வெயிலில் நனைந்த மழை

நூல் மகியுடன் ...:-)

கடந்த நிலா முற்றத்தில் எனது பிறந்தநாள் பரிசாக கிடைத்த கவிதைத்தொகுப்பு வெயிலில் நனைந்த மழை. கவிஞர்.ச.மணியின் கவிதைகள் இவை. 


மணியின் அசத்தல்  கவிதைகள் இந்த  தொகுப்பெங்கும் விரவியிருகின்றன. நூலுக்கு அணிசெய்கிறது மிக நேர்த்தியான ஒரு உரை கவிஞர் அறிவுமதியிடம் இருந்து. 

காக்கி சட்டைக்குள் பூத்த கவிமலர்கள் உண்மையில் வெகு அற்புதமாக இருக்கின்றன. கவிதைகள் குறித்து உரையாடுவதை விட அவற்றை அப்படியே உங்களுடன் பகிரவே எனக்கு விருப்பம்.. 

நீங்களும்தான் படிங்களேன் சில நறுக்குகளை
உருவாவதென்னவோ 
வெயிலால்தான் 
என்றாலும் 
மழைக்காலங்களில் மட்டுமே 
வந்துவிட்டுச் செல்கிறது 
வானவில் 
எனத் துவங்கும் முதல் கவிதையே ரசனைமிகு வாசித்தல் பயணத்திற்கு நம்மை தயார் செய்துவிடுகிறது! 
இன்னொரு கவிதையில்
மழையைத் தரிசிக்க விரும்புவர்கள் 
சேகரிக்கிறார்கள் 
குடைகளை 
என என்னை கேலி செய்கிறது. பணத்தை சேர்ப்பவர்களுக்கும் இது அப்படியே பொருந்தும்தானே.
நீயும் மழையும் என்கிற கவிதையில்
ஏதேனுமொரு மின்னலின் 
கிளைகளைப் பற்றிக் கொண்டாவது 
கீழிறங்கி விடுகிறது மழை
என விசுவல் ட்ரீட் கொடுக்கிறார்.
மிதக்கும் மேகங்கள் குறித்த “குறையேதும் இல்லை” ஒரு நகை விளைவிக்கும் வாழ்வியல் பாடம்.
எவ்வளவு 
மகத்தான நிலத்திற்கும் 
தேவைப்படுகிறது 
ஒரு சாதாரண மழை.

என உணர்தல் சொல்லும் பொழுது சிலரிடம் எழலாம் ஒரு பெருமூச்சு.

“ஏழ்மை” சொல்லும் வர்க்கம் செமை.
மழைக்கும் 
தேநீர்க் கோப்பைகளுக்குமான
நெருக்கத்தை 
உணரவியலாத மனிதர்கள்தாம் 
அறியப்படுகிறார்கள் 
ஏழைகள் என்று. 

எதிர்வரும்
மழைக்காலத்தின் பயன்பாட்டிற்கென்றே
பிரத்தியோகமாக தயாரிக்கப்படுகின்றன  
பணக்காரர்களின் 
தேநீர்க்கோப்பைகள்

பெய்துகொண்டிருக்கும் மழைக்காககூட 
காத்துக்கொண்டிருப்பதில்லை 
ஏழைகளின் 
தேநீர்க் குவளைகள் 
செயற்கை மழை எனும் கவிதையில் நம்மை அசைக்கும் இந்த வரிகளைப் பாருங்களேன்.

வெட்டப்பட்ட 
வரிசைப்பனைகளை நினைத்து 
வருதப்பட்டனவா பறவைகள் 
என்பதைத் தீர்மானிக்க 
குறைந்தபட்சம் 
இரண்டு இறக்கைகளாவது இருக்க வேண்டும் 
நமக்கு 

“மழைக் காவியம்” கவிதையின் ஆகச் சிறந்த வரிகள் இவை

மழையைப் பற்றிய 
ஓவியங்களில்
எப்படியாவது 
இடம்பிடித்துவிடுகின்றன 
குடைகள்.

ஆமா நூறு ரூபாய்களுக்கு இந்த தரத்தில் ஒரு நூலை வெளியிட இயலுமா என்ன? அட்டைப்படங்கள் புடைப்புச் சித்திரமாய் மின்னுகின்றன. கையில் வழவழக்கின்றன தாட்கள். கவிதைகளுக்கு இணையாக அச்சுத் தரமும் அசத்தல்.

பல்வேறு பணிகள் அரசுப் பணிகளுக்குப் பின்னர் தமிழக காவல்துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றிவரும் கவிஞர் அசத்தியிருக்கிறார். ரொம்பவே வித்யாசமான பதிப்பகம் இந்த கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறது. இடையன் இடைச்சி நூலகம்! கோவை இலக்கிய அமைப்புகளில் ஒன்று! ஐ.எஸ்.பி.என் எண்ணுடன் வந்திருகிறது கவிதைத் தொகுப்பு (9788191019926)

பதிப்பகத்தின் முழு முகவரி.
இடையன் இடைச்சி நூலகம்
கிருஷ்ணாநகர், நடுப்பட்டி கிராமம்,
பாப்பம்பட்டி, கோயம்புத்தூர். 641 016.
செல் எண்: 9842426598, 9677007177
ரூபாய் : 100
தொகுப்பை வழங்கிய கவிஞர் வைகறைக்கும் அய்யா முத்துநிலவனுக்கும் நன்றிகள்.

Comments

  1. அழகான கவிதைகள். இரவல் வாங்க விரைவில் வருகிறேன். மகியோடு நூல் தங்களின் ரசனையின் வெளிப்பாடு

    ReplyDelete
    Replies
    1. கொடுத்து அனுப்புகிறேன் அவசரமென்றால்

      Delete
  2. வந்து வாங்கிக் கொள்கிறேன் என மருமகள் கையில். என் மருமகளுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள். தாமத வாழ்த்துக்கு பொருத்தருள வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாண்டியன்

      Delete
  3. மகிக்கு என்இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
    ரசிக்க வைக்கும் அழகான குட்டிக் கவிதைகள். பாண்டியனுக்கு மட்டும் தானா எனக்கு இல்லையா நானும் வந்து வாங்கிக் கொள்கிறேன். என்ன சிரிப்பு எங்கே வரப் போகிறேன் என்று தானே சரி சரி பார்க்கலாம். ஆமா இந்த அம்முகுட்டிக்கு என்னாச்சு வலைப்பக்கமே வருவதில்லையே. ம்..ம்..ம் நலம் தானே குட்டிக் கவிதையோடு சீக்கிரம் ஆஜராகச் சொல்லுங்கள். ok வா பதிவுக்கு நன்றி ! தொடர வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அம்முக்குட்டி வந்துட்டாங்களே..

      Delete
  4. எடுத்துக் காட்டப்பட்டிருக்கும் கவிதைகள் அனைத்தும் நன்று. வாசிக்கத் தூண்டும் பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் திரு வெங்கட்
      வருகைக்கு நன்றி

      Delete
  5. ஒவ்வொரு கவிதையும் ரசிக்க வைக்கிறது! நூல் பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் ஸ்வாமிகள்
      உங்கள் குறும்பாக்களை நூல்வடிவில் பார்க்க ஆசை

      Delete
  6. நான் ரசித்த வரிகள் –
    // ஏதேனுமொரு மின்னலின்
    கிளைகளைப் பற்றிக் கொண்டாவது
    கீழிறங்கி விடுகிறது மழை //

    த.ம.3

    ReplyDelete
    Replies
    1. ரசனைக்கு நன்றி அய்யா

      Delete

Post a Comment

வருக வருக