ஆதார் எண் , சிம்கார்ட் இணைப்பு மோசடி 1.33 லட்சம் இழந்த நண்பர் -ஹரியின் கட்டுரை

ஹரிஹரசுதன்


நேர்த்தியான கட்டுரைகள் இப்போது வலைப்பூக்களில் மட்டுமல்ல, முகநூலிலும் வாசிக்கக் கிடைக்கின்றன.

வாசிக்கும்பொழுதே பகிர்வது சுலபம் முகநூலில். வலைப்பூவில் அப்படியல்ல! 

ஹரிஹரசுதன் தங்கவேலு இணையம் சார் விழிப்புணர்வுக் கட்டுரைகள் தொடர்ந்து எழுதிவருகிறார். 

சைபர் கிரைம் மூலம் சரியான நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறார். 

ஹரியின் விழிப்புணர்வு கட்டுரை ஒன்று உங்கள் பார்வைக்காக. 

ஹரியின் முகநூல் இணைப்பு 


உங்கள் ஆதார் எண்ணை உங்கள் மொபைல் நம்பரோடு இணைத்து விட்டீர்களா என்ற போர்வையில் ஒரு மாஸ்டர் மைண்ட் மோசடியை நிகழ்த்தி, சுமார் 1.30 லட்சத்தை ஒரு வாலிபரின் ICICI சேலரி அக்கவுண்டில் இருந்து திருடியிருக்கிறார்கள், இதற்கும் அந்த பட்டதாரி வாலிபர் சமீபத்திய பின் நம்பர் கேட்கும் மோசடிகள், க்ரெடிட் கார்டு மோசடிகள் எல்லாவற்றையும் தெரிந்து மிக கவனமாகவே இருந்திருக்கிறார், இருந்தும் இந்த ஆதார் எண் இணைக்க வேண்டி தினசரி வரும் அழைப்புகள் போல இதுவும் இருந்ததால் ஏமாந்துவிட்டார், என்ன நடந்தது ?

“வணக்கம், ஏர்டெல்லில் இருந்து பேசுகிறோம், உங்கள் ஆதார் எண்ணை இணைத்துவிட்டீர்களா ?”

“இல்லைங்க , இன்னும் இல்லை, “

“சார்! அரசு உத்தரவுப்படி இன்னும் சில நாட்களுக்குள் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும், நீங்கள் விரும்பினால் இந்த அழைப்பின் வழியாகவே உங்கள் ஆதார் எண்ணை இணைக்கலாம், உங்களிடம் ஆதார் எண் இருக்கிறதா ?”

“இருக்கு, சொன்னா போதுங்களா, நீங்களே அப்டேட் பண்ணிடுவீங்களா ?”
“நிச்சயமாக சார், உங்களுக்கு உதவுவதற்க்காவே இந்த வசதி, உங்கள் ஆதார் எண்ணை சொல்லுங்கள்!” (ஆதார் எண்ணை சொல்கிறார்,)

“ஆதார் எண் தந்தத்திற்கு நன்றி, உங்கள் எண் இந்த மொபைல் நம்பருடன் இணைக்கப்பட்டுவிட்டது வாழ்த்துக்கள், இன்னும் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான், அதை செய்தால் மட்டுமே நீங்கள் தான் இந்த மொபைல் எண் உபயோகிப்பாளர் என எங்களால் உறுதி செய்துகொள்ளமுடியும்,”
"என்ன பண்ணணும்ங்க ?”

“உங்களது சிம் கார்டில் உள்ள 20 இலக்க சிம் எண்னை மெஸேஜில் SIM என டைப் செய்து ஏர்டெல்லின் 121 என்ற வாடிக்கையாளர் சேவை மைய எண்ணுக்கு அனுப்பவும், அனுப்பிய பிறகே உங்கள் எண்ணுடன் ஆதாரை இணைக்கும் பணி முழுமையடையும்,”

(யோசிக்கிறார்) “மேடம் ! சிம்மு போனுக்குள் இருக்குது, அந்த நம்பர் எனக்கு தெரியாதுங்களே”

“கவலை வேண்டாம் சார், உங்கள் சிம் நம்பரை இப்போது உங்களுக்கு மெஸேஜில் அனுப்பியுள்ளேன், அதை அப்படியே 121 என்ற எங்களது சேவை மைய எண்ணிற்கு அனுப்பவும், நன்றி”

“121 க்கு தானுங்க அனுப்பனும், வேற எங்கியும் இல்லீங்களே, ஏன்னா ஊர் பூரா முடிச்சவிக்கு பசங்க புதுபுதுசா ஏமாத்தறானுக, அதான் கேக்குறங்க”

“சார், இது ஏர்டெல்லின் அதிகார பூர்வ அழைப்பு, 121 எங்களது அதிகாரபூர்வ வாடிக்கையாளர் சேவை மையம், அதற்க்கு மட்டுமே அனுப்பினால் போதும். நன்றி"

இப்படி நமக்கு ஒரு போன் வந்தா எத்தனை பேர் 121 க்கு சிம் நம்பர் அனுப்பியிருப்போம், கிட்டத்தட்ட எல்லோருமே, இல்லையா !! அதே போலத்தான் இவரும் அனுப்பியிருக்கிறார், அனுப்பிய சிலமணிநேரங்களில் இவரது அக்கவுண்டில் இருந்து தொடர்ந்து 10000 , 20000 என சரமாரிக்கு பணம் உருவப்பட்டு, இவர் சேர்த்து வைத்திருந்த Fixed Deposits உட்பட 1.30 லட்சங்களை மொத்தமாக 18 மணி நேரத்தில் அபேஸ் பண்ணிவிட்டார்கள், 

ஐயோ, இதெப்படி சாத்தியம் என்கிறீர்களா, சாத்தியமே !!

உங்கள் வங்கி கணக்குகளின் இணைய சேவை பாஸ்வேர்ட் மாற்றுவது, ஏடிஎம் பின் நம்பர் மாற்றுவது, புதிய அக்கவுண்டகளை இணைத்தல், பண பரிமாற்றம் என எதை இணைத்தாலும், மாற்றினாலும் அவை எல்லாமே ஒன்றே ஒன்றை அடிப்படையாக கொண்டே மாற்ற முடியும், அது உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் OTP, அந்த OTP யை பெற்றே மேற்சொன்ன மோசடியை நிகழ்த்தியிருக்கிறார்கள், எப்படி ?

ஏர்டெல் 3G யில் இருந்து 4G சிம்முக்கு உங்கள் எண்னை மாறுங்கள், ப்ரீ ப்ரீ என ஊர் பூரா கூவி கொண்டிருக்கிறது, இதற்காக ஒரு சேவையை தொடங்கியது, வாடிக்கையாளருக்கு இலவசமாக 4G சிம் கார்டுகளை தர தொடங்கியது, அவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான், SIM என டைப் செய்து 20 இலக்க புது சிம் எண்னை 121 க்கு அனுப்பிவிட்டால் இரண்டு மணிநேரத்தில் புதிதாக தரப்பட்ட 4G சிம்மில் உங்கள் நம்பர் ஆக்டிவேட் ஆகிவிடும், பழைய சிம்மை தூக்கி போட்டுவிட்டு இதை செருகி 4G தரத்தில் உபோயோகிக்கலாம், இந்த சேவையை தான் இந்த திருடர்கள் உபயோகித்து கொண்டனர், ‘எனக்கு சிம் நம்பர் தெரியாதுங்க’ என்ன சொல்லியதும் அவர்கள் அனுப்பினார்கள் பாருங்கள் ஒரு சிம் நம்பர் , அது உங்கள் போனில் நீங்கள் பேசி கொண்டிருக்கும் சிம்மின் 20 இலக்க எண் அல்ல, அவர்கள் கை வசம் ஆக்டிவேட் ஆக தயார் நிலையில் உள்ள ஒரு 4G சிம். அவர்கள் அனுப்பிய மெஸேஜை 121 க்கு நீங்கள் அனுப்பியதால் சிலமணி நேரங்களில் உங்கள் இணைப்பு துண்டிக்கப்பட்டு அவர்கள் சிம்மில் உங்கள் எண் ஆக்டிவேட் ஆகிவிடும், பிறகு OTP என்ன, உலகமே உங்களிடம் பேச நினைத்தாலும் எல்லா அழைப்புகளும் அவனுக்கு தான் போகும். எவ்வளவு எளிமையாக, நம்ப வைத்து ஏமாற்றுகிறார்கள் பாருங்கள்!

மேற்சொன்ன மோசடியில் முதல் 3000 உருவப்பட்ட போதே ICICI க்கு சொல்லி அக்கவுண்ட்டை தற்காலிகமாக முடக்க சொல்லியிருக்கிறார் இளைஞர், ஆனால் ICICI தேமே என 18 மணிநேரம் தேவுடு காக்க, அதற்குள் மொத்த வைப்பு தொகையையும் சுருட்டிவிட்டார்கள் ,இந்த மாதிரி நூதன, எளிமையான, மிக மிக நம்பிக்கை தரும் வகையில் நீங்களும் ஏமாற்றப்படலாம், எக்காரணம் கொண்டும் OTP எண், PIN நம்பர் போன்றவைகளை யாரிடமும் பகிராதீர்கள், மோசடி பேர்வழிகளிடம் இருந்து,கவனமாக உங்கள் கையிருப்பை காத்திடுங்கள். நன்றி.

- ஹரிஹரசுதன் தங்கவேலு

Comments

  1. ஆகா எப்படியெல்லாம் கொள்ளை அடிக்கிறார்கள் நாம்தான் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும்,
    நண்பரே ஒரு செய்தி,
    வலைப் பூவில் எழுதியதை முகநூலிலும் எளிமையாகப் பகிரலாம்,
    தங்கள் வலைப் பூவில்.
    Labels: aathaar, fb share, hariharasuthan, linking fraud, ஒரு முகநூல் பகிர்வு
    என்னும் வரிகளுக்கு மேலாக,
    ஒவ்வொரு கட்டமாக, எம், பி. டி எஃப், என்று இருக்கிறதல்லவா, அதில F இல் Cursor வைத்து கிளிக் செய்தால், தங்களின் வலைப் பூவை முகநூலில் எளிதாய் பகிரலாம்

    ReplyDelete
  2. தங்களின் பதிவினை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளேன்

    ReplyDelete
  3. இதுபோல் பலர் ஏமாந்த கதைகளை படிக்கும் போது வருத்தமாக இருக்கிறது.
    போதிய விழிப்புணர்வு அவசியம்.
    சில வங்கிகள் விவரம் தெரிந்ததும் கணக்கை முடக்கி வைத்து விடுகின்றன.
    சில நாட்களுக்கு முன்னர் ஒரு சகோதரியின் அக்கவுண்டில் இருந்து ஒரு பைசா கூட எடுக்க முடியாமல் வங்கி நடவடிக்கை எடுத்தது.
    ஐசிஐசிஐ யின் மெத்தனம் லட்சங்களை இழக்க வைத்துள்ளதே...

    ReplyDelete
  4. எதற்கும் எச்சரிக்கை தேவை!

    ReplyDelete
  5. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய விளக்கணித் திருநாள் நல்வாழ்த்துகள் வாழ்க நலம் வாழ்க பல்லாண்டு வளத்துடனும் நலத்துடனும்

    ReplyDelete

Post a Comment

வருக வருக