இளையராஜா ஏன் ஆராதிக்கப்படுகிறார்?


மீண்டும் ஒரு முகநூல் பகிர்வு ...
இளையராஜாவை ரஹ்மானுடன் இன்னொரு கோணத்தில் இருந்து அணுகும் கட்டுரை திரு. Nelson Xavier அவர்களது. (அனுமதி பெற்ற பகிர்வு) 

கடந்த சில வாரங்களாக தொடர்நது ரஹ்மான் பாடல்களை பண்பலையிலும் மொபைலிலும் கேட்கிறேன். ஏற்கனவே கேட்ட பாடல்கள் என்றாலும் இப்போது கொஞ்சம் புதிதாக தெரிகிறது . என்னுடைய மனநிலையும் சூழலும் அதற்கு காரணமாக இருக்கலாம் . ரஹ்மானின் இசையில் ஒருவித தொடர்ச்சி இருக்கிறது. பல்லவி சரணம் வேறுபடும் இடங்களில் ஒருவித நிர்ணயிக்கப்பட்ட ரிதம் இருக்கிறது.
பொதுவாக இளையராஜாவின் தீவிர ரசிகன் நான். ரஹ்மானையும் பிடிக்கிறது. அனிருத்தையும் பிடிக்கிறது.

ஏன் இளையராஜாவை தொழுவது போல,ஆராதிப்பது போல இவர்களை தொழ இயலவில்லை என்று யோசிக்கிறேன். நான் எண்பதுகளில் பிறந்தவன். 1990க்கு முன்பாக பிறந்த பலருக்கும் Stressbusters ஆகவோ ,Outlet ஆகவோ பயன்படுத்த நிறைய வாய்ப்புகள் இல்லை. வாய்ப்புக்களே இல்லை . வானொலியும் திரைப்படங்களும் மட்டுமே வடிகாலாக இருந்த காலங்கள் அவை. அதனாலேயே தங்கள் வாழ்வின் எல்லா தருணங்களுக்கும் இளையராஜாவிடம் இசை இருந்ததை அவர்கள் கண்டுகொண்டார்கள். அல்லது அவரின் இசையோடு தங்கள் வாழ்க்கையை பொருத்திப் பார்த்துக் கொண்டார்கள் என்றே நினைக்கிறேன் . யாரிடமும் சொல்லமுடியா தங்கள் கதைகளையும், கண்ணீரையும் , புன்னகையையும் ராஜாவின் இசைதான் இசைமட்டும்தான் மேகங்களிடையே தாங்கிசென்றிருக்கிறது. இதனாலேயே ராஜா , படைப்பாளி என்கிற நிலையிலிருந்து ஞானி என்கிற ஆராதிக்கிற நிலைக்கு உயரத் தொடங்கினார் என்றே அறிகிறேன். இளையராஜாவின் இசை இந்த மண்ணோடு தொடர்புடைய , இந்த சமூகத்தை பிரதிபலிக்கிற ஒருவித கிறக்கத்தை கொடுத்தது . அந்த போதை மீட்க முடியாத தெளிய முடியாத போதை .

ஆனால் ரஹ்மான் இசை வெளிவரத் தொடங்கிய நாட்களுக்கு பிறகு உலகமயத்தின் கதவுகள் இந்தியாவிற்கு திறக்கப்பட்டன. தொலைக்காட்சிகள் இணையம் என வடிகால் வாசல்கள் பிறந்தன. தனது தனித்துவத்தால் இந்த தலைமுறையை ஆளத் தொடங்கினார் ரஹ்மான். ராஜாவின் தீவிர ரசிகர்கள் ரஹ்மானை நிராகரிக்க முடியாமல் போனார்கள். ரஹ்மானை சிறந்த இசையமைப்பாளராக பார்த்தவர்கள், இளையராஜாவை அதற்கும் மேலாக பார்க்கிறார்கள். இந்த தலைமுறைக்கு இருக்கிற பல விசயங்களில் இசையும் ஒன்று. ரஹ்மான் அவற்றில் சிறந்தவர் . அவ்வளவே . சர்வதேச விருதுகளைப் பெற்றாலும் கூட ரஹ்மானால் ராஜா ஏற்படுத்திய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்று பலரும் சொல்கிறார்கள் . ஆனால் உண்மை அது அன்று. ராஜாவைப் போல மனித மனங்களில் ஆட்சி செலுத்தும் வாய்ப்பு ரஹ்மானுக்கு வாய்த்தே இருக்கிறது. ஆனால் அதை சொல்லி மகிழ , அங்கீகாரம் தேட, அந்த ஏணியில் ஏற்றி வைக்க, அவரை தெய்வமாக கொண்டாட இந்த தலைமுறைக்கு நேரமில்லை . ஐடியாவுமில்லை. தங்கள் புன்னகை, கண்ணீர் இரண்டிற்குமான காரணங்களையும் விளைவுகளையும் இசையை தாண்டியும் கூட இந்த தலைமுறையால் அணுக முடிகிறது. நான் சொல்வேன் ரஹ்மானின் மந்திரம் ராஜாவிற்கு வாய்த்தது போல வெளியில் அறியப்படாமல் போகலாம்.ஆனால் ரஹ்மானின் மந்திரம் இன்னமும் மனங்களில் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது. ராஜாவின் இசையில் தவத்திற்கு வரம் கிடைத்திருக்கிறது . ரஹ்மானின் இசையைப் பொறுத்தவரை தவமிருப்பதே வரம்தான் !

# காற்றின் அலைவரிசை கேட்கின்றதா ? கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகின்றதா,நெஞ்சில் நனைகின்றதா ?

நெல்சன் சேவியர் ...

Comments

  1. நல்ல அலசல்
    நெல்வன் சேவியர் அவர்களுக்கு நன்றி

    ReplyDelete
  2. அன்புள்ள அய்யா,

    இளையராஜாவை ரஹ்மானுடன் இன்னொரு கோணத்தில் இருந்து அணுகும் கட்டுரை திரு. Nelson Xavier அவர்களது கருத்துகளைப் பார்த்தேன்.

    அவர் சொல்வதில் உண்மை இருக்கிறது.

    இசையை ரசிப்பது காலத்துக்கு காலம் மாறிக் கொண்டே வருகிறது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.யின் திரையிசைப் பாடல்தான் ...பழைய பாடல் என்றாலும் அதிகமாக மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது என்பது உண்மைதானே!

    அன்னக்கிளியில் இளையராஜா வந்தார். பண்ணைபுரத்திலிருந்து பாட்டுகட்டிவர அவர்கள் பட்ட துயரம் கொஞ்ச நல்லமல்லவே! தனக்கென தனிமுத்திரை பதித்தார். இசைஞானியாக
    இருக்கின்ற அவர் பாடல்களும் அநேகம் மீண்டும் மீண்டும் கேட்டுக் கிரங்க வைக்கக் கூடியவை...இவரின் பாடலுக்கு ஈடு இணை இல்லை என்றே சொல்லலாம். இசைஞானியும்...கவியரசரும் இணைந்தால் ...மீண்டும் நல்ல பழைய பாடல்கள் போல கிடைக்கும்.! நடக்குமா?

    இசைப்புயல் ரகுமான் வந்தார். திரைப் பாடல்களின் இசையையே புரட்டிப்போட்டார். வெகுவாக ரசிக்கும் படியே உள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை... செம்மொழியான தமிழ் மொழிக்கு... உலகளாவிய அளவில் சிறப்புச் சேர்த்து வருகிறார் என்பது உள்ளபடியே நமக்கெல்லாம் பெருமைக்குரிய விசயம்.

    நாம் எப்பொழுதும் நல்லது எங்கே இருந்து வந்தாலும் ரசிக்கக் கூடியவர்கள்தான். என்ன ஒரு குறை என்றால் தற்பொழுது உள்ளவருக்கு உரிய அங்கிகாரம் கொடுப்பதில்லை. நமக்கு முந்திய காலத்தில் உள்ளவரை மட்டுமே எண்ணி பெருமைப்பட்டுக் கொள்வது.

    அது மாறவேண்டும். இந்தக் காலத்தவரையும் வாழும் பொழுதே பாராட்ட முன்வரவேண்டும்.

    இப்பொழுது வரும் பாடல்களில் ஒரே ஒரு குறை... பெரும்பாலும் பாடலை இசை ஆக்கிரமித்து விடுகிறதே...பாடல் வரிகளைத் தேடவேண்டி இருக்கிறது.

    நல்ல பதிவு.

    நன்றி.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.


    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா
      பாடல் வரிகள் இருக்கிறதா என்ன தேட?

      Delete
  3. //சர்வதேச விருதுகளைப் பெற்றாலும் கூட ரஹ்மானால் ராஜா ஏற்படுத்திய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்று பலரும் சொல்கிறார்கள் . ஆனால் உண்மை அது அன்று. //
    அப்படியா? அதிகம் வேண்டாம். சென்னையில் பல இடங்களிலும் இசைத்துக்கொண்டே இருக்கும் பாடல்களை கேளுங்கள். யார் பாடல் அதிகமாக இருக்கிறது? இளையராஜா. இதே நிலை தான் பல இடங்களிலும்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழர் பாண்டு...
      உண்மைதான்

      Delete
  4. முகநூல் பகிர்வு வலை தள வானத்தில் முழு நிலவாக ஜொலித்தது.
    திரு.Nelson Xavier பகிர்வை தந்தமைக்காக வாழ்த்துக்களுடன் கூடிய பாராட்டுக்கள். இன்னொரு காரிகனின் இசை பரிநாம வளர்ச்சி பற்றிய பகிர்வாகப் படுகிறது. நன்றி
    புதுவை வேலு
    http/www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. காரிகன் பதிவுகளின் தரம் உன்னதம்
      உண்மைதான் நெல்சனும் நன்றாக எழுதுகிறார்..

      Delete
  5. நல்ல ஒரு பகிர்வு! நார்த் போல், சௌத் போல் இல்லாமல் இந்த உலகம் உண்டா? அதைப் போலத்தான் இந்த இது இசை மேதைகளும்! அவரவர் வழியில் தங்கள் இசை ஆளுமையை நிரூபிக்கும் ஜாம்பவான்கள்! அதே போல் ஒவ்வொருவரது ரசனையும்!

    பகிர்வுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. நடுநிலை?
      நன்றி அய்யா ...

      Delete
  6. நன்றி அண்ணா

    ReplyDelete
  7. இளைய ராஜா இசை ஆத்மார்த்தமாக இதயத்தில் இருந்து வந்த இசை ,இப்பத்தைய இசை செட் செய்யப் பட்ட கணினியில் இருந்து வரும் இசை !அதனால்தான் அவ்வளவாய் ரசிக்க முடியவில்லை !
    த ம2

    ReplyDelete
  8. மது,

    நல்ல பகிர்வு. நெல்சன் சேவியர் சரியாகத்தான் எழுதியிருக்கிறார். இருந்தும் சில நெருடல்கள்.

    ----ஏன் இளையராஜாவை தொழுவது போல,ஆராதிப்பது போல இவர்களை தொழ இயலவில்லை என்று யோசிக்கிறேன். நான் எண்பதுகளில் பிறந்தவன். 1990க்கு முன்பாக பிறந்த பலருக்கும் Stressbusters ஆகவோ ,Outlet ஆகவோ பயன்படுத்த நிறைய வாய்ப்புகள் இல்லை. வாய்ப்புக்களே இல்லை . வானொலியும் திரைப்படங்களும் மட்டுமே வடிகாலாக இருந்த காலங்கள் அவை. அதனாலேயே தங்கள் வாழ்வின் எல்லா தருணங்களுக்கும் இளையராஜாவிடம் இசை இருந்ததை அவர்கள் கண்டுகொண்டார்கள். அல்லது அவரின் இசையோடு தங்கள் வாழ்க்கையை பொருத்திப் பார்த்துக் கொண்டார்கள் என்றே நினைக்கிறேன் . ----

    இது ஒரு மேலோட்டமான பார்வை. இதில் அதிகம் உண்மையில்லை. சொல்லப்போனால் 90களுக்கு முன்னால் நமது சமூகத்தில் வாசிப்பும் எழுத்தும் இன்றைவிட அதிகமாக இருந்தது. எழுத்தாளர்களின் பாதிப்பும் புதுக்கவிதையின் எழுச்சியும் அப்போது ஆழமாகவே காணப்பட்டது. சினிமாவைத்தாண்டிய வடிகால்கள் நம்மிடமிருந்தன.ஒரு சாதாரண ரசிகன் இளையராஜாவின் இசையில் தன வாழ்கையின் எல்லா அம்சங்களையும் கண்டான் என்பதெல்லாம் ஒரு அலங்காரமான மேற்பூச்சு. அப்போது அவர் மட்டுமே களத்தில் இருந்தார். எனவே அவரது இசையை மட்டுமே கேட்கும் துர்ப்பாக்கியம் இங்கே நிலவியது என்று சொன்னால் அது கொஞ்சம் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து.

    ---ரஹ்மானின் மந்திரம் ராஜாவிற்கு வாய்த்தது போல வெளியில் அறியப்படாமல் போகலாம்.ஆனால் ரஹ்மானின் மந்திரம் இன்னமும் மனங்களில் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது. ராஜாவின் இசையில் தவத்திற்கு வரம் கிடைத்திருக்கிறது . ரஹ்மானின் இசையைப் பொறுத்தவரை தவமிருப்பதே வரம்தான் !---

    இருவருமே வணிக அளவில் பெரிய சாதனைகள் செய்தவர்கள்தான். ஆனால் மக்கள் மனம் என்ற மைதானத்தில் இந்த இருவரும் எந்த ஓரத்தில் இருப்பார்கள் என்பது ஒரு விவாதிக்கப்படவேண்டிய கேள்வி. இதை எழுதியவர் எண்பதுகளில் பிறந்தவர் என்பதால் இளையராஜா ரஹ்மான் என்ற இருவரைத்தாண்டி இவரால் சிந்திக்க முடியவில்லை என்று தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. //எண்பதுகளில் பிறந்தவர் என்பதால் இளையராஜா ரஹ்மான் என்ற இருவரைத்தாண்டி இவரால் சிந்திக்க முடியவில்லை என்று தோன்றுகிறது//
      இப்போது(ம்) இவர்களை தாண்டி யார் இருக்கிறார்கள் என்று சொல்லுங்களேன்.

      Delete
  9. இந்தப் பதிவு ஒரு ரசிகரின் ஆதங்கமாகவே படுகிறது. வெகு கவனமாகவே இளையராஜாவை இறக்கியும் ரகுமானை உயர்த்தியும் எழுதப்பட்டு இருக்கிறது. காரணம்? ரகுமானை உலகம் இறக்கி வைத்துள்ளது என்கிற ஒரு கண்ணோட்டத்தில் ஆதங்கத்தில் இவர் ரகுமான் என்கிற கோட்டை நீளப் படுத்தி இளையராஜா என்கிற கோட்டை சிறியதாக்கிவிட்டார்.

    *** ராஜாவின் இசையில் தவத்திற்கு வரம் கிடைத்திருக்கிறது . ரஹ்மானின் இசையைப் பொறுத்தவரை தவமிருப்பதே வரம்தான் !***

    மன்னிக்கவும்..இது சுத்தமான உளறல்!!! வரம் தவம்னு வார்த்தை ஜாலங்களைப்போட்டு எதையோ ஜோடிக்க நினைத்து என்னவோ சொல்கிறார்!!

    *******************************
    நாம் நாம் வாழும் உலகைப் பற்றிப் புரிதுகொள்ளணும்..

    எனக்கு என்ன தோணுதுனா ஒரு காலத்தில் எம் எஸ் வி இசைதான் "க்ளாசிக்" என்று விவாதித்து இருப்பார்கள். இளையராஜா இசை காலத்தால் அழிந்துவிடும் என்றும் விவாதித்து இருப்பார்கள்.

    20 ஆண்டுகள் கடந்த பிறகு..

    இன்றைய நிலையில், எம் எஸ் விக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, இளையராஜாவை எம் எஸ் வி இடத்தில் வைத்துவிட்டார்கள்..ரகுமானை அன்றைய இளையராஜா இடத்தில் வைத்துள்ளார்கள்..இளையராஜா இசை க்ளாசிக்காகவும், ரகுமான் இசை காலத்தால் அழியும் என்பதுபோல் ஒரு நிலையை உருவாக்கி.. ரகுமான் அபிமானிகளை.. இது போல் தவம், வரம் என்று அர்த்தமற்ற வாக்கியங்களை பேச வைத்துவிட்டார்கள்..

    ஆனால், இதுவும் வரும் காலத்தில மாறும்!

    இளையராஜாவுக்கும் ஓய்வு கொடுத்துவிட்டு ரகுமானின் இசையைக் காலத்தால் அழியாதது என்று பேசத்தான் போகிறார்கள். இதுதான் நாம் உலகம்! நம் மக்கள் இவர்கள்தான்! ரகுமான அனுதாபிகள் தவம் வரமென்று பேசுவதை விட்டுவிட்டுக் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். அவ்வளவுதான்!

    சுமாராக இவர்கள் ஆளுமைக்கு இடையில் 20 ஆண்டுகள் இடைவெளி இருக்கிறது..அதன் விளைவுதான் இதெல்லாம்..அதுவும் ஆஸ்கர் வென்றவர் என்கிற "க்ரிடிட்" பெற்றவர் ரகுமான்..பின்னாளில் இளையராஜாவை சிறிது இறக்கி ரகுமானை மேலே தூக்கி வைத்து கொண்டாடுவது மிகவும் இளகுவானது.

    ReplyDelete
    Replies
    1. //இளையராஜாவுக்கும் ஓய்வு கொடுத்துவிட்டு ரகுமானின் இசையைக் காலத்தால் அழியாதது என்று பேசத்தான் போகிறார்கள்//
      பண்பலை வானொலிகள் வாழும் வரை ராஜாவிற்கு ஓய்வு கொடுக்க மாட்டார்கள்.முடியாது.இரவு பத்து மணிக்கு மேல் ஒலிபரப்பாவது ராஜா அல்லது அவருக்கு முந்தைய காலத்து பாடல்களே

      Delete
  10. ***Seeni Mohan ”புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே” என்பவரையும் “ எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்பவரையும் எப்படி ஒப்பிட முடியும் ? முன்னது தன்னகங்காரம்; பின்னது தன்னடக்கம்.***

    மேலே உள்ளது முகநூலில் வந்த பின்னூட்டம்...


    புது ராகம் படைத்ததாலே நானும் இறைவனே னு எழுதியது, கவிஞர் வாலினு நினைக்கிறேன். இளையராஜா அவர் கையைப் பிடித்து எழுதச்சொல்லவில்லை! நம்ம சீனு மோஹன், அவர் வசதிக்காக "கவிஞர் ராஜா"வுக்கு அந்த க்ரிடிட்டை கொடுக்கிறார்- அறியாமையால்.

    இதுதான் இன்றைய முகநூல் நிலவரம்!

    அரைவேக்காடுகள் நிறைந்தது.

    ReplyDelete
    Replies
    1. //புது ராகம் படைத்ததாலே நானும் இறைவனே னு எழுதியது, கவிஞர் வாலினு நினைக்கிறேன்//
      ''மடை திறந்து தாவும் நதியலை நான்'' என்ற அந்த பாடலை எழுதியது வைரமுத்து. பாடல் இடம் பெற்ற திரைப்படம் நிழல்கள். வைரமுத்து பாடலாசிரியராய் அறிமுகமான முதல் படமிது.

      Delete
    2. சேக்காளி: நீங்க தவறுதலாக சொல்றீங்க. வலைதளங்களில் வைரமுத்துக்கு க்ரிடிட் கொடுத்து இருக்காங்க. ஆனால் அது வைரமுத்து எழுதிய பாடல் அல்ல. வாலியின் படைப்பு அது.

      வைரமுத்துவை வானளாவ புகழ்ந்தது, பொன் மாலைப் பொழுது பாடலுக்கு.... வானம் எனக்கொரு போதிமரம்னு அவர் எழுதியதற்கு..

      என்னிடம் நிழல்கள் டிவிடி இருக்கு. நீங்க "மடை திறந்து" வைரமுத்து பாடல்தான்னு ஒரு 1000 ரூபாய் "பெட்" கட்ட தயார்னா.. நான் தேடிப் பார்த்து, டிவிடில டவுள்செக் பண்ணி சொல்லி 1000 ரூபாய் உங்களிடம் வாங்கிக்கிறேன்.

      போட்டிக்கு (பெட் கட்ட) தயாரா?? :)

      Delete
    3. வருண் நீங்கள் சொன்னது சரிதான். விக்கிபீடியாவிடம் விசாரித்திருந்தாலே தெரிந்திருக்கும்.தவறாய் பின்னூட்டமிட்டதற்கு வருந்துகிறேன்.உறுதியாய் தெரியாமல் மறுப்பு தெரிவிக்க கூடாதென்றதொரு நல்ல படிப்பினை.
      //போட்டிக்கு (பெட் கட்ட) தயாரா//
      வாபஸ்.

      Delete
    4. இதில் வருத்தம் தெரிவிக்க ஒண்ணும் இல்லைங்க. வலைதளங்களில் இது மாதிரி நெறைய தவறான செய்திகளை எழுதி வைத்திருக்காங்க. நம்ம வலைதள சரக்கை எல்லாம் "அவசர அகராதி" யாக பயன்படுத்தும்போது, மற்றவர் செய்த தவறுக்கு நாமும் ஒரு விலை கொடுக்க வேண்டி வருகிறது. இதுபற்றி ஏற்கனவே இன்னொரு இடத்தில் விவாதித்ததால் எனக்கு இதுபற்றி கொஞ்சம் தெரியும். மற்றபடி இசை ஞானம் எல்லாம் எனக்கு உங்களவுக்கு கெடையாது என்பதே உண்மை. Take it easy! :-)

      Delete

    5. // இசை ஞானம் எல்லாம் எனக்கு உங்களவுக்கு//
      முகவரி தர்றேன். நேர்ல வந்தே அடிங்க.எதுக்கு இப்டில்லாம்.

      Delete
    6. வாலி தான் என்பதற்கு ஆதாரம்
      http://ilayaraja.forumms.net/t63p75-vinyl-lp-record-covers-speak-about-ir-pictures-details-thamizh

      Delete
  11. நண்பர் சேக்காளி,

    வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள். உங்களுக்கே தெரியும். இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது?

    ReplyDelete
    Replies
    1. //வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள்//
      முயற்சிக்கிறேன் காரிகன்.
      //உங்களுக்கே தெரியும்//
      எம்எஸ் விஸ்வநாதன் இசையமைத்துள்ள படங்கள் கிட்டதட்ட ஆயிரம் இருக்கும் என சொல்கிறார்கள்.
      ராஜா இசையமைத்துள்ள படங்கள் கிட்டதட்ட ஆயிரம்.(http://spicyonion.com/musicdirector/ilayaraja-movies-list/)
      தேவா இசையமைத்துள்ள படங்கள் கிட்டதட்ட ஐநூறு
      http://spicyonion.com/musicdirector/deva-movies-list/
      ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ள படங்கள் கிட்டதட்ட நூறு
      http://spicyonion.com/musicdirector/ar-rahman-movies-list/
      யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள படங்கள் கிட்டதட்ட நூறு
      http://spicyonion.com/musicdirector/yuvan-shankar-raja-movies-list/
      எனக்கு தெரிந்தது இதுதான்.
      //இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது?//

      Delete
  12. நண்பர் சேக்காளி,

    உங்கள் கணக்கெல்லாம் சரியா தவறா என்று சொல்லவரவில்லை. மேலும் எண்ணிக்கைதான் முக்கியம் என்று நான் கருதுவதில்லை. ஒரு சிறிய திருத்தம். நிழல்கள் படத்தின் மடை திறந்து தாவும் நதி அலை நான் பாடலை எழுதியது வைரமுத்து அல்ல. அது வாலிதான். வருண் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். வைரமுத்து எழுதியது இது ஒரு பொன் மாலைப் பொழுது என்ற பாடல்.

    ReplyDelete
    Replies
    1. //அது வாலிதான். வருண் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.//
      ஆம்.

      Delete
  13. ராஜா இன்னும் தாலாட்டுகின்றார் பின்னவர் காலம் நமக்கு வாழ்வின் தேடலில் போகின்றது இசை சுருதி சேர்க்குது இல்லை வழிகாட்டி ராஜா தான் எனக்கு.

    ReplyDelete

Post a Comment

வருக வருக