மதிப்பெண்களா சாதனைகளா? தோழர் ரபீக் அவர்களின் உரை ஒன்று


அமெரிக்க அதிபரின் பதவியேற்பு விழாவை, உலகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் ஆர்வமுடன் அவதானிக்கிறார்களோ இல்லையோ, ஆடை வடிவமைப்பாளர்கள் நேரிலோ அல்லது தொலைக்காட்சியின் வழியாகவோ பார்ப்பதற்கு குவிந்திருப்பார்கள். பார்வையைக் குவித்திருப்பார்கள்.


முதல் பெண்மணியான அதிபரின் மனைவியின் உடையின் வடிவமைப்பு மற்றும் அதனை வடிவமைத்த நிபுணர்பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வமே அதன் காரணம்.
2009ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில், முதல் பெண்மணியான மிச்செல் ஒபாமா அணிந்துவரும் உடைபற்றி, அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். பல்வேறு உலகப்புகழ் பெற்ற ஆடை வடிவமைப்பாளர்களின் தயாரிப்பில் உருவான பல ஆடைகள் அவரின் தேர்வுக்காகக் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றிரவு விழாவின் மேடையில் தோன்றும் வரையிலும் தேர்ந்தெடுத்த உடைபற்றிய தகவலை மிச்செல் ஒபாமா வெளியிடவில்லை.

பிறகு, அவர் அணிந்துவந்த ஆடையின் வடிவமைப்பிற்குச் சொந்தக்காரர் 27 வயதே ஆன ஜாஸன் வூ எனும் கலைஞர் என்று தெரிந்த பிறகு அனைவரும் வியந்தனர்.

திருமதி. ஒபாமா அணிந்திருந்த உடைபற்றி நமக்கு அக்கறையில்லை. ஆனால், 27 வயதில் உலகத்தில் உள்ள ’ஃபேஷன் டிசைனர்கள்’ அனைவரும் போற்றும்படியாக வளர்ந்திருக்கிறார் ஜாஸன். எப்படி? இந்த இளம் சாதனையாளரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது யார்? என்பதே நம் சிந்தனை. விரிவாகப் பார்ப்போம்!

அன்று OPEN DAY. அந்த ஐந்து வயது சிறுவன் மதிப்பெண் குறைவாக எடுக்கிறான் என்ற குற்றச்சாட்டு இல்லை. மாறாக, ”உங்கள் பையன் எப்பொழுது பார்த்தாலும் ஒரு பொம்மையினை வைத்துக் கொண்டு விளையாடுகிறான். அதற்கு உடை உடுத்துகிறான் பிறகு மாற்றுகிறான். பாடங்களைக் கவனிக்கத் தவறுவது மட்டுமன்றி அடுத்த சிறுவர்களின் கவனத்தையும் சிதறச் செய்கிறான்.” இவையே அந்தச் சிறுவனின் தாயிடம் ஆசிரியை சொன்ன முறையீடுகள். மேலும் ஒரு சிறுவன் பெண் பிள்ளைபோலப் பொம்மை வைத்து விளையாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே முதலில் இந்தப் பழக்கத்தை அவனிடமிருந்து நிறுத்துங்கள். படிப்பில் அதிகக் கவனம் செலுத்தும்படி செய்யுங்கள் என்று கட்டளையுமிட்டார்.

ஒரு சிறிய பையன் பொம்மைகளை வைத்து விளையாடுகிறான் என்பது ஒன்றும் குற்றமில்லைதான்; ஆனால், பள்ளிக்கூடத்திலிருந்து இதுபோலொரு எச்சரிக்கை வந்தால் நாம் என்ன செய்திருப்போம். உடனே இருக்கிற விளையாட்டுச் சாமான்களையெல்லாம் எடுத்துப் பரணில் போட்டிருப்போம். குழந்தை கண்ணில் படும் நேரமெல்லாம் “என்ன படித்தியா?, வீட்டுப்பாடம் செய்தாயா?” என்று மிரட்டும் பெற்றோராய் மாறியிருப்போம். புரியாத வயதிலேயே ’புரஃபெஷனல்’ படிப்பு பற்றியெல்லாம் பேச ஆரம்பித்திருப்போம். ”அந்தப் பையனைப் பார் முதல் ரேங்க் வாங்குகிறான், நீ இப்படி இருந்தால் எப்படி டாக்டர் ஆவது? கைநிறைய சம்பாதிப்பது??” என்று ஒப்பிட்டுப் புலம்பியிருப்போம். இயற்கையிலேயே துளிர்விடும் திறமைகளைக் கிள்ளி எறிந்திருப்போம். இல்லையா?

ஜாஸன் வூ என்ற அந்தத் தைவான் நாட்டுச் சிறுவனை அவனது தாய் அப்படியெதுவுமே சொல்லவில்லை. அவனிடம் இருந்த திறமையினைக் கண்டு ஆச்சர்யமடைந்திருக்கிறார் இந்தச் சிறு வயதிலேயே அவனிடமிருந்த ஆடை வடிவமைக்கும் திறன் கண்டு வியந்திருக்கிறார். நாமெல்லாம் செய்வதற்கு நேர்மாறாக, ஒரு மாணவனிடம் ஒளிந்திருக்கும் திறமையினைக் கண்டுகொள்ளாத பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதால் என்ன பயன் கிடைத்துவிடும்? என்று பள்ளிக்கூடத்திலிருந்து நிறுத்தினார். ஜாஸனுக்கு வீட்டிலேயே ஆரம்பக்கல்வி ஆரம்பமானது.

நம் போன்ற பெற்றோர்கள்போல் நினைத்திருந்தால் அவனையும் ஒரு மதிப்பெண் பெறும் இயந்திரமாக மாற்றியிருக்க முடியும் ஆனால், ஒரு சாதாரணத் தொழிலோ அல்லது துறையோ அதில் முழு ஈடுபாட்டுடன் செயல்படும்போது அத்துறையில் பிரகாசமாய் ஒளிர முடியும் என்று நம்பியவர் அவர், ஆகையினால் தன் ஒன்பது வயது மகனிடம் இருக்கும் தனித்திறமையினை மேம்படுத்தும் நோக்கில், சிறுவயதினருக்கு ’ஃபேஷன் டிசைன்’ கற்றுத்தரும் பள்ளியைத் தேடி, மகனுடன் கனடாவிற்கு குடிபெயர்கிறார். அங்கு முறையான பயிற்சி, தொழில்நுட்பம் பயிற்றுவிக்கப்படுகிறது. தலைசிறந்த ஆடை வடிவமைப்பாளர் என்ற பெயரும் புகழும் மேற்சொன்ன நிகழ்வின் மூலம் கிடைக்கிறது.

சரி, நம் எல்லோரினாலும் நாடு விட்டு நாடு சென்று பயிற்றுவிக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மைதான். ஆயினும், நம்மில் எத்துனை பேர் நம் குழந்தைகளின் திறன்களை உற்று நோக்கியிருக்கிறோம்? அவர்களின் சிந்தனைகளுக்குச் செவி கொடுத்திருக்கிறோம்? அவர்களிடம் இயற்கையாய் பொதிந்துள்ள திறமைகளை ஊக்குவித்திருக்கிறோம்?

நம்பிள்ளைகளைப் பற்றி பள்ளிகளில் தரும் Report மட்டுமே முழு மதிப்பீடுகள் அல்ல. ”எல்லோருமே அறிவாளிகள்தான். ஆனால் நீந்தக்கூடிய திறமை பெற்றிருக்கும் மீனைப் பிடித்து மரம் ஏறுவதற்குக் கற்றுக்கொடுப்பவன் முட்டாள்” என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொல்லியது போல யாருக்கு எந்தத் திறமையுண்டு என்பதறிந்து அவர்களை அவர்கள் வழி உயர்த்துவோம்!

பி.குதுபையில் நம் தமிழ்ச் சிறுவர்களுக்காக இயங்கும் தமிழ்த்துளிஅமைப்பின் சார்பாக நடைபெற்ற பொங்கல் விழாவில் பேச அழைத்தபொழுது(ஜனவரி 2013) பெற்றோர்கள் முன்பாகப் பேசியதன் சாரம் இது.

ரபீக் அவர்களின் உரை ...
அனுமதி பெற்ற பகிர்வு ...

Comments

  1. அருமையான பேச்சு அதிலும் ஐன்ஸ்டீன் சொன்ன உதாரணம் அடடா..
    திரு ரபீக் அவர்களின் இந்தப் பேச்சுப்பற்றிய உங்கள் பதிவை, துபையில் இருக்கும் என் மகளுக்கு அனுப்புகிறேன். நன்றியுடன் த.ம.ஒன்று

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணாத்தே ...
      நீங்கள் விமானத்தில் அல்லவா இருப்பீர்கள் ..
      எப்படிப் படித்தீர்கள்?

      Delete
    2. நன்றி அய்யா முத்துநிலவன் அவர்களே..

      Delete
  2. சிறப்பான பகிர்வு. குழந்தைகளின் திறமைகளை பெற்றோரும் கண்டறிவதில்லை. ஆசிரியர்களும் அறிவதில்லை ஜாசன் வூவின் தாய் மட்டும் விதி விலக்கு

    ReplyDelete
  3. நம்மில் எத்துனை பேர் நம் குழந்தைகளின் திறன்களை உற்று நோக்கியிருக்கிறோம்? அவர்களின் சிந்தனைகளுக்குச் செவி கொடுத்திருக்கிறோம்? அவர்களிடம் இயற்கையாய் பொதிந்துள்ள திறமைகளை ஊக்குவித்திருக்கிறோம்?

    நியாயமான கேள்வியே...

    ஜாஸன் வூ அவர்களுக்கு எமது பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணாத்தே..

      Delete
  4. மிக மிக அருமையான பகிர்வு! நண்பரே! இதைப் பற்றித்தான் நாமும் சொல்லி வருகின்றோம். ஆனால், மாற்றம் வரப்போவது எப்போது?! பெற்ரோர்கள் மாறவேண்டும். மாறினால் கல்வித்துறையும் மாறும். நல்ல பகிர்வு! ரஃபீக் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு. துளசிதரன் அவர்களே.

      Delete
  5. //நம் போன்ற பெற்றோர்கள்போல் நினைத்திருந்தால் அவனையும் ஒரு மதிப்பெண் பெறும் இயந்திரமாக மாற்றியிருக்க முடியும்//

    அருமையான பகிர்வு !!ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கும் அவரவர் திறமையை அறிந்து அந்த துறையை தெரிவு செய்ய வைப்பதே நல்லது ..(mofarahs talent was identified HIS TEACHER ஒரு PE டீச்சர்தான் இவரின் முன்னேற்றத்துக்கு முக்கிய காரணம் .இப்போ MOFARA ஒலிம்பிக் சாம்பியன் !!
    ஒரு பல்கலைகழக பேராசிரியை என்னிடம் கூறியது ..A லெவல்ஸ் முடித்து அவர் பல்கலைகழகத்தில்கம்ப்யூட்டர் படிப்புக்கு டாப் மார்க்ஸுடன் இந்திய இலங்கை மாணவர்கள் மட்டும் அதிகம் சேருவார்கலாம் ஆனால் ஒரு வருடம் கூட தாக்குபிடிக்க முடியாம அனைவரும் fail :( அவர்களுக்கு கவுன்சலிங் வைத்தபோது பெற்றோர் வற்புறுத்தல் காரணமாக இப்படிப்பை தேர்ந்தெடுத்ததாக சொல்வார்களாம் ..பாவம் தானே ..அவர் என்னை கேட்ட கேள்வி..//இந்திய பெற்றோர் எதற்கு பிள்ளைகளின் எதிர்காலத்தை முடிவு செய்கிறீர்கள் ?அவர்களை விடுங்க லெட் தெம் டிசைட் தெர் future !!..

    ReplyDelete
  6. பாராட்ட வேண்டிய தாய்...நமக்கு எங்க குழந்தைகள கவனிக்க நேரமிருக்கு ...ஓடுற ஓட்டத்துல..

    ReplyDelete
  7. அன்புள்ள அய்யா,

    மதிப்பெண்களா சாதனைகளா? தோழர் ரபீக் அவர்களின் உரையைப் படித்தேன்.
    ‘ நம் குழந்தைகளின் திறன்களை உற்று நோக்கியிருக்கிறோம்? அவர்களின் சிந்தனைகளுக்குச் செவி கொடுத்திருக்கிறோம்? அவர்களிடம் இயற்கையாய்ப் பொதிந்துள்ள திறமைகளை ஊக்குவித்திருக்கிறோமா? ’- என்றால் ‘இல்லை’என்பதே பதிலாக வருகிறது...!

    குழந்தைகளின் திறமையை அறிந்து ஊக்குவித்தால் அவர்கள் உயர்வதற்கு நல்ல வாய்ப்பாக அமையும் என்பது திண்ணம்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா மணவை ஜேம்ஸ் அவர்களே..

      Delete

Post a Comment

வருக வருக