விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் – 7 வ.உ. சிதம்பரனார்

ஆக்கம் ஷாஜகான்
pudhiavan.blogspot.in
நன்றி




வ.உ. சிதம்பரனார்

“குற்றவாளி கப்பல் ஓட்டியது ஆங்கிலேயரை இந்நாட்டை விட்டு விரட்டுவதற்கே. எனவே இரண்டு ஆயுள்தண்டனை விதிக்கிறேன். இரண்டையும் ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும்” – இவ்வாறு தீர்ப்பளித்தார் ஆங்கிலேய நீதிபதி பின்ஹே.



அன்றைக்கு ஆயுள் தண்டனை என்றால் 20 ஆண்டு சிறைவாசம் என்று பொருள். இரட்டை ஆயுள் தண்டனை – அதுவும் ஒரே நேரத்தில் அல்ல, ஒன்றன்பின் ஒன்றாக – 40 ஆண்டுகள். சிறைதண்டனை பெறும் அளவுக்கு வ.உ.சி. செய்த குற்றம் என்ன...

பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி என்ற பெயரில் ஆங்கிலேயர்கள் ஏகபோகம் செலுத்திவந்த கப்பல்துறையில், போட்டியாக சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் என்ற கப்பல் நிறுவனத்தை அமைத்ததுதான் வ.உ.சி. செய்த குற்றம். அதுவரை தன் இஷ்டத்துக்கு கட்டணத்தை வசூலித்து லாபம் சம்பாதித்து வந்தது வெள்ளையர் கம்பெனி. வ.உ.சி.யின் கப்பல் கம்பெனி வந்த பின்னர் வெள்ளையர் கப்பலில் சரக்கு அனுப்புவோர், பயணம் செய்வோர் எண்ணிக்கை குறைந்த்து.

இதனால் ஆத்திரமடைந்த வெள்ளையர்கள், நெல்லை மாவட்ட கலெக்டர் விஞ்ச் துரையிடம் புகார் செய்தனர். தேசத்துரோக வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

1905ஆம் ஆண்டு வங்கத்தை கிழக்கு வங்கம், மேற்கு வங்கம் என்று இரண்டாகப் பிரித்த கர்சன் பிரபுவை எதிர்த்தார் வங்கத்தின் பிபின் சந்திர பாலர். சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் தீவிரமாக இருந்த வ.உ.சி.யும், சுப்பிரமணிய சிவாவும் நெல்லையில் அவருக்கு பலமான வரவேற்பு வழங்கினர். அடக்குமுறை ஆங்கிலேய அரசுக்கு இதுவே போதுமானதாக இருந்தது. ராஜத்துரோக குற்றச்சாட்டின்கீழ் இருவரையும் கைதுசெய்தது. அந்த வழக்கின்கீழ் வழங்கப்பட்ட தீர்ப்பைத்தான் மேலே பார்த்தோம். மேல் முறையீட்டில் உயர்நீதிமன்றம் இதை நாடு கடத்தும் தண்டனையாக மாற்றியது. பிரிவி கவுன்சில் இதை 6 ஆண்டுகள் தண்டனையாகக் குறைத்தது.

1872ஆம் ஆண்டு பிறந்த வ.உ. சிதம்பரத்தின் தந்தை உலகநாதன் பிள்ளையும், பாட்டனாரும்கூட வழக்குரைஞர்கள்தான். வ.உ.சி.யும் வழக்குரைஞர் தொழிலை ஏற்றார். புகழ்பெற்ற வழக்குரைஞராய்த் திகழ்ந்தார். குடும்பமே வழக்கறிஞர் குடும்பம் என பெயர் பெற்றிருந்த்து. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்ட வ.உ.சி., 1906ஆம் ஆண்டு சுதேசி கப்பல் கம்பெனியைத் துவக்கினார். பம்பாயிலிருந்து இரண்டு கப்பல்களை வாங்கினார். தூத்துக்குடிக்கும் இலங்கைக்கும் இடையே கப்பல் போக்குவரத்தைத் துவக்கினார். அதன் விளைவைத்தான் மேலே பார்த்தோம்.

சிறைத்தண்டனையை கோவை, கண்ணனூர் சிறைகளில் கழித்தார். கோவை சிறையில் செக்கிழுக்க வேண்டிய கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். 1912ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி விடுதலையான வ.உ.சி., பாரதியாரை சந்தித்தார். திரு.வி.க.வுடன் நட்புக் கொண்டார். இலக்கியப் பணிகளில் ஈடுபட்டார். 1927இல் மீண்டும் காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபட்டார். ஏராளமான நூல்களை எழுதினார், மொழியாக்கம் செய்தார். 18-11-1938இல் அமரரானார்.

செல்வந்தராக இருந்த வ.உ.சி. இறுதியில் வறுமைக்கு ஆளானார். நாட்டுக்காக உழைத்து செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் என்றெல்லாம் புகழப்பெற்ற வ.உ.சி.யை இந்த நாடு அவருடைய கடைசி கட்டத்தில் கைவிட்டுவிட்டது.

தமிழக அரசு, வ.உ.சிதம்பரனார் இல்லத்தை நினைவகமாக அமைத்துள்ளது. முகவரி – 2/119ஏ, வ.உ.சி. தெரு, ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி.

பி.கு. - வ.உ.சி. இழுத்த செக்கு, சென்னை காந்தி மண்டபத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. வ.உ.சி. சிறையிலிருந்து விடுதலை பெற்றபின், சென்னையில் மண்ணெண்ணெய்க் கடை வைத்தார். அது சரிவராததால், பின்னர் கோவையில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் பங்கேற்றார். அங்கே ஒரு வங்கி இயக்குனராகவும் பணியாற்றினார். ஈ.எச். வாலஸ் என்ற வெள்ளையர், திருநெல்வேலியில் வழக்குரைஞராகப் பணியாற்ற அனுமதி அளித்த்தால், வழக்குரைஞர் தொழிலையே மீண்டும் ஏற்றார். அதற்கு நன்றி தெரிவிப்பதற்காக வ.உ.சி. தனது கடைசி மகனுக்கு "வாலேஸ்வரன்" என்று பெயரிட்டார்.

#விடுதலை_வேள்வியில்_வீரத்தமிழர்கள்

Comments

  1. //நாட்டுக்காக உழைத்து செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் என்றெல்லாம் புகழப் பெற்ற வ.உ.சி.யை இந்த நாடு அவருடைய கடைசி கட்டத்தில் கைவிட்டு விட்டது.//

    நன்றி மறந்தனர் மக்கள்..

    மனம் கனக்கின்றது.

    ReplyDelete
  2. சுதந்திரம் மற்றும் குடியாட்சி என்றாலே அடுத்தவர் உரிமையை பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் தன்னலன் பேணுதல் மட்டுமே என எண்ணுபவர்கள் அதிகமாகி வரும் இந்த காலத்தில் என்ன விலை கொடுத்து சுதந்திரத்தை பெற்றோம், அதற்கு உழைத்தவர்கள் தங்கள் வாழ்க்கையையே விலையாக கொடுத்தார்கள் என்பதையெல்லாம் தெரியப்படுத்தும் இந்த தொடர் பதிவு மிக அவசியம்.

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
  3. மிக தேவையான தொடர்...இளைய சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.வாழ்த்துகள்..சகோ

    ReplyDelete

Post a Comment

வருக வருக