மெமரி கார்ட்

நிகழ்வுகள் நினைவுகள் நகரும் நாட்கள்

நிகழ்வு ஒன்று 
செயத்தக்க  செய்க வெள்ளி விழா நிகழ்வு !

தன்னை அறிதல், இலக்கமைத்தல், தொடர்பாற்றல் மேம்பாடு, கற்றல் திறன்கள் மற்றும் நினைவாற்றல் கருவிகள்  என  மாணவர்களுக்கு தேவையான வாழ்வியல்  திறன் பயிற்சிகளை கடந்த  ஆண்டு  புத்தாம்பூர் மேல் நிலைப் பள்ளியில் செவன்த் சென்ஸ் நிறுவனம் துவங்கியது நேற்று நடந்தது போல இருக்கிறது! 


அதற்குள் இருபத்தி ஐந்து நிகழ்வுகள் !

எனது பயிற்சி துறை குருநாதர்களில் ஒருவரான திரு ஆர்.ஆர். கணேசன் அவர்களின் செவன்த் சென்ஸ் மனிதவள பயிற்சி நிறுவனம், செந்தூரன் கல்லூரியுடன்  இணைந்து அரசுப் பள்ளி, அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கு இந்தப் பயிற்சியை துவங்க திட்டமிட்ட பொழுது குருநாதரின் கட்டளைக்கு இணங்கி அடியேனும் இந்தப் பயணத்தில் இணைந்தேன்! 

காரைக்குடியைச் சேர்ந்த ஏ.ஆர். தேவராஜன், சண்முகம்,  மாபெரும் பயிற்சியாளர்களில்  ஒருவரான, திருப்பத்தூர் மதகுப் பட்டியைச் சேர்ந்த பேரா.ராமநாதன் அவர்கள், செந்தூரன் கல்லூரியைச் சேர்ந்த சந்தோஷ் என புதிய படை ஒன்று உருவானது. 

அழைக்கும் பள்ளிகளுக்கெல்லாம் விடுமுறை நாளான சனிக் கிழமை அன்று இந்தப் பயிற்சி தரப்பட்டது. விடுமுறை நாளென்றும் பார்க்காது மாணவர் நலன் கருதி பள்ளிக்கு வருகைதந்து அவர்களை செம்மைப்படுத்தி பயிற்சிக்கு அனுப்பிய நல்லாசிரியர்கள் நிறைந்தது புதுகை. 

உண்மையில் இது எனக்கு ஒரு நல்ல அனுபவம். மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களை பார்ப்பதும் அவர்களின் கற்றல் நுட்பங்களை அறிவதும் இதனால் சாத்தியமாகிறது.  

இந்த சனிக் கிழமை 03/08/2016 அன்று நிகழ்வு என்றதும் மிஸ்  செய்யக் கூடாத நிகழ்வு கட்டாயம் போயே ஆகவேண்டும் என்று முடிவு செய்தேன். 

குலபதி பாலையா பள்ளி புதுகைக்கு பல நட்சத்திர ஆளுமைகளை தந்த பள்ளி என்பது மட்டுமே தெரியும். ஆனால் உள்ளே நுழைந்ததும்தான் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார் பயின்ற பள்ளி என்ற அறிவிப்பை பார்த்ததும் ஒரு வாவ். 

தொடர்ந்து இனிய நண்பர் பள்ளியின் தலைமை ஆசிரியர்  திரு.பிரகாஷ் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது வானிலை புகழ் ரமணன், யோகா குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், கூகிள் நிறுவனத்தின் அதி முக்கியப் பணியில் இருக்கும் ஒரு மென்பொறியாளர் என பல்வேறு நட்சத்திர ஆளுமைகளை வளர்த்தெடுத்த பள்ளி என்பதை சொன்னார். செந்தூரன் கல்லூரியின் முதன்மைச் செயல் அலுவலர் திரு.ஏ.வி.எம்.எஸ். கார்த்திக் அவர்கள் இந்தப் பள்ளியில்தான் பயின்றார் என்பதை மேடையில் நினைவு கூர்ந்தார். 

வெள்ளி விழா நிகழ்வு மிகச் சரியான பள்ளியில்தான் நடக்கிறது என்கிற மகிழ்வு தலைமைப் பயிற்சியாளர் திரு.ஆர்.ஆர்.ஜி அவர்களுக்கு வந்துவிட்டது. பள்ளியின் தாளாளர்கள் இருவருமே மிக எளிமையாக பழகினார்கள். 

முதல் முறையாக மாணவர்கள் அமரும் அதே பெஞ்சில் அவர்களோடு  ஆசிரியப் பெருந்தகைகள் சிலரும் அமர்ந்து பயிற்சியினை கவனித்தார்கள். 

இனிமையான நினைவுகளில் ஒன்றாக மாறிவிட்டது இந்த நாள். 

நிகழ்வு இரண்டு

எனது பள்ளித் தோழரும், இன்றைய எங்கள் குடியிருப்பு பகுதியின் நலம் விரும்பியுமான திரு. பெல் அவர்கள் அழைத்து ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

நமது பகுதிக்கு நூலகம் ஒன்று வருகிறது நூற்றி நான்கு புரவலர்கள் இருந்தால் அது கிளை நூலகமாக தரமுயர்த்தப்படும் என்றார். கிட்டத்தட்ட நான்காயிரம் வீடுகள் உள்ள பகுதி இது. இதற்கு தேவையான நிதியினை இங்கிருந்தேதானே திரட்ட வேண்டும்!

இருப்பினும் நிலவன் அண்ணாத்தேவிடம் கேட்டேன். வாங்கிக்கோ என்றார். கவிஞர் கீதாவும் அவர் பங்கையும் தர முனைவர் துரைக் குமரனும் இணைந்தார். இன்னும் பல நல்ல உள்ளங்கள்  நிதி வழங்க முன்வந்திருகிறார்கள். பணிகள் தொடர்கின்றன.

கடந்த வாரம்தான் வீதிக் கூட்டத்தில் ஒரு இயல்பான பின்னூட்டத்தில் தமிழ் ஆசிரியர்கள் அவர்களும் வாசிப்பை விரிவு செய்துகொள்ள மாட்டார்கள் மாணவர்களையும் செய்ய விடமாட்டார்கள் என்றது நினைவில் வந்து சிரிப்பை வரவழைத்து.

ஆம், நூலக நிதி வழங்கிய அனைவருமே தமிழ் ஆசிரியர்கள்தான்!  விதிவிலக்குகள் மட்டுமே மனசுக்கு நெருக்கமாக இருக்கிறார்கள். நன்றிகள் அவர்களுக்கு.

நிகழ்வு மூன்று

புதுகை மாவட்டத்தில் மச்சுவாடி என்றோர் பகுதி உண்டு. இன்று நீங்கள் அங்கே சென்றீர்கள் என்றால் பல ஹெக்டருக்கு விரிந்த யூக்லிப்டஸ் காடுகள்தான் உங்களை வரவேற்கும். ஆனால் விடுதலைக்கு சில தசாப்தங்கள் முன்பு வரை அது வன விலங்குகள் நடமாடிய காட்டுப் பகுதி.

யாருமே இன்று நம்ப மாட்டார்கள். புலியும் சிங்கமும் திரிந்த இடத்தில் இன்று தைலமரக் காடு! புதுகையை அழிக்கும் இந்தக்காட்டை திருத்தி மரபுசார் வனமாக மாற்ற நம்மாழ்வார் இயற்கை நலவாழ்வுக் குழு முன்கை எடுத்திருக்கிறது.

அன்பு அண்ணன் பழ.குமரேசன், மணிகண்டன், புதுகை செல்வா மற்றும் பல்வேறு தன்னர்வலர்களும் இணைந்து இந்த பணியைச் செய்திருகிறார்கள்.

பல ஆண்டுகள் அரசிடம் வேண்டியும், நீதிமன்றமே உத்தரவிட்டும் மாறாத நிலை இனி மாற வேண்டும் என்றால் தேவை மக்கள் விழிப்புணர்வு. இந்த இலக்கை நோக்கிய முதல் அடி இந்தக் குறும்படம்.

எங்கள் நிலம் என்கிற தலைப்பில் வெளிவந்திருக்கும் இந்தக் குறும்படம் இலக்கை சரியாக அடைந்தால் சரிதான்.

நிகழ்வு நான்கு.

04/09/2016 அன்று  ஆதிகாலத்து அலங்கார மாளிகை புதுகைகீதம் ஒன்றை வெளியிட்டது. அழைப்பு வந்திருந்தாலும் அடியேன் பல்வேறு சொந்த அலுவல்களில் இருந்ததால் போகவேண்டாம் என்றுதான் இருந்தேன்.

திடீரென ஓர் குறும்செய்தி, ஆறுமணிக்கு நகர்மன்றம் வா!

அண்ணன் தங்கம் மூர்த்தி, பிறகு போய்த்தானே ஆகவேண்டும்?

நறுக்குதெரித்தார்  போல் நிகழ்வு, சரியாக ஆரம்பித்து சரியாக முடிந்தது.

ஐடியா ப்ளஸ் வரதராஜன்  அவர்களின் இயக்கத்தில், கார்த்தியின் இசையில், கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் வரிகளில், மகேசின் பறவைப் பார்வை படப்பிடிப்பில் அசத்தலாக வந்திருக்கிறது கீதம்.

குழுவினருக்கும் தயாரிப்பாளரான ஆதிகாலத்து அலங்கார மாளிகைக்கும் நன்றிகள். வாழ்த்துகள்.

அன்பன்
மது

Comments

  1. மீட்டல் நன்று

    ReplyDelete
  2. மீட்டல் தொடர வாழ்த்துகள் !

    ReplyDelete
  3. நன்று. தொடருங்கள் தோழர்....

    ReplyDelete
  4. நல்ல விடயம், செய்திகள்...மீட்டல் தொடர வாழ்த்துகள்

    ReplyDelete

Post a Comment

வருக வருக