ஏன் என்னைக் கொல்கிறீர்கள்? - க.இராமசாமி

ஷானின்  வாசிப்புலகம். ஷான் கனவுதேசம் என்கிற வலைப்பூவில் தொடர்ந்து எழுதி வருவது நீங்கள் அறிந்ததே. அவரது பதிவு ஒன்று என்னைக் கவர்ந்ததால் பகிர்கிறேன்.

இந்த ஆளை என் புத்தக வேலை தொடர்பாக சென்றபோது அகநாழிகையில்தான் முதலில் சந்தித்தேன். தான் ஒரு வலைப்பதிவர் எனவும் என் பதிவுகளை அவர் படித்து வருவதாகவும் சொன்னார். இரண்டு சந்திப்புகளுக்குப் பிறகே இவரும் கவிதை எழுதுவார் என்பதும் இவரது புத்தகமும் அகநாழிகையில் என்னுடைய புத்தகத்துடன் வெளியாகிறது என்றும் தெரியும். வெளியீட்டு விழாவும் ஒன்றாகவே நடந்தது. அதன் பிறகு என் அலுவலகமும் இடம் மாறி அவர் அலுவலகம் இருந்த கட்டிடத்துக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் கரா என்று அழைக்கப்படும் இராமசாமி கண்ணன் ஏதோ ஒரு வகையில் என் எழுத்துப் பயணத்தில் பிணைந்திருக்கும் நண்பர். அவரது புத்தகத்தைப் படித்து என் கருத்தைப் பகிரவேண்டும் என்ற மனக்குறிப்பு நீண்ட நாட்களாக இருந்தாலும் அது இன்றுதான் சாத்தியமானது. 



கவிதைகளை தனியாகப் படிப்பதில் இருக்கும் அனுபவமும் அதைத் தொடர்ந்த பாதிப்பும் அவற்றை ஒரு தொகுப்பாகப் படிப்பதில் குறைகிறதோ என்ற ஒரு எண்ணம் எனக்கு உண்டு. கவிதைகள் அடர்த்தியானவை. படித்து முடித்தபின் உள்வாங்க நேரம் பிடிப்பவை. அந்த நேரத்தில் அடுத்த அடர்த்தியான கவிதைக்குள் நுழைவது அயர்ச்சியான விஷயம். சில நேரம் பிறகு படிப்போம் என்று மூடி வைத்து விடுவது உண்டு. இராமசாமியின் புத்தகத்தில் அந்தப் பளு இல்லை. ஒவ்வொரு கவிதையும் அடுத்த கவிதைக்கு இழுத்துச் செல்கின்றன. அப்புறம் படிக்கலாம் என்ற எண்ணம் தோன்றாத அளவிற்கு சுவாரசியமாகவும் இவை இருந்தன. 

----
செம்மறி ஆடுகள் நிறைந்த தொடர் வண்டியிலிருந்து 
உதிர்ந்த ஒரு தழையென மெல்ல நடக்கிறேன் 
அலுவலகம் நோக்கி 
----

கவிதைகள் பெரும்பாலும் தனிமை, துரோகம், சமூகம் சார்ந்து பேசுகின்றன. மனிதத்தின் அழுக்குகளைப் பேசுகின்றன. ஆனால் உள்வாங்கிய எழுத்து என்ற பெயரில் மன ஓட்டங்களை சிதறிய வார்த்தைகளாக்கி, முடிந்தால் புரிந்து கொள் என்று சவால் விடாமல் ஒவ்வொரு கவிதையும் ஒரு சிறிய கதையைப் போல் இருப்பது ஒருவேளை தொகுப்பின் சுவாரசியத்துக்கு காரணமாக இருக்கலாம். படிமம், குறியீடு போன்ற நவீனக் கவிதைக் கூறுகளையும் இவர் குறையின்றிப் பயன்படுத்தி இருக்கிறார் என்பதும் சிறப்பே.  

----
அந்திமத்தில்தான் 
அப்பாவுக்குத் தெரிந்தது 
கறிகாய்களில் புழு நெளிவது 
சமையலின் குறையில்லையென்று
----

சில இடங்களில் எழுத்துப்பிழைகளைத் தவிர்த்து இருக்கலாம். புத்தர் வீட்டில் வந்து தங்கும் கவிதை சற்றே நீண்டுவிட்டது போல் எனக்குப்பட்டது. கவிதைகளுக்குத் தலைப்பிடாததால் இது சூப்பர்யா என்று குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. ஆனால் தேநீர் குடிக்க அழைத்துச் செல்லும் நண்பனை மின்வெட்டு இருளில் கழுத்தறுக்கும் கவிதை புத்தகத்தை மூடிய பிறகும் நினைவில் நிற்கிறது. இது தெரியாமல் இத்தனை நாள் உன் கூட டீ குடிக்க வந்துட்டு இருந்தேனே... 

---
தன் குட்டியைத் தேடும் 
விலங்கின் அவசரத்தோடு 
என் கூடு திரும்பும் வேளையில் 
என்னைத் தடுத்து நிறுத்துகிறீர்கள் நீங்கள் 

ஏதோ ஒன்றைத் தொலைத்துவிட்டு தேடும் 
அவசரம் தெரிகிறது உன் கண்களில் என்கிறீர்கள் 

உயிர் நீத்த 
உடலின் சில்லிப்பென 
கவியும் இந்த இருட்டை 
பயமெனக் காட்டி 
விலக எத்தனிக்கிறேன் நான் 

ரோக உடலினை ஆசிர்வதிக்கும் 
குழந்தைமேரியின் புன்னகை கொண்டு 
தேநீர் விடுதிக்கு அழைக்கிறீர்கள் 

எஜமானனைப் பின் தொடரும் 
விசுவாச நாய் போல 
உங்கள் பின் தொடர்கிறேன் 

அனிச்சையாக கால்சராயின் 
பாக்கெட்டில் இருக்கும் 
கத்தியைத் தொட்டுப் பார்க்கிறது கைகள் 

ஒளிந்து பிடித்து 
விளையாடும் குழந்தையின் கைகளென 
நமக்கு இருட்டைப் பரிசளிக்கிறது 
தொலைந்து போன மின்சாரம் 

ஏன் இத்தனை அவசரம் 
தோழர் உங்களுக்கு 
விடுபட.

------

ஒருவேளை கத்தியை மறந்துவிட்டதால் இருக்கலாம். எங்களோடு கரா இப்போதெல்லாம் டீ குடிக்க வருவதில்லை. இதைப் படித்த பிறகு அவரைக் கூப்பிடவும் நாங்கள் தயாராக இல்லை. அந்த நேரத்தை இன்னொரு சிறந்த தொகுப்பை உருவாக்குவதில் செலவிடும்படி கிண்டி ஆர் ஆர் டவர்ஸ் IV இலக்கிய சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். ஜோக்ஸ் அபார்ட்... அட்டகாசமான கவிதை இது. 

வாழ்த்துக்கள் நண்பா...

- ஷான் 

சீக்கிரம் மின் புத்தகம் போடுங்கப்பா 

Comments

  1. புரிந்து கொள் என்று சவால் இல்லாமல் இருப்பது நன்று...

    சிந்திக்க வைப்பது சிறப்பு...

    கொடுத்த இணைப்பு = வதனப்புத்தகம்...?

    ReplyDelete
  2. அருமையான நூல் விமர்சனப் பகிர்வு! ரசித்தோம்..ஷான் அவர்களுக்கும், தங்களுக்கும் நன்றி!

    ReplyDelete
  3. வணக்கம்
    அருமையான தொகுப்பு ஒவ்வொரு கவிதையும் நன்று படித்த போது பசி மறந்தது.. மின்நூல் விரைவாக வெளிவர எனது வாழ்த்துக்கள் த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழர் ரூபன்

      Delete
  4. சிறப்பான நடையில் விமர்சித்து இருக்கிறீர்கள் தோழரே வாழ்த்துகளுடன்.
    தமிழ் மணம் 3

    ReplyDelete
    Replies
    1. பகிர்வுதான் தோழர்

      Delete
  5. நற்கவிஞர் க.இராமசமி அவர்களின் மின் புத்தகம் வெளிவர எனது விருப்பமும் வாழ்த்துகளும்.
    நல்ல படைப்பு அனைவரையும் சென்று சேரட்டும்.
    த ம 4
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  6. நல்ல பதிவு . பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா ,,,

    ReplyDelete
  7. நல்ல தொகுப்பு. ஆசிரியருக்கும் மதிப்பீடு செய்த தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. அன்புள்ள அய்யா,

    ஏன் என்னைக் கொல்கிறீர்கள்? - கவிஞர். க.இராமசாமியை ஷான் அவர்கள் மூலமாக அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
    த.ம. 6.

    ReplyDelete
  9. சிறப்பான நூல் அறிமுகம்! விமர்சனம் சிறப்பு! நன்றி! என்னுடைய பகிர்வுகளை வாட்சப்பில் பகிர்ந்து கொள்வதற்கு சிறப்பு நன்றி! முடிந்தால் 9003880189 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மெசேஜ்களை பகிர்ந்து கொள்ளுங்கள். என்னுடைய எண் தான்! நன்றி!

    ReplyDelete

Post a Comment

வருக வருக