும் அய்யா முத்துநிலவன்“ என்று ஒரு போடு போட்டு என்னை உயர்த்தியதன் மூலம் மேலும் உயர்ந்துவிட்டீர் அய்யா. (பணியுமாம் என்றும் பெருமை-குறள்) அந்தக் கலெக்டர் உள்பட-உமது மாணவர்- பலரும் உங்கள் பெருமை பேசக் கேட்டிருக்கிறேன். இதுதானய்யா உண்மை விருது! எனினும் வாழும்போதே விருதுதரும் தகுதியானவர் பற்றிய மரியாதை எனக்கும் உண்டு. யார் தருகிறார் என்பதைப் பொறுத்தது அது! வாழ்த்துகள், வளர்க..வளர்க்க! வணக்கம்.

    ReplyDelete
    Replies

    1. கவிதை இல்லாத வலைப்பூக்களுக்கு கவிஞர் வருவது அரிதினும் அரிது... அரிய வருகைக்கு நன்றி!

      தாங்கள் குறிப்பிட்ட பயிற்சியில் உருவான வலைப்பதிவர் பாண்டியன் தமிழ்மணத்தில் ட்ராபிக் ராங்கில் பதினொன்றில் இருந்தது நினைவில் வருது..

      உங்கள் மூலமாக உருவாகிய நடைனமது வலைபூவினை வாசித்து அரண்டு போனவன் நான்.

      எத்துனை ஆசிரியர்கள் வலைபூக்காரர்களாக இருக்கிறார்கள் இன்று,

      ஆங்கிலப் பயிற்சியில் இது சாத்தியப் படவில்லை இன்னும்.

      வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா

      Delete
  3. நல்லதொரு அங்கீகாரம்தான் வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. வணக்கம்

    மனிதத்துவம் எங்கு வாழ்கிறதோ அங்கு எல்லாம் நல்வரவாய் வந்தடையும் நல்லாசிரியர் விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சார்...
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

  5. வாழ்த்துகள் சார், மாணவர்களின் அன்புதான் உண்மையான விருது என்பது மறுக்கமுடியாத உண்மை சார். தொடரட்டும் உங்கள் கல்விப்பணி...

    ReplyDelete
  6. தங்களுக்கு நல்லாசிரியர் விருது கிடைத்தது எனக்கு பெரும் மகிழ்சியே சகோ தொடரட்டும் தங்கள் சிறந்த பணி
    வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  7. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
    ஒரு நல்ல ஆசானுக்கு கிடைத்த வெகுமதி.
    உங்களின் பதிவுகளை எல்லாம் படிக்கும்போது, மிகுந்த ஆச்சிரியமாக இருக்கும் - இப்படி ஒரு நல்ல ஆசிரியர் இருக்கிறாரே என்று.!!

    மனம் நிறைந்த பாராட்டுக்கள் தோழரே.

    ReplyDelete

Post a Comment

வருக வருக