முதல் ஒலிம்பிக் பதக்கம் first Olympic Medal

திரு.ஷாஜகான் அவர்களின் முகநூல் இற்றை ஒன்று
ஜாதவ் முதல் ஒலிம்பிக் பதக்கம் 

வெற்றிமீது வெற்றி வந்து உன்னைச் சேரும்
வாங்கி வந்த பெருமைகளும் உன்னையே சேரும்.
நான் உள்பட கிட்டத்தட்ட எல்லாரும் சிந்து சிந்து என்று புகழ்பாடிக்கொண்டிருக்கிறோம். ஏதோ டிவியும் சமூக ஊடகங்களும் இருப்பதால் சிந்துவும் சாக்ஷியும் தெரிய வந்தார்கள், போற்றிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் நமக்கு கிரிக்கெட் தவிர இதர விளையாட்டுகள் குறித்து அல்லது விளையாட்டு வீரர்கள் குறித்து எவ்வளவு தெரியும்?



நம்மில் பலரும் வெற்றி பெறும் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் உண்மை இல்லையா...?
சுமார் 25 ஆண்டுகள் வானொலியில் மாதம் நான்குமுறை அல்லது மாதமிருமுறை ஆட்டக்களம் என்ற வானொலி நிகழ்ச்சியை வழங்கி வந்தேன். (ஆறு மாதங்களாக நானே அதிலிருந்து விலகிக் கொண்டேன்.) சுமார் பத்தாண்டுகளின் நிகழ்ச்சிகளின் தொகுப்பை கணினியில் இப்போதும் வைத்திருக்கிறேன். நான் வழங்கிய நிகழ்ச்சிகளில் சாக்ஷியின் பெயர் ஒரே ஒருமுறைதான் குறிப்பிட்டிருக்கிறேன். சிந்துவைப்பற்றி நிறையவே குறிப்பிட்டதுண்டு. (நேற்றும்கூட அதிலிருந்து ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்.)
சிந்துவோ, சாக்ஷியோ, தீபாவோ வென்றதற்காகப் பெருமை அடையும் தகுதி நமக்கு நிச்சயம் கிடையாது. அரசுகளுக்கும் விளையாட்டுக் கூட்டமைப்புகளுக்கும்கூட கிடையாது. அவர்கள் வென்றது அவர்களுடைய சுய முயற்சியால்.
வானொலி நிகழ்ச்சிகளுக்காக ஏராளமான விளையாட்டு வீரர்களைப் பற்றிய தகவல்களைத் தொகுத்து வழங்கியிருக்கிறேன். அதில் ஒரு தகவலை இப்போது இங்கே வழங்குவது பொருத்தமாக இருக்கும். 60 ஆண்டுகளில் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடவில்லை என்பது புரியும்.
1928 முதல் 1980 வரை 11 முறை ஹாக்கியில் பதக்கம் வென்றது தவிர, இந்தியர்கள் ஒலிம்பிக்கில் எத்தனை பதக்கங்களை வென்றிருக்கிறார்கள்? சுதந்திர இந்தியாவின் முதல் பதக்கம் பெற்றவர் யார் தெரியுமா?
இந்தியாவுக்கு முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்று தந்தவர் கசபா ஜாதவ். 1926 ஜனவரி 15ஆம் தேதி பிறந்தவர். மகாராஷ்டிர மாநிலத்தின் சதாரா மாவடத்தில் கோலேஷ்வர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். அவருடைய தந்தையும் மல்யுத்த வீரர். தந்தையிடமிருந்து பயிற்சி பெற்று முன்னேறியவர் கசபா ஜாதவ.
1948 ஒலிம்பிக்கில் ஆறாம் இடத்தைப் பிடித்தார். அப்போது அதுவே பெரிய விஷயம். அடுத்த நான்கு ஆண்டுகள் கடுமையாகப் பயிற்சி செய்தார். 1952 ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்யப்படவே இல்லை. தேர்வுக் குழுவினர் வேண்டுமென்றே அவருக்கு 1 புள்ளி குறைத்துப்போட்டு வஞ்சகம் செய்தனர்.
அதிர்ஷ்டவசமாக, பாடியாலா மகாராஜாவின் ஆதரவால் ஜாதவ் ஒலிம்பிக்கில் பஙகேற்றார். ஒலிம்பிக்கில் பங்கேற்கச் செல்லக்கூட பணமில்லாமல் தவித்தார். கிராமத்தினரிடம் பண உதவிகேட்டு அலைந்தனர். மாநில அரசிடம் எவ்வளவோ கெஞ்சியும் உதவி ஏதும் கிடைக்கவில்லை. (போட்டி முடிஞ்சு திரும்பி வந்தப்புறம் பார்க்கலாம் என்றாராம் முதல்வர் மொரார்ஜி தேசாய்!)
கடைசியில், ஜாதவ் படித்த கல்லூரியின் முதல்வர் ராஜாராம், தன் வீட்டை அடகுவைத்து 7000 ரூபாய் ஏற்பாடு செய்து கொடுத்தார். ஜாதவ் ஒலிம்பிக் பதக்கத்துடன் திரும்பி வந்தபோது 151 மாட்டுவண்டிகளின் ஊர்வலத்துடன் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. பதக்கம் வென்றதால் பாராட்டுக் கிடைத்த்து. இல்லையேல் அப்போதே மறக்கப்பட்டிருப்பார்.
ஒலிம்பிக் பதக்கத்துடன் திரும்பியபிறகு பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பணம் திரட்டி, தனக்கு உதவி செய்த கல்லூரி முதல்வர் வீட்டை அடமானத்திலிருந்து திரும்புவதற்காகப் பணத்தைத் திருப்பிக் கொடுத்தார்.
1955இல் காவல்துறையில் வேலை கிடைத்த்து. தேசிய அளவில் மல்யுத்தப் பயிற்சியாளராகவும் இருந்தார். 27 ஆண்டுகள் காவல்துறையில் வேலை செய்தாலும், ஒருமுறைகூட பதவி உயர்வு கிடைக்கவில்லை. அவருடைய சகாக்களின் வற்புறுத்தலால், பணி ஓய்வு பெறுவதற்கு ஆறுமாதங்கள் இருக்கும்போது அசிஸ்டன்ட் கமிஷனர் பதவி உயர்வு கிடைத்தது. பணி ஓய்வுக்குப் பிறகு, ஓய்வூதியம் பெறவும் பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்த்து. விளையாட்டுக் கூட்டமைப்பு அவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை. கடைசி காலத்தில் வறுமையில்தான் வாழ்ந்தார்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் ஜாதவுக்கு மட்டும் பத்ம விருது வழங்கப்படவே இல்லை. 1984இல் சாலைவிபத்தில் அவர் இறந்தபிறகு, 2001இல் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. இந்திய விளையாட்டுத்துறை, விளையாட்டுக் கூட்டமைப்புகள், அரசுகள் எப்படிப்பட்டவை என்பதற்கு ஜாதவின் வாழ்க்கை ஓர் உதாரணம்.
ஒலிம்பிக் குழுவில் பயணம் செய்த பயிற்சியாளர்களும் அதிகாரிகளும் ஷாப்பிங் செய்வதில்தான் குறியாக இருந்தார்கள் என்று குற்றம் சாட்டினார் ஜாதவ்.
நாம அப்பவே அப்படியாக்கும்.
மறக்கப்பட்ட ஜாதவைத் தேடிச்சென்ற பயணம் குறித்த ஆங்கிலக் கட்டுரைக்கான இணைப்பு முதல் கமென்ட்டில்.

Comments

  1. சாதித்த ஜாதவுக்கு இந்த நிலையா ?ஒரு வேளை ,யாதவ் என்றால் ஜாதிக்காரர்களின் ஆதரவு கிடைத்து இருக்குமோ :)

    ReplyDelete
  2. அப்பவும் எப்பவும் இதே நிலை தான் நம் நாட்டில்... என்று மாறுவோம்....

    ReplyDelete
  3. NICE INFORMATION. In india very difficult to come up sports peopele.
    https://youtu.be/arsD2jBplLc

    ReplyDelete
  4. அறிந்துகொள்ள வேண்டிய அற்புத தகவல்.
    பகிர்ந்தமைக்கு நன்றி!
    த ம 3

    ReplyDelete
  5. அப்பவே இப்படித்தானா? பதை பதைக்கிறது மனசு!

    ReplyDelete
  6. அன்னைக்கே இப்படி இருந்த நாம் இன்னைக்கு தண்ணி கொடுத்திருக்க மாட்டோம் என்பதே உண்மை.... வீராங்கனைகளுக்குள் ஒற்றுமையில்லை...

    ஜாதவ் போல் பலருக்கு வாய்ப்புக் கிடைப்பது குதிரைக்கொம்புதான் நம் இந்தியாவில்...

    தகவல் அறியத்தந்தீர்கள் அண்ணா.

    ReplyDelete
  7. அருமையான தகவல். நம் நாட்டின் வேதனை நிறைந்த பக்கங்கள்

    ReplyDelete

Post a Comment

வருக வருக