ஒரு குழந்தை, ஒரு மருத்துவர்



பிறந்து ஒருவாரம் ஆன நண்பரின் குழந்தை ஒன்றிற்கு ஒரு சிறு வேனில் கட்டி வந்தது.  நண்பரின் மனைவி தனியாக குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டிய சூழல்.


சிறு வேனில் கட்டிதானே எதற்கும் மருத்துவரிடம் காண்பிப்போம் என்று திருச்சியில் ஒரு மருத்தவமனையில் காண்பித்திருக்கிறார். அங்கிருந்த மருத்துவரோ இது ஒரு கடுமையான நோய்தொற்று உடன் அட்மிட் செய்யவும் என்று சொல்லியிருக்கிறார்.

தொடர்ந்து அறுவை சிகிச்சை ஒன்று அவசரம் என்று சொல்ல அலறிக்கொண்டு சொந்தங்களுக்கு பேசி வரசொன்னார் குழந்தையின் தாய்.


விசயம் எனக்கு வர நேரில் பார்க்காமல் ஒன்னும் சொல்ல முடியாது என்று புறப்பட்டு குழந்தையை பார்க்க திருச்சி வந்தேன். ஒரு சிறிய வியர்குறு கட்டி கையை வைத்து பார்க்க கொஞ்சம் சூடாக இருந்தது.  வெண்பிழான் மூலம் வேற்றுயிர் எதிர் மருந்துகள் செலுத்தத் துவங்கியிருந்தார்கள்.

என் அனுமானத்தில் குமிழ் சிறிது நேரத்தில் உடைந்துவிடும் என்று தோன்றியது. ஆனால் மருத்துவர்கள் உடனே அறுவை செய்ய வேண்டும் என்று சொல்ல குழந்தையின் தந்தை தனது மருத்துவர், நண்பரை தொடர்புகொண்டார். ஒன்னும் பிரச்சினை இல்லை சிறிது மயக்க மருந்து தருவார்கள் சிறிது நேரத்தில் ஒரு சின்ன அறுவையில் சரியாகிவிடும் என்றார். குழந்தையின் தாய்மாமன் இன்னொரு மருத்துவரிடம் கேட்க அவரும் ஒன்னும் கலங்க வேண்டாம் என்று சொல்ல முதல் முறையாக குழந்தையின் தந்தை கலங்கினார்.

அறுவை தேவை இல்லை என வீட்டுப் பெண்கள் எல்லாம் சொல்ல மறுத்த அவர் செஞ்சுடுங்க என்ற சொன்னார். குழந்தை அறுவைசிகிச்சை அரங்கிற்கு கொண்டுசெல்லப் பட்டது.

அறுவை அரங்கிற்கு வெளியே விம்மி விம்மி அழுதபடி குழந்தையின் தாய் துணைக்கு அழ உறவினர்கள்.  திடீரென அரங்கை திறந்து முகமூடியுடன் ஒரு மருத்துவர் வெளியில் வந்து நண்பரை பார்த்து பேச ஆரம்பித்தார்.

வி.டி.வி கணேஷ் மாதிரி அச்சுஅசலாய் தோற்றத்திலும் பேச்சிலும் இருந்த அவர் மயக்க மருந்து நிபுணராக இருக்க வேண்டும். வெளியில் வந்த அவர் சரியாக டியுன் செய்யாத தனது எப்.எம் குரலில் பேசினார்.

"குழந்தை மயக்க மருந்து குடுக்கப்போரோம். கடும் ரிஸ்க். பெரிய மனிதர்களுக்கே உத்திரவாதம் தரமுடியாது. இது சின்னக் குழந்தை ஒன்னும் சொல்ல முடியாது. கடும் ரிஸ்க். (உள்ளே திரும்பி) வாம்மா நர்ஸ் இவங்களிடம் சொல்லி கையெழுத்து வாங்கிட்டீங்களா என்று கேட்க நர்ஸ் வேகமாக ஒரு வெற்றுத் தாளில் எழுதி கையொப்பம் வாங்கினார். எனக்கோ கடும் எரிச்சல் . ஏற்கனவே பிரிண்ட் செய்த தாளில் கையொப்பம் வாங்கிய பிறகு மீண்டும் எதற்கு இப்படி? புரியவில்லை.

மீண்டும் மீண்டும் ரிஸ்க் ஒன்னும் சொல்ல முடியாது. மனுஷ நாக்கு எப்டிவேண்டாலும் பேசும் முதலில் என்று சொல்ல , எனக்கு ஒரு அதிபயங்கர சந்தேகம் துளிர்த்தது. குழந்தைக்கு ஏதும் ஆகிவிட்டதோ. உடனே பாப்பாவை பார்க்கணும் என்று சொல்ல. சட்டென்று ஜெர்க் ஆன வி.டி.வி கணேஷ் குழந்தை நல்லா இருக்கு என்று மட்டும் சொன்னார்.அடங்கொய்யால என்று தடதடக்கும் இதயத்துடன் ஒரு மணிநேரம் காத்திருந்தோம்.

குழந்தை நல்லபடி திரும்பி வந்தாள். ஏனோ எனக்கு நன்றி சொல்ல வார்த்தை வரவில்லை.

தோழர்களே மருத்துவர் நடந்துகொண்டதில் தீவிரமான சுய சார்பும் சுய நலமும் இருந்தது. ஒரு விதத்தில் அவர் மிக சரியாகத்தான் நடந்து கொண்டார். 

குழந்தயின் தாய்மாமன் சொன்னது இதுதான் "இவன் டாக்டரா வெட்டியானா?"

அந்த ஒருமணி நேர அவஸ்தை வாழ்நாளுக்கும் மறக்காது. கார்திக் பாலாஜி, ப்ருனோ, இளையராஜா, டானியேல் சுந்தரையா, தாஸ் என மருத்வ துறை நட்சத்திரங்கள் என் முகநூல் நட்பு வட்டத்தில் உண்டு. அவர்கள் தரப்பின் வலிகளையும் நான் நன்கு உணர்ந்தே இருக்கிறேன்.

இருந்தாலும் என் மனதை பிசைந்த அந்த நிமிடங்கள் என்னால் சுலபமாக கடந்து வரவோ மறக்கவோ முடியவில்லை.

நம்புவோம், இதுவும் கடந்துபோகும்.

அன்பன்
மது






Comments

  1. எதுவும் கடந்து போகட்டும்...

    ReplyDelete
    Replies
    1. அண்ணா வணக்கம், நலம்தானே நீங்களும் மதர்போர்டும்.?
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  2. என்னவெனச் சொல்வது சகோ இந்த உணர்வை... கொடுமை!

    குழந்தையின் பெற்றோர் எத்தகைய வேதனைகுள்ளாகி இருந்திருப்பார்களெனப் புரிகிறது. அது ஏன் வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கினார்கள்???

    எப்படியோ நல்லபடியாகக் குழந்தைக்கு ஆபரேஷன் நடந்து முடிந்ததே.. அதற்குக் கடவுளுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. இந்தியாவில் உயிர்வாழ ரொம்பத் தேவையான விசயம் கடவுளின் அருள் மட்டுமே.. இன்றைய யதார்த்தம் இதுதான், கூடுதலாக நிறைய சகிப்புத் தன்மையும்
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி..

      Delete
  3. அந்த நேரத்தின் வலி என்னால் உணரமுடிகிறது..
    குழந்தை நல்லபடியாக இருக்கிறதே...கடவுளுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ... பிரார்த்தனைக்கும் நன்றி... சகோதரி

      Delete
  4. வணக்கம் சகோ
    மிகவும் வேதனையான ஒரு நிகழ்வு. குழந்தைக்கு வந்த சாதாரண கட்டியை வைத்து மருத்துவர்கள் காசு பறிக்கும் வேலையைச் செய்தார்களோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. அதிலும் நம்மை அச்சத்தில் ஆழ்த்தி விட்டு.. வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்குவது இன்றைய சூழலில் மருத்துவர்கள் தங்கள் மீதும் மருத்துவத்தின் மீதான நம்பிக்கையின்மையைத் தான் காட்டுகிறது,, எதுவும் தவறாக சொல்லி விட்டேனா சகோ!
    ===============
    பொங்கல் தினத்தை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டியை தங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். தாங்களும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறேன் தலைப்புகள் விரைவில்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான், சரியாக சொல்லிவிட்டு அதென்ன தவறாக சொல்லிவிட்டேனோ என்று ஒரு கேள்வி.
      ===
      போட்டியை முகநூலில் அறிவித்தாயிற்றா? ரூபனின் வலைத்தளத்தில் கண்டோம்..நீங்கள் சொல்லும் முன்பே ... உங்கள் தளத்திலயும் பார்த்தேன் ... நல்ல முயற்சி சகோ... வாழ்த்துக்கள் ...

      Delete
  5. மன்னிக்க வேண்டும் கஸ்தூரி, நீங்கள் கூட அந்த நேரத்தில் அந்தச் சிறு குழந்தையை வேறொரு மருத்துவரிடம் வேறொரு மருத்துவ மனைக்குக் கொண்டு சென்று காட்டிய பின் முடிவு செய்யலாம் என்று ஆலோசனை சொல்லியிருக்கலாம் என்பது என் கருத்து. இதுபோன்ற வேதனைகள் சிலவற்றை நானும் அனுபவித்த வலியை நினைவு படுத்திவிட்டீர்கள்...

    ReplyDelete
    Replies
    1. சில சமயங்களில் ஒருவர் எடுக்கும் முடிவிற்கு நாம் கட்டுப்பட வேண்டிய சூழல்... கொடுமையான நினைவுகள் அவை ...

      Delete

Post a Comment

வருக வருக