சுகு - புதுகையின் கல்வி முகங்கள் பகுதி இரண்டு

அன்பிற்குரிய நண்பர் சுகு 
வள ஆசிரியர் என்பது சாதரணமான பணியாக இருப்பது இல்லை. ஒரே பணியில் இருக்கும் ஆசிரியர்கள் சக ஆசிரியர்களுக்கு பகிர்தலைத் தரப்பணிக்கப்பட்டு வந்தனர். ஒரே பணியிடம் ஒரே பதவி ஒரே அனுபவம் ஆனால் பணிக்கப்பட்ட ஒருவர் பயிற்சியைத் தரவும் ஏனையோர் பங்கேற்பாளர்களாகவும் இருக்கும் இத்தகைய பயிற்சிகளின் ஒருமை உணர்வு மிக முக்கியமானது. கொஞ்சம் தவறினாலும் யாரவது ஒருவரின் உணர்வுகள் புண்படவாய்ப்பு எப்போதுமே உண்டு.


இத்தகு பயிற்சிகளுக்கு ஏன் சிலரையே மீண்டும் மீண்டும் அழைக்கிறார்கள் என்கிற கேள்விக்கு பதில் முந்தயவரிகளில் உணரப்பட்டிருக்கும். ஆசிரியர் கிஷோரின் வார்த்தைகளில் சொல்வதென்றால் ரன்னிங் ஆன் எக்ஸ்ட்ரா மைல்! 

இப்படி கூடுதல் தூரம் ஓடிக்கொண்டிருக்கும் பல ஆசிரியர்களை நான் அறிவேன். இருப்பினும் சிலர் மனதில் ஒரு அழியாப் பிம்பத்தை பதிக்கிறார்கள். அவர்கள் குறித்த பதிவுகளில் இரண்டாவது இந்தப் பதிவு. 


மச்சுவாடி நகராட்சி நடுநிலைப்பள்ளியில்தான் எப்போதும் குறுவள மையப் பயிற்சிகள் நடைபெறும். அப்படி ஒரு பயிற்சியில் திடீரென ஒருவர் கருத்தாளராக வந்திருந்தார். 

வகுப்பின் தேநீர் இடைவேளையில் வெகு அசட்டையாக வகுப்பில் தாமதமாக நுழைந்த என்னை நிறுத்தியது அவரின் கருத்தூன்றிய வகுப்பு. யாரைப்பற்றியும் கவலையில்லாமல் கரும்பலகையில் குனிந்து எழுதிகொண்டிருந்த அவர் என்னை ஆச்சர்யப்படுத்தினார். 

வியப்பில் நான் பாசத்துக்குரிய ஏட்டையாவைக் கேட்டேன் யார் இவரு? 

இவரா மணவிடுதிப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக இருக்கார். பணியில் சேர்ந்து நாலுமாதமாச்சு இன்னும் ஊதியமே வாங்கவில்லை என்ற அவரது பதில் என்னை அதிர்ச்சியடையவைத்தது. 

நான் ஒரு வருட காலம் சம்பளம் வழங்கப்படாமல் பணியாற்றியிருந்த அனுபவம் இருந்ததால் எத்துனை வலியில் அவர் இருப்பார் என்பதையும் உணர்ந்து பார்த்த அந்த நொடியில் அவர்குறித்த மரியாதையை மனசில்தானாக வந்து உட்கார்ந்தது. 

ஏட்டையாவே அவர் பெயர் சுகு என்றும் சொல்லியிருந்தார். தொடர்ந்த சிநேகமான விசாரிப்பில் அவரது நண்பர் ஆனேன். அன்று தொடங்கிய நட்பு இன்றுவரை தொடர்கிறது. சுகு  இந்தியாவின் பல பகுதிகளில் ஆசிரியராகப் பணியாற்றியிருந்ததைச் சொன்னபோது மகிழ்வாக இருந்தது.

எங்கே எந்த பயிற்சி என்றாலும் இவர் பெயர் அதில் கட்டாயம் இருக்கும். நாங்கள் இருவரும் இணைந்து தமிழகதின் பல ஊர்களுக்கு பயிற்சியாளர்களாக சென்றிருக்கிறோம். கொடுக்கப்பட்ட தலைப்பை உள்வாங்கி அதை தேர்வுக்கு தயார் செய்வது போல தயாரித்து வழங்கும் அற்பணிப்பில் சுகுவை விஞ்ச ஆள் கிடையாது. 

மிக மெல்லிய குரலில் மட்டுமே பேசும் அண்ணாத்தே ஒரு மிக நல்ல வகுப்பாசிரியரும்கூட. ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு வகுப்பில் சொதப்பும் வேலையெல்லாம் கிடையாது. இவர் இருந்த வரை மணவிடுதிப் பள்ளி குறித்த செய்திகள் அனைத்து நாளிதழ்களிலும் தொடர்ந்து வெளிவந்துகொண்டே இருந்தது. 

இப்படி வெளிவருவதில் என்ன சங்கடம் என்றால் அரசு அதிகாரிகளின் டைரியில் கட்டாயம் பள்ளி குறிக்கப்படும், பார்வையிடப்படும்! இதைத் தவிர்பதற்காவே பல பள்ளிகள் தங்கள் பள்ளி செயல்பாடுகளை ஊடகங்களுக்கு கொண்டுவருவதில்லை! குடத்தில் இட்ட விளக்காக இருந்தாலும் பெரும்பாலான பள்ளிகள் சுடர் விட்டு பிரகாசிப்பதை நான் அறிவேன்!

ஒரு பயிற்சிக்கு எப்படி தயாரிக்க வேண்டும் என்கிற அற்பணிப்பை சுகுவிடம் நான் பார்த்து பல முறை வியந்ததுண்டு. மணிக்கணக்கில் இருவரும் பவர் பாய்ன்ட் தயார் செய்துவிட்டு கிட்டத்தட்ட பாதி மயக்கத்தில் ஐஸ்வர்யா ரெஸ்ட்ரான்ட் ஓடி நான்களை விழுங்கியிருக்கிறோம். அந்த நாட்கள்  நினைக்கையில் இன்னும் இனிக்கின்றன!

சில மையங்களை நடந்து மட்டுமே அடையவேண்டும். அத்தகு மையங்களை நீண்ட நடைக்கு பின்னரே அடைய முடியும். கும்மிருட்டில் நட்சத்திரங்கள் கூட இல்லாத இரவில் திருவண்ணாமலையில் எதோ ஒரு சாலை, அதில் விளக்குகள் கூட இல்லை, நடந்து குமரன் உயர்நிலைப்பள்ளியை அடைந்தோம். சோமு அண்ணாவின் கேலிகலந்த பேச்சும் சுகுவின் சிரிப்பும் துணையாக இருக்க ஒரு வழியாக பள்ளியை வந்தது. அங்கே இருந்தவர்கள் ரொம்ப அமைதியாக இங்கே இல்லை அங்கே என்று இன்னும் ஒரு கி.மி நடக்க வைத்தனர். இவ்வளவுக்கும் பின்னர்தான் புதிதாகப் பணியேற்றிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க முடிந்தது. 

இதேபோல் வண்டலூர் அருகே ஒரு நடைப்பயணம், திருச்சி பயணம் என்று பணிக்கப்பட்ட இடத்திற்கெல்லாம் புன்னகையோடு வந்த சுகுவிடம் ஓர் நாள் கேட்டேன். நீங்க ஏன் மேகாலயா அஸ்ஸாம் என்று போய் வேலை பார்த்தீங்க? தமிழ்நாட்டில் வேலை கிடைக்கவில்லையா? 

எம்.ஏ  பி.எட். முடிச்சேன். சாப்பாடுக்கு வழியில்லை, போய்த்தானே ஆகணும் என்று வெகு இயல்பாக  சொன்ன அவர் பதில் என்னுள் எழுப்பிய அதிர்வு அடங்க பல மணி நேரம் ஆனது. கன்னியாகுமாரி பகுதி ஆசிரியர்கள் மேல் தனி மரியாதையும் வந்தது. எல்லோரும்தான் சிரமப்படுகிறோம் அதை எந்தவிதப் போலிப் பூச்சும் இல்லாமல் சொன்ன சுகு அண்ணாவின் இயல்பு அவர்மீது இருந்த மரியாதையை பன்மடங்கு உயர்த்தியது. 

இதேபோல் பல்வேறு பணிகளுக்கு புதுகைக் கல்வித்துறை சுகுவை பயன்படுத்தியிருக்கிறது. சமச்சீர் கல்வி  முறை வந்த புதிதில் அப்போதைய முதன்மைக் கல்வி அலுவலர் திரு.ஆர். பரமசிவம் அவர்கள் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் ஒரு சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்தார். அதன்படி  முப்பது ஆசிரியர்கள் மாவட்டமெங்கும் உள்ள பள்ளிகளில் புதிய கல்வித்திட்டத்தின் சாதகங்களை எடுத்துச்சொல்லி நம்பிக்கையூட்ட பணிக்கப்பட்டனர். இப்படி போகும் இடத்தில் பல்வேறு இடையூறுகள் இருந்தன. குறிப்பாக சில பள்ளிகளில் எதிர்கொண்ட ஆசிரியர்கள் “நாங்கதான் இருக்கோம்ல நீங்க ஏன் வந்தீங்க?” என்று எகிறுவார்கள். அவர்கள் எகிற வேண்டிய இடம் மு.க.அலுவலகம் அல்லது ஆட்சியர் அலுவலகம். அங்கே போனால் என்ன நடக்கும் என்று அவர்களுக்கும் தெரியும். எனவே அப்படி பணிக்கப்பட்ட ஆசிரியர்களை எகிறி தங்களின் ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டனர்! அப்போது நடந்த சில உரையாடல்கள் காட்டமானவை. சுகுவிற்கு அந்தமாதிரி சில  அனுபவங்கள் ஏற்பட்டன. சும்மா உதறிவிட்டு பணியைத் தொடர்ந்தார் அவர். 

மிக நீண்ட நாட்களாக நளபாகத்தை முயற்சி செய்ய விழைந்து இவர் அறையில்தான் குருநாதர் சிவராஜா (இன்னொரு வள ஆசிரியர்) தயவில் சிக்கன் கிரேவி தயார் செய்ய முடிந்தது. இப்படி இவர் அறை என்போன்ற பல்வேறு ஆசிரியர்களுக்கு இளைப்பாறலாக இருந்தது. அந்நாட்களின் மகிழ்வு மட்டுமே மிச்சம். 

கன்னியாகுமரியைச் சேர்ந்த சுகுவிற்கு மிக நீண்ட காத்திருப்பின் பின்னர் தனது வீட்டில் இருந்து இரண்டு மணிநேரப் பயணத்தில் அடையக்கூடிய ஒரு பள்ளியில் பணியிடமாற்றம்  கிடைத்து. 

புதுகை கல்வி மாவட்டம் ஒரு மிக நல்ல ஆசிரியரையும், அற்புதமான வள ஆசிரியரையும் இழந்தது. 

We miss you Mr.Suku!

எங்கே இருந்தாலும் அந்த இடத்தை வெளிச்சமாக வைத்திருப்பீர்கள் என்று தெரியும். தங்கள் பணி தொடர சிறக்க வாழ்த்துக்கள். 

சீக்கிரமே அண்ணியாரின் பணியர்மதல் சிக்கல்கள் தீர்ந்து அரசுப் பணியும் கிடைக்கட்டும். (திருமதி.சந்தியா சுகு, முதுகலைப் பட்டதாரி ஆசிரியையாக தேர்வுற்றும் ஈக்குவலன்சி சான்றுகாக காத்திருக்கிறார். விரைவில் பணிநியமனம் நடக்கட்டும் உங்கள் பிரார்த்தனைகளோடு)
அன்பன் 
மது
அடுத்தது செல்லகராதி சித்தர் கிஷோர் 

Comments

  1. திரு.சுகு அவர்களுக்கு வணக்கங்கள். சிறந்த ஆசிரியர்கள் புதுகையில் நிறைய பேர் இருக்காங்களேனு நினச்சேன், ஒருத்தர் கன்னியாகுமரி சென்றது மகிழ்ச்சி .. ஹாஹாஹா
    அண்ணா, எனக்கு ஒரு சந்தேகம், உங்களைப் பற்றி யார் எழுதுவா?

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் சகோ
      மகிழ்நிறை படிப்பதில்லையா நீங்கள்...
      தனியா ஆள்போட்டு எழுத சொல்லீருக்கேன்...
      :-)

      Delete
  2. நண்பருக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. அனைத்தும் சிறப்பாக நடைபெற வேண்டுகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் அண்ணா

      Delete
  4. சில ஆசிரியர்கள் என்றும் மனதில் நிற்கிறார்கள்! அருமையாக நினைவுகூர்ந்து சிறப்புக்களை பகிர்ந்தமை சிறப்பு!

    ReplyDelete
  5. அன்புள்ள அய்யா,

    திறமைமிக்க ஆசிரியரான திருவாளர். சுகு அவர்களை நண்பராகத் தாங்கள் பெற்றிருப்பதை அறிந்து மகிழ்ச்சி.

    “நீங்க ஏன் மேகாலயா அஸ்ஸாம் என்று போய் வேலை பார்த்தீங்க? தமிழ்நாட்டில் வேலை கிடைக்கவில்லையா?”

    “எம்.ஏ பி.எட். முடிச்சேன். சாப்பாடுக்கு வழியில்லை, போய்த்தானே ஆகணும்” என்று வெகு இயல்பாக சொன்ன அவரின் யதார்த்தமான உண்மை மிகவும் மதிக்கத்தக்கது.

    தொடரட்டும்... மாறுதல் ஆகிப்போனலும்... மாறாமல்... நட்பு தொடரும்...!

    த.ம. 4.

    ReplyDelete
  6. இவர்களைப் போன்றால் சிலரே முன்னுதாரணமானவர்களாக அமைந்துவிடுகின்றார்கள்.

    ReplyDelete
  7. நல்ல நல்ல ஆசிரியர்களை அடையாளப்படுத்துவதற்குத் தங்களுக்கு வாழ்த்துகள்! அருமை...அரசுப் பள்ளிகள் என்றாலே மிகவும் மோசம் என்ற எண்ணத்தை இவர்கள்/உங்களைப் போன்றவர்கள் மாற்றவேண்டும். குடத்திலிட்ட விளக்குகளை, குன்றிலிட்ட விளக்குகள் என்று எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அப்போதுதான் அரசுப் பள்ளிகளைப் பற்றிய நல்ல எண்ணங்கள் மக்கள் மத்தியில் எழுந்து கல்வியில் பணம் விளையாடுவதிற்கு ஒரு செக் வைக்க முடியும்...

    கீதா : அட! சுகு அவர்கள் எங்கள் ஊர்க்காரரா!!!! அதான்!!..கன்னியாகுமரி மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்கும் ஒரு மாவட்டம்...

    ReplyDelete
  8. “எம்.ஏ பி.எட். முடிச்சேன். சாப்பாடுக்கு வழியில்லை, போய்த்தானே ஆகணும்”///


    padikkumpothu unmaiyaana maanavanaka irunthirukkirapolum athutha, velaikuda unmaiyaana arpanippodum engum velai seya kilampi vittar.


    panam samparikkathaan ellarum etho oru thuraiyai therinthedukkirarkal aanal

    antha velaikku niyaayam sekrirkala athuthan santhekam.

    ivarum mun uthaaranamaaka kolla vendiya aasiriyar.
    pathivukku nandrikal sir.

    ReplyDelete
  9. அவரை நேரில் சந்திக்க ஆசை

    ReplyDelete

Post a Comment

வருக வருக