டோன்ட் பரீத் மூச்சு விடாதே



அரிதினும்  அரிதான சந்தர்பங்களில் ஒரு சினிமாவின்  சக்தியை உணர முடியும். அது  கலை, ஒரு  பொழுதுபோக்கு என்பதைக் கடந்து அரங்கில்  இருப்பவர்களின்  உணர்வுகளை கிளர்ந்து, ஆகர்சித்து, கரைத்து நெகிழ வைக்கும் அதன்  சக்தியை திரையரங்கில் உணர்வது அரிது.


தமிழ் படங்களைப்  பொறுத்தவரை  தனிமனித ஆராதனை அதிகமாக இருக்கும். ரசிகர்களின் பிரியத்திற்குரிய நாயகன் திரையில் வந்தவுடன்  ஆர்பரிப்பது  நமது கலாச்சாரம்.

நமது திரைப்படங்கள் கதையின், காட்சியின் மூலம் ஆகர்சிப்பதும்,  அசத்துவதும் அரிது! 

ஹாலிவுட்கார்கள் சினிமா ஊடகத்தின் அனைத்து பிரிவுகளையும் பிரித்து மேய்பவர்கள். தற்போது திரைக்கு வந்திருக்கும் டோன்ட் பிரீத் அந்த மாதிரி ஒரு படம். வெறும் நான்கு கதாபாத்திரங்கள். அதில் ஒரு கதாபாத்திரம் விழித்திறன் இழந்தவர். இந்த கதா பாத்திரங்களை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம். ஒரு வெற்றிப் படத்தை தந்திருக்கிறார் இயக்குனர் ஃபெட் ஆல்வார்ஸ். அதுவும் திகில் திக் திக் என.

மணி, அலெக்ஸ், ராக்கி என மூன்று பேர் அடங்கிய ஒரு குழு, இதில் ராக்கி ஒரு உடைந்த குடும்பத்தின், குடிகார அம்மாவின் பெண். அலெக்ஸ்சின் அப்பா ஒரு பாதுகாப்பு நிறுவனத்தில் பணிபுரிகிறார். தனது பாதுகாப்பின் கீழ் உள்ள வீடுகளின் மாற்றுச் சாவியினை தனது அலுவலகத்தில் வைத்திருக்கிறார். நல்ல வீடுகளாய்ப் பார்த்து அவற்றின் மாற்று சாவியினை அப்பாவுக்கு தெரியாமல் அலெக்ஸ் எடுத்து வர  அந்த வீடுகளில் பத்தாயிரம் ரூபாய்க்கு குறைவான பொருட்களை திருடுவதே இந்தக் குழுவின் வேலை. (பத்தாயிரம் ரூபாய்க்கு கீழே என்றால் தண்டனைகள் குறைவு).

இப்படி அவர்கள் வீடுகளைக் குறிவைத்து பொருட்களை திருடி அண்டர்கிரவுண்ட் மார்கெட்டில் விற்கிறார்கள்.  அங்கே இவர்களுக்கு எதிர்பார்த்த பணம் கிடைக்கவில்லை. அண்டர்கிரவுண்ட் தரகர் போய்  பணத்தை திருடுங்க என்கிறான்.
குழுவின் தலை மணி ஊருக்கு ஒதுக்குப்புறமாய் வாழும் ஒரு ரிட்டயர்ட் மிலிட்டரிக்காரனின் வீட்டைக் குறிவைக்கிறான். அக்கம் பக்கம் ஆளே இல்லாத காட்டில் இருக்கும் கண் தெரியாத அந்தக் கிழவனின் வீட்டுக்கு  மாற்று சாவி கையில் இருக்கிறது. வேறு என்ன வேண்டும்? 

ஒரு நல்ல நாள் பார்த்து மிலிட்டரியின் வீட்டுக்கு போகிறார்கள். மாற்று சாவியுடன் இரவு இரண்டுமணிக்கு வாசலுக்குப் போனால் அங்கே நான்கு பூட்டுகள் இவர்களை வரவேற்கிறது. பக்கத்தில் புகுந்து பின்வாசலுக்கு போகலாம் என்றால் அங்கே ஒரு கொடூரமான கருப்பு நாய் காத்திருக்கிறது. அதற்கு மயக்க மருந்தைக் கொடுத்து வீட்டின் பின்கதவை அடைகிறது குழு.

என்ன செய்தாலும் கதவை திறக்க முடியவில்லை. உருவத்தில் சின்னவளாக இருக்கும் பெண் ஒரு சிறிய கண்ணாடி ஜன்னலை உடைத்து வீடிற்குள் போகிறாள். என்ன ஆச்சோ என்ற பதற்றத்திற்கு பிறகு வீட்டின் பின்கதவை திறந்து நண்பர்களை உள்ளே அழைக்கிறாள்.

மிலிட்டரியின் மகளை கோடீஸ்வரி ஒருத்தி கார் ஏற்றிக் கொன்றுவிட இவருக்கு செட்டில்மென்டாக நான்கு கோடிரூபாய் கிடைத்திருக்கும் விசயத்தை பார்த்த பின்னரே வீட்டிற்கு வருகிறது குழு. வீட்டில் தனியறையில் உறங்கும் அந்தக் கண் தெரியாத கிழவனின் அறையில் க்ளோரபார்ம் கேன் ஒன்றை வைத்து விட்டு ரிலாக்ஸ்ஸா வீட்டை துளாவுகிறார்கள். ஒரு கதவின் பெரும் பூட்டு அந்த அறைக்குள் பணம் இருக்கும் என்கிற நம்பிக்கையை இவர்களுக்குத் தருகிறது.

குழுவின் தலை முரட்டு மணியிடம்  துப்பாக்கியைப் பார்த்தவுடன் சாவி பார்டி அலெக்ஸ் நான்  வரல இந்த விளையாட்டுக்கு என்று சொல்லி அப்பீட்டாகிறான்.  

வந்தது வந்துட்டோம்  வேலையை முடிப்போம் என கதவை நெம்பித் திறக்கும் பொழுது யாரு என்கிற குறள் கேட்டு மிரள்கிறார்கள் இருவரும். 

பார்வையற்ற கிழவன்! 

எப்படி குளோரோபார்ம் நெடியில் இருந்து மீண்டு வந்தான் என்றே தெரியாமல் திகைக்க மணி துப்பாக்கியினை எடுத்து அவனை மிரட்டுகிறான். ஒருமுறை துப்பாக்கியினை கூரையில் சுட்டுகாண்பிக்கிறான். மெல்ல முன்னேறும் கிழவன் தகர்கப்பட்டக் கதைவை கையால் தடவி உணர்கிறான். மேலும் முன்னேறுகிறான். எதிர்பாரா ஒரு தருணத்தில் மணியின் துப்பாக்கியைப் பற்றி அவனைச் சுவற்றோடு அழுத்துகிறான். எத்துனை பேர் வந்திருக்கீங்க என்கிறான் கிழவன். பக்கத்தில் நிற்கும் ராக்கியை பார்த்துக் கொண்டே ஒருத்தன்தான் வந்திருக்கிறேன் என்கிறான். மணியின் தாடையில் துப்பாக்கியினை வைத்து வெடிக்கிறான் கிழவன். 

அப்போது துவங்கும் திகில் திக் திக் படம் முடியும் தருணம் வரை தொடர்கிறது. வெறும் நான்கு கதா பாத்திரங்களை வைத்துக் கொண்டு இந்த மிரட்டு மிரட்ட முடியும் என்பதை நம்புவதே கடினம். கண்தெரியாத கிழவன் என்ன செய்ய முடியும் என்கிற கேள்விக்கு குரூரமான பதில்களை, கொலைகள் மூலம் காட்டுகிறான் கிழவன். 

தியேட்டரில் நிலவும் மயான அமைதி படத்தின் வெற்றியை சொல்கிறது. நிச்சயம் ஹாரர், திரில்லர் பட ரசிகர்கள் மிஸ் செய்யக் கூடாத படம் இது. 

ஒரு கதை, திரைப்படம், எல்லோரும் நடிக்கிறார்கள் தானே என்ற உணர்வைஎல்லாம் கழட்டிப் போட வைத்துவிட்டு ஆடியன்ஸ் மூச்சு விடாமல் இருப்பதை பார்க்க வேண்டும் என்றால் படம் நடக்கும் தியேட்டருக்கு ஒரு தபா போங்க. நல்லா மூச்சு வாங்கிட்டு தியேட்டருக்குள் போவது உசிதம். 

கிழவனாக நடித்திருக்கும் ஸ்டீபன் லாங், அவதார் வில்லனாக வந்து நம்மை மிரட்டினாரே அவரே தான். இந்தப் படம் தலைக்கு பல்வேறு விருதுகளை வாங்கித் தரும். பார்ப்போம் மலர்த்தருவின் யூகம் கிளிக்காவுதான்னு.

அப்புறம் இன்னொரு விசயம் படம் இன்னொரு பாகத்திற்கான சாத்தியத்துடன் முடிந்திருக்கிறது! வரலாம் வராமலும் போகலாம். 

சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் அதையெல்லாம் யார் பார்க்கிறா, வெளியில் வந்து மூச்சு இழுத்து வெளியில் விட்டு பதட்டம் தனிக்கிறது கூட்டம்!

அன்பன் 
மது 

Comments

  1. பார்க்கனும் போல இருக்கு...வாய்ப்பு கிடைக்கும்னு நம்புறேன்...பா

    ReplyDelete
  2. நலதொரு அறிமுகம். நன்றி மது.

    ReplyDelete
  3. நம்ம கோலிவுட்காரங்க உல்டா பண்ணி எடுக்காம ,இன்னுமா விட்டு வச்சிருக்காங்க :)

    ReplyDelete
  4. படம் பார்த்த பீலிங் வருதுப்பா. விமர்சனத்திற்கு பின் படம் பார்ப்பது நன்றாகப் புரியும்னு நினைக்கிறேன்.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. பார்க்கணும்ன்னு ஆசையை கிளப்பிய விளம்பரம்...
    டோரண்டிலோ யூடிப்பிலோ வந்தால்தான் சாத்தியம்...

    ReplyDelete
  6. ada அப்படியா சங்கதி இதோ இப்போவே பார்க்கிறேன் ( வேறெங்க கணனியில் தான் ) நல்ல விமர்சனம் வாழ்த்துகள்

    ReplyDelete
  7. பார்க்கத் தூண்டும் விமர்சனம் . பாராட்டுகள்

    ReplyDelete
  8. நல்ல விமர்சனம்.

    ReplyDelete

Post a Comment

வருக வருக