புத்தகத் திருவிழா 2017இல் எல்லைப்பட்டி மாணவர்கள்

புதுகையை புத்தகக் கோட்டையாக்கும் முயற்சியில் கவிஞர் தங்கம் மூர்த்தி 
புதுகையில் ஒரு புத்தகத் திருவிழாவை நடத்த இலக்கிய ஆர்வலர்கள் திட்டமிட்டு, இதுதொடர்பாக விவாதிக்க தொடர் கூட்டங்களை நடத்த விரும்பினார்கள். கவிஞர் தங்கம் மூர்த்தி, கவிஞர் முத்துநிலவன் மற்றும் கம்பன் கழக நிறுவனர் சம்பத் குமார் ஆகியோரின் முன்னெடுப்பில்  விவாதங்கள் தொடங்கின, கவிஞர்கள் வீடுகளில் ஆலோசனை துவங்கி மெல்ல மெல்ல உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகமாகி இறுதியாக சில்வர் ஹாலில் கூட்டம் நடைபெற்றது.

படம் பார்க்க கிளிக்குங்க 

ஊர்கூடி இழுத்த தேர் திடுமென நின்றுபோக, இனி புத்தகத் திருவிழா சாத்தியமா என்கிற நிலையில் சிலமாதங்கள் நீடித்தது.


திடுமென தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேரை இழுக்கத் துவங்கியது. அய்யா மணவாளன், தோழர் பாலா, புதுகை புதல்வன் என்கிற ஒரு அணி ஒன்றிணைந்து மீண்டும் கவிஞர் தங்கம் மூர்த்தியை அழைத்து விழாக்குழுவிற்கு தலைமையேற்க கோர முதலாண்டு புத்தகத் திருவிழா வெற்றிகரமான முறையில் நடந்தேறியது.

பிரச்னை என்னவென்றால் கடந்தமுறை திருவிழாவின் போதுதான் மோடி பகவான் ரூபாய் நோட்டுக்கள் மூலமாக இந்தியர்களின் தேசபக்தியை சோதித்துக்கொண்டிருந்தார். போதாக்குறைக்கு முதல்வர் ஜெயா உடல்நிலை வேறு சேர்ந்துகொள்ள திரில்லிங்கான நிலையில் நடந்தேறியது நிகழ்வு. சுமார் அறுபது லட்சத்திற்கு நூல்கள் விற்பனையாகியிருந்தன.

எல்லைப்பட்டி மாணவர்களை அழைத்துச் செல்ல நான்கு பேருந்துகளை அனுப்பிவைத்தார் அண்ணன் தங்கம் மூர்த்தி. மாணவர்கள் சுமார் ஐந்தாயிரம் ரூபாய்க்கு நூற்களை வாங்கினார்கள். அவர்கள் அதிகம் செலவிட்டதென்னவோ கேன்டீனில்தான். மாணவர்கள் ஐந்தாயிரம் ரூபாய்க்கு நூற்களை வாங்க ஸ்ரீ வெங்கடேஷ்வரா பள்ளியோ டீசலுக்கு எட்டாயிரத்தை செலவிட்டிருந்தது.

இந்நிலையில் இரண்டாம் ஆண்டு புத்தகத் திருவிழாக் குழுவில் மீண்டும் அழைக்கப்பட்டேன்.


இரண்டாம் ஆண்டு அறிவியல் இயக்க தோழர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. முதலாம் ஆண்டே நண்பர் நாரயணன் உரிமையுடன் ஒரு நூலை கேட்டு வாங்கிக்கொண்டார். மால்கம் கிளாட்வெல்லின் பிளிங். (நான் இன்னும் முடிக்கவில்லை அவர் என்ன செய்கிறார் என்பது தெரியவில்லை)

இம்முறை திட்டக்குழு கடந்த ஆண்டே விவாதித்த ஒரு விஷயத்தை அறிமுகம் செய்தது. மாணவர்களுக்கு உண்டியல்களை கொடுத்து சேகரிக்க கோரி அந்த பணத்திற்கு டோக்கனைகளை வழங்கி அவர்களை நூற்களை வாங்க அனுமதித்தல். கூடுதலாக பத்து முதல் பதினைந்து சதவீதம் வரை மாணவர்களுக்கு கழிவும் உண்டு.

இலுப்பூர், மதர் தெரசா கல்விநிறுவனங்கள் உண்டியலை ஸ்பான்சர் செய்ய பத்தாயிரம் உண்டியல்கள் புதுகைப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. எம் பள்ளி மாணவர்களில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டன. ஒரு மாதத்திற்கு பிறகு சில உண்டியல்கள் கிழித்தெறியப்பட்டிருந்தன, சில வாயைப் பிளந்துகொண்டு குழந்தைகளுக்கு அவசர செலவிற்கு நிதியளித்துக்கொண்டிருந்தன. தப்பிப் பிழைத்த உண்டியல்களில் இருந்து திரட்டப்பட்டது ரூபாய் இருபத்தி ஆறாயிரத்து எழுநூற்றி எண்பத்தி ஐந்து ரூபாய்கள்.

அரண்டு போய்விட்டேன் நான், எதிர்பார்த்ததென்னவோ பத்தாயிரம்தான்.

வந்தது ஒன்றை மடங்கு அதிகம்.

அரசுப் பள்ளிகளில் இரண்டாவது இடத்தில் எல்லைப்பட்டி மாணவர்கள்! (முதலிடம் கவரப்பட்டி மேல்நிலைப்பள்ளி,ஐம்பத்தி ஐந்து ஆயிரம்!)


மீண்டும் ஒரு பிரச்சனை. எப்படி மாணவர்களை அழைத்து வருவது?

ஒருவருடம் மாணவர்களுக்கு வாகனத்தினை அளிக்கலாம். இரண்டாம் வருடமும் சாத்தியமா ? தயங்கி தயங்கி ஒரு விண்ணப்பத்தை பள்ளித் தலைமை ஆசிரியர் விழாக்குழு தலைவர் கவிஞர்  தங்கம் மூர்த்திக்கு அனுப்ப, அவர் செய்திடலாம் என்று சொல்லிவிட்டார்.


இப்போது எழுந்தது இன்னொரு பிரச்சனை, ஆர்.எம்.எஸ்.ஏ நிகழ்த்தும் ஆசிரியர்களுக்கான  ஐ.சி.டி பயிற்சிகள். திங்கள் அன்று துவங்கினால் திட்டம் பணால் ஆகிவிடும் என்கிற நிலையில் அய்யா ராசி பன்னீர்செல்வம் இருபத்தி எட்டுதான் கஸ்தூரி என்று பால்வார்த்தார். திங்கள் என்று தேதியை உறுதிசெய்து கவிஞரிடம் சொல்லியாயிற்று.

கவிஞரே வெகு சரியாக ஞாயிறு மாலையே அழைத்து நாளை காலை பள்ளிக்கு மூன்று வாகனங்கள் வந்துவிடும் என்று என்னை ஆச்சர்யப்படுத்தினார். முன்னேற்றம் என்பது அவ்வளவு எளிதில் வந்துவிடாது. அதற்கு பல நுட்பமான காரணிகள் உண்டு என்பதை உணர்ந்தேன்.

காலையில் இன்னொரு பிரச்சனை . மழை. அநேகமாக பள்ளி விடுமுறையாகிவிடும் என்று பதைக்க வைத்தது வானம். தொலைக்காட்சியில்  ஒவ்வொரு  நியூஸ் சானலாக மாற்றிப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு பிறகு பள்ளிக்கு விரைந்தேன்.

மழைபடுத்திய பாட்டில் எங்கே வாகனங்கள் வருகின்றனவோ இல்லையோ என்கிற கேள்வி வேறு. ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளியின் துணை முதல்வர் லைனில் வந்து மூன்று பேருந்துகள் வந்துகொண்டிருக்கின்றன என்றார்.

ஒருவழியாக டோக்கன்களை கொடுத்து மாணவர்களை வண்டியில் ஏற்றி திருவிழா நடைபெறும் நகர்மன்றம் அடைந்தோம்.

வண்டிகள் வருவதற்கு முன்னரே அறிவியல் இயக்கத் தொண்டர்கள் தடைகளை அகற்றி வண்டிகளை நிறுத்த வாகான இடத்தை தயார் செய்து வைத்திருந்தனர்.

எதிர்பாரா இன்ப அதிர்ச்சியாக அறிவியல் இயக்கம் மாணவர்களுக்கு இரண்டு சிறப்புரைகளை வழங்கியது. ஜெ.சி.ஐ  ரெயின்போவின் தலைவர் திரு.விஜயக்குமார், வெகுநேர்தியாக மைக்கேல் பாரடே குறித்த அறிமுகத்தை தர தொடர்ந்து வந்த முனைவர் தினகரன் விரிவான தகவல்களை வழங்கி, மாணவர்களை கேள்வி கேட்கச் சொல்லி பதில்களைத் தந்தார்.

கிரிஸ்பர் குறித்து அவர்பேச என் மாணவர்களில் யாரவது கேள்விப்பட்டிருக்கிறோம் என்றாவது சொல்வார்களா என்று எதிர்பார்த்தேன். சில முறை வகுப்பில் சொல்லியிருக்கிறேன்.

பதியும் வண்ணம் சொல்லவில்லை போல, அதுவும் நான் க்ரிஸ்பார் என்று சொல்லியிருந்தேன், முனைவர் தினகரனோ ஒவ்வொரு எழுத்தாக சொன்னார் சி.ஆர்.ஐ.எஸ்.பி.ஆர். 49 என்று சொல்ல மாணவர்கள் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். பிறகு அவரே விளக்கினார். (நான் இங்கிருந்து சொன்னேன் )

எல்லா மாணவர்களையும் ஒரே நேரத்தில் அரங்கின் உள்ளே அனுப்பினால் அரங்கு கொள்ளாது என்கிற காரணத்தினால் எழுந்த ஏற்பாடு என்றாலும் எல்லைப்பட்டி பள்ளியின் முதல் துளிர் இல்ல நிகழ்வாகவும் இது அமைந்தது.

அறிவியல் இயக்கத் தோழர்களுக்கு நன்றிகள்.

மாணவர்கள் சுமார் இரண்டு மணிநேரங்கள் செலவிட்டு இருபத்தி ஏழு ஆயிரங்களுக்கு நூற்களை வாங்கினார்கள்.

ஒரு அரசு பள்ளி மாணவர்கள் இருபத்தி ஏழு ஆயிரங்களுக்கு நூற்களை வாங்குவது என்பது ஒரு வரியில் கடந்துபோகின்ற செய்தியல்ல. கடந்த ஒருவார காலமாக பள்ளியில் இருக்கிற மாணவர்களும், பயிற்சி ஆசிரியைகளும் இதற்காக உழைத்தனர். உண்டியல் தொகையை வாங்கி வரவு வைப்பது, சில்லறைக்காசுகளை எண்ணுவது, பொட்டிலமிடுவது பிறகு டோக்கன் வழங்குவது என நெடும் பணி இதற்கு பின்னே இருக்கிறது.

ஒருங்கிணைத்தது என்னவோ நான் என்றாலும், அனுமதித்த தலைமை ஆசிரியை திருமிகு.தேன்மொழி, சகிப்புத்தன்மை மிக்க சக ஆசிரியர்களும்தான்.


இத்துணை வேலை இருக்கும் என்று தெரிந்ததால்தான் புத்திசாலித்தனமாக மற்ற பள்ளிகள் தவிர்த்திருக்க வேண்டும். நமக்கு அவ்வளவு புத்திசாலித்தனம் கிடையாதே. செம பிரஷர் நிகழ்வு நடந்தேறும்வரை.




ஒருவார காலமாக நடந்த உண்டியல் பணி, மற்றும் டோக்கன் வழங்கும் பணி 

டோக்கன் கவர்கள் 

 பணிக்கு நடுவே பயிற்சி ஆசிரியைகள் டோக்கன் பொட்டலங்களை தயார் செய்கிறார்கள்.
 பள்ளி மாணவர்கள் டோக்கன்கள் அடங்கிய உறையை பெறுகிறார்கள்

பேருந்து பயணம்
மாணவர்களை  வழிநடத்தும்  ஆசிரியைகள் 

பயல் மெர்சல் படம் பார்த்திருப்பான் போல 


புத்தகத் திருவிழா நடைபெறும் அரங்கில் பேருந்துகள் நுழைகின்றன. 

அறிவியல் இயக்கத்தின் மாநில பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் வாகனங்களை வழிநடத்துகிறார். 

தன்னார்வ தொண்டர்கள் தளாரது பணியாற்றுகிறார்கள்.

 எல்லைப்பட்டி  அரசு உயர்நிலைப்பள்ளியின் முதல் துளிர் இல்ல நிகழ்வு 

தோழர் பாலா பேச கண்ணுறும் ஆசிரியர்கள் மற்றும் துளிர் இல்ல உறுப்பினர்கள் 

மிக நேர்த்தியாக பேசுகிற நண்பர் விஜயகுமார் 

தன்னார்வ தொண்டர் படை தளபதிகளில் ஒருவர் சோலை 

முனைவர் தினகரன் அவர்கள் வருகைதந்த பொழுது தோழர் பாலா மற்றும் தோழர் மணவாளன் 

\
முனைவர் தினகரன் அவர்களின் உரை 

முனைவர் தினகரன் அவர்களின் உரை 


திருவிழாவேதான் 

நூற்பூக்களை மொய்க்கும் மாணவத் தேனீக்கள் 

 கவிஞர் சுடாலின் சரவணன் தனது படையுடன்


இளம் வாசகர்கள்


என்னுடைய மாணவராம், ஐ.ஏ.எஸ்.தேர்வுக்கு தயார் செய்துகொண்டிருக்கிறார். அரவிந்தன்...வாழ்துகள் 


 விழாவின் வரவேற்புக்குழு தலைவர் திருமிகு.தங்கம் மூர்த்தி அவர்களுக்கு எத்துணை முறை நன்றிகளைத் தெரிவித்தாலும் போதாது என்பதுதான் உண்மை.

நிகழ்விற்கு பின்னர் பள்ளி திரும்பி உணவருந்திய மாணவர்களை அழைத்து அவர்கள் வாங்கியிருக்கும் நூற்களின் பட்டியலை எழுதித்தரக்கோரினேன். வாரம்தோறும் படித்த நூற்களை பற்றி பேசுமாறு கூறியிருக்கிறேன். பரிசாக நூற்கள் தருவேன் என்றும் அறிவித்திருக்கிறேன்.

இந்த அறிவிப்பிற்கு பின்னர் இருப்பது எம்.ஆர்.எம். பள்ளியின் தாளாளர் திரு.முருகப்பன் அவர்கள்.

ஒரு உரையாடலில் சார் எங்க பிள்ளைக ஐம்பதாயிரம் கொடுத்திருக்கிறார்கள்.

இதனால் யாருக்கு லாபம் என்று அவர் கேட்க யோசிக்காமல் சொன்னேன் நிச்சயமாக மாணவர்களுக்குத்தான்.

இல்லை தவறாக சொல்கிறீர்கள், லாபம் நூல் விற்பனையாளருக்கு மட்டுமே. பிள்ளைகள் நூற்களை வாங்கி படிக்கிறார்களா இல்லையா என்று யார் பார்ப்பது? வாங்கி ஒரு ஓரமாய் வைத்துவிட்டால் என்ன செய்வீர்கள் என்று சொல்லவே ங்கே என்று விழித்தேன்.

அவரேதான் சொன்னார் வாசிப்பு முகாம்களை தொடர்ந்து நடத்துங்கள் என்று.

நல்ல விஷயம்தானே செய்துடலாம் என்று என் பள்ளியில் துவங்கிவிட்டேன்.

எம்.ஆர்.ம். முருகப்பன் அவர்களுக்கு நன்றிகள்.


எம் பள்ளிப்பிள்ளைகள் நூற்களை சும்மா போட்டு வைத்திருக்க மாட்டார்கள்!

நன்றிகள்

பொறுமையாகப் படித்த உங்களுக்கும்.

அன்பன்
மது

Comments

  1. மகிழ்ந்தேன்
    நன்றி நண்பரே

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் அய்யா

      Delete
  2. ரொம்பவே 'ரிஸ்க் எடுத்து பணியாற்றிய அனைவருக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் அய்யா

      Delete
  3. உங்கள் பிள்ளைகள் மீதான உங்களின நம்பிக்கைக்கும் அன்பிற்கும் மனமார்ந்த பாராட்டுகள். குழந்தைகளின் முகத்தில் ஈடுபாடு, ஆர்வம் அருமையாகத் தெரிகிறது. ஊக்குவிக்கும் உங்களைப் போன்ற ஆசிரியர்கள் போற்றத்தக்கவர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் அய்யா

      Delete
  4. வார நாள்களில் தான் வாங்கிப் படித்த 2 புத்தகம் பற்றி ஐந்து நிமிடம் (குறிப்புகள் இல்லாமல்) பேசும் மாணவர் - மாணவிகள் எத்தனை பேரானாலும் தலா 100ரூபாய் மதிப்புள்ள -அவர்கள் விரும்பும் - நூல்களைப் பள்ளிக்கு வந்தே பரிசளிக்க விரும்புகிறேன். பத்து மாணவர் சேர்ந்ததும் வரவேண்டிய நாள் எதுவென்று நீங்களே முடிவு செய்யுங்கள்.

    ReplyDelete
  5. சிறு பிராயத்திலேயே நூல்களை வாசிப்பதில் ஈர்ப்பு எடுத்துவது மிகச் சிறப்பு. தொடரட்டும் உங்கள் சேவை.

    ReplyDelete

Post a Comment

வருக வருக