எழுதத் தயங்கிய பதிவுகள்- இனி தொடரும்

பதிவர் சந்திப்பின் அமைப்புக் குழுவில் இருந்ததால் குழுக் கூட்டங்களையும் பதிவுலக ஆதரவையும் கோரி தொடர்ந்து பதிவுகள் இட்டேன்.

சில பதிவுகள் நிகழ்வைப் பாதிக்கலாம் என்ற எண்ணம் இருந்ததே காரணம்.

உங்களின் பேராதரவோடு புதுகை கணினித் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த விழா நல்ல முறையில் நடந்தது.

விருந்தோம்புதல் நிறைவு.

இனி நெடுநாட்களாக என்னுள் உறங்கிக் கிடந்த பதிவுகளை வெளியிட விருப்பம்.

அவை விரைவிலோ, அல்லது நெருங்கிய நண்பர்களின் ஒப்புதலோடோ வெளிவரும்.


நிலைப்பாடுகளில் சில பெருந்திரளுக்கு பிடிக்காமல் போய் அதனால் விழாவிற்கு வராமலோ அல்லது வந்து சட்டையைப் பிடிப்பதற்கோ வாய்ப்பு இருக்கும்  என்ற எண்ணம் எழுந்தது.

அப்படி என்ன நிலைப்பாடுகள் என்று கேட்கிறீர்களா ...

பதிவுலகிற்கே வராத பக்திப் பதிவர்.

எனக்கு கோவில்களைப் பிடிக்கும் ஒருகாலத்தில்! அவை அரசியல் கருவிகளாகவும் சக்திமையங்களாகவும் எனக்கு புரிபட ஆரம்பித்த பின்னர் அவை பிடிக்காமல் போயின.

கவிஞர் மகா சுந்தர் ஒருமுறை கடவுள்னு ஒருத்தர் இருக்காரா என்ற பொழுது நிலவன் அண்ணாத்தே சத்தியமா கிடையாது என்று சொல்லிவிட்டு ....

...
அப்படி இருந்தால் அவனை நான் செருப்பாலே அடிப்பேன் என்றார்.

திடுகிட்ட நான் கவிஞர் சுந்தரிடம் அண்ணே பாருங்கண்ணே கண்ட புத்தகத்தை எல்லாம் படித்துவிட்டு இப்படி பேசுறார் என்று கோபித்தேன்.

எல்லோரும் சிரித்தோம்.

சிலநாட்கள் கழித்து ஒரு மொழிபெயர்ப்பு வேலை, ஒரு நூலை என் பையில் இருந்து எடுக்க வேண்டிய அவசரம். நிலவன் அண்ணா வீட்டில் என் கைப்பையில் இருந்தவற்றை  கொட்டி எடுக்க வேண்டிய நூலை எடுத்து அவரிடம் கொடுத்துவிட்டு மீதத்தை அள்ளி பையில் போட்டுக்கொண்டு வந்தேன்.

மறுநாள் காலை வீட்டில் பையை பார்த்த பொழுதுதான் தெரிந்தது நிலவன் அண்ணாவின் ஒரு நூல் அவசரத்தில் என் பைக்குள் அதுவாக வந்திருந்தது. ஆகா தலை தப்பா நினைதிருப்பாரே என்று பதறி அலைபேசியில் அழைத்துப் பேசினேன்.

அதுனாலே என்ன படிச்சுட்டு கொடுங்க என்றார்.

வாழ்க்கை குறித்த என் பார்வையை, பக்தி குறித்த என் நிலைப்பாட்டை ஒரே அடியாக மாற்றப் போகும் புத்தகம் அது என்று எனக்குத் தெரியாது.

முதல் பகுதியை வாசித்து முடித்தும் உள்ளே எழுந்த கொதிப்பில் அடித்து தள்ளியதுதான் என்னுடைய முதல் சிறுகதை அசுரன் .

ஒரு நூல் நம் நிலைப்பாட்டை மாற்றுமா, சனி தோறும் பெருமாள் கோவிலில் நின்றவனை இன்று அந்தப் பக்கமே தலைவைத்துப் படுக்காத அளவிற்கு மாற்றுமா என்பதெல்லாம் இன்றளவும் வியப்புதான். ஆனால் மாறியிருக்கிறேன் நிறைய ...

பெருந்திறல் மக்களால் சகிக்கவே முடியாத கருத்துக்களை வெளியிட தயக்கத்தோடு நான் தவிர்க்கும் பதிவுகளும் உண்டு.

சவால் விட்டு சொல்கிறேன், கோவில்கள் குறித்து நான் என் மொழி நடையில் கண்ணதாசன் பாணியில் எழுத ஆரம்பித்திருந்தால் இன்று பலகோடிப் பேர் பார்க்கும் வலைப்பூவாக மலர்தரு இருந்திருக்கும். என்னால் இன்றுகூட அப்படி எழுத முடியும்! ஆனால் அந்தப் புத்தகம் என்னை எழுதவிடாமல் செய்கிறது.

அப்படி என்ன புத்தகம் என்கிறீர்களா "காலம் தோறும் பிராமணியம்" பேரா அருணன் அவர்கள் அருளியது!

எட்டு பாகங்களில் வந்திருக்கும் தொகுப்பில் ஐந்தாம் பாகத்தில் பாதியில் இருக்கிறேன்.

இவ்வளவு அற்புதமான சமூக வரலாற்று நூல் இனி வருமா என்றால் சத்தியமாக இல்லை என்பதே என் பதில்.

தற்போது இந்தப் பாணியில் எழுதுவோருக்கு மரணப் பரிசு வந்து கொண்டிருக்கிறதையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

எப்படி எழுத வேண்டும் என்பதற்கு ஈசாப் நல்ல வழியைக் காட்டியிருக்கிறார். சோதித்தறிய விரும்பும் பெருமாள் முருகன்கள் தங்கள் மரண அறிவித்தலை தாங்களே செய்கிறார்கள்.

ஈசாப்புகள் காலத்தை  ஞானத்தை கொண்டு வென்று நிற்பதையும் கல்புர்கிகள் குண்டடிபட்டு சாவதையும் வெறுமே பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களில் ஒருவனாக இருப்பது விதி என்றாலும் அது என் விருப்பம் அல்ல.

பேரா அருணன் அவர்களின் காலம் தோறும் பிராமணியம், பேரா, நெடுஞ்செழியன் அவர்களின் ஆசிவகம், போன்ற நூல்கள் என்னுள் விளைவித்த அதிர்வுகள் இன்னும் என் பதிவுகளில் வரவே இல்லை. 

ஏன், அகோரா காட்டிய கிருத்தவமும் இன்னும் வரவில்லை!(Agora 2009, Movie)

பல நூற்றாண்டுகளாக போலிச் சமூக பீடுகள், மனிதம் மரத்துப் போன பிரிவினைகள் என புரையோடிப் போன உலகில் மனிதம் குறித்த சமத்துவம் குறித்த கருத்துக்கள் எங்கனம் எள்ளி நகையாடப்படும் என்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன்.

பகிரும் வடிவங்களோடு ஒரு உரையாடல் நிகழ்த்திவருகிறேன்.

விரைவில் அந்தப் பதிவுகள் வரும்,  உங்களின் சிலரின் மின் அஞ்சலுக்கோ அல்லது பதிவாகவோ ..

சந்திப்போம்

அன்பன்
மது

Comments

  1. மது எழுதுவதில் ஏன் இந்த தயக்கம் உங்கள் மனதில் உள்ளதை ஒளிவு மறைவு இல்லாமல் எழுதுங்கள். உங்களின் கருத்துகளால் பலரின் மனதை தெளிவடைய வைக்கலாம் அல்லது உங்கள் கருத்துக்கள் அவர்களுக்கு ஒத்து போகாமல் இருக்கலாம் .எதுவாக இருந்தாலும் எழுத தயங்காதீர்கள். பெரியார் அவரின் கருத்துகளை சொல்ல தயங்கி இருந்தால் தமிழகத்தில் இந்த அளவு பகுத்தறிவு ஏற்பட்டு இருக்குமா என்ன?

    அதனால்தான் சொல்லுகிறேன் தயங்காமல் எழுதுங்கள்.. நீங்கள் எழுதும் கருத்துக்கள் எனக்கு ஒத்துப் போகாமல் கூட இருக்கலாம். ஆனால் மது மைதில் குழந்தைகளின் மீது உள்ள அன்பும் மரியாதையும் என் மனதில் என்றும் மாறாது....

    ReplyDelete
  2. தமிழ்மணத்தில் நான் யாருக்கும் ஒட்டு போடுவதில்லை காரணம் அதில் போடும் போது ஒவ்வொரு முறையும் லாக் செய்து போட வேண்டி இருப்பத்தால் ஆனால் இன்று உங்கள் தளத்திற்கு முதல் ஒட்டை போட்டு இருக்கிறேன் காரணம் உங்கள் கருத்தை உலக அறிய செய்யுங்கள் என்பதால்தான் பிள்ளையார் சுழி போட்டு கடவுள் பக்தியுள்ளவர்கள் ஆரம்பிப்பது போல உங்களுக்கு நான் தமிழ்மணத்தில் ஒட்டுப் போட்டு ஆரம்பித்து இருக்கிறேன் ஹீஹீ இனிமேல் சூடு பறக்கட்டும் உங்கள் தளத்தில்

    ReplyDelete
  3. சிறந்த நல்ல பதிவுகளை எதிர்பார்க்கலாம்
    தொடருங்கள்
    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
  4. அருமை! அருமை! உங்களிடமிருந்து இதனைத்தான் எதிர் பார்த்தேன். உங்களிடம் இருக்கும் அந்த படைப்புணர்வுகளை அள்ளித் தாருங்கள். முகநூல் பகிர்வு என்று எத்தனை நாட்களுக்குத் தான் உங்கள் உள்ளத்து உணர்ச்சிக் கவிதை நடையை மறைத்து வைக்க முடியும்?

    ReplyDelete
  5. அன்புள்ள அய்யா,

    "காலம் தோறும் பிராமணியம்" பேரா அருணன் அவர்களின் நூல்கள் தங்களுக்கு ஏற்படுத்திய மாற்றத்தை தங்களுக்கே உரிய நியாயமான ஆதங்கத்தோடு வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.

    தந்தை பெரியார்கூட ஒரு காலத்தில் இறைபக்தி மிக்கவராகத்தானே இருந்திருக்கிறார். அவரின் குடும்பம் அவர் வளர்ந்த சூழல் அப்படி. சாமியாராக வேண்டித்தானே காசிக்குப் போய் இருக்கிறார். அங்கு அவர்கள் செய்யும் அட்டூழியங்களைப் பார்த்து, பிராமணிய ஆதிக்கத்தை வெறுத்துத்தானே பிறகு பகுத்தறிவின் துணையுடன் கடவுள் இல்லை... கடவுள் இல்லவே என்ற முடிவுக்கு வருகிறார்.
    நன்றி.
    த.ம. 2

    ReplyDelete
  6. காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  7. “போற்றுவோர் போற்றட்டும் புழுதி வாரித்
    தூற்றுவோர் தூற்றட்டும் தொடர்ந்து சொல்வேன்
    ஏற்றது ஒரு கருத்தைஎன துள்ளம் என்றாால்
    எவர்வரினும் எதிர்கொள்வேன் நில்லேன் அஞ்சேன்“
    --பக்திக் கவிஞர் கண்ணதாசனுக்கு நன்றி.

    ReplyDelete
  8. வாராத பதிவுகளை வெளிக்கொணருங்கள். மாற்றுக்கருத்துக்களை அறிந்துகொள்ள வாய்ப்பாக அமையும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. வணக்கம் சகோ..ஏன் தயக்கம்..என்று யோசித்து காரணம் இருக்கும்னு நினைத்தேன்...சரிதான் நான் நினைத்தது....அமைதிக்கு பின் வரும் தெளிவு நிரந்தரமானது.....எல்லாவற்றையும் ஏற்கும் பக்குவத்தை நமக்கு அது தரும்..

    ReplyDelete
  10. பேரா அருணன் அவர்களின் நூலினை வெளியிட்ட பதிப்பகத்தின் பெயரைத் தெரிவியுங்களேன் நண்பரே
    காத்திருக்கிறேன்
    நன்றி
    தம +1

    ReplyDelete
  11. ***அப்படி இருந்தால் அவனை நான் செருப்பாலே அடிப்பேன் என்றார்.***

    கடவுள் என்ன செய்தாரு பாவம்? அவரை ஏன் போட்டு அடிச்சுக்கிட்டு..அவரை உருவாக்கியதே மனிதகுலம்தானே? தனது தேவைக்காக! தன் வாழ்க்கையை, தான் செய்யும் எல்லாவற்றையும் நியாயப்படுத்த! தன்னைத்தானே கடவுளை சமாதானப் படுத்தி ஏமாத்திக்கொள்ள!. இதைப் புரிந்துகொண்டாலே எல்லாம் புரிந்துவிடும். ஆனால் இந்த சின்ன விசயத்தைப் புரியவைப்பதென்ன அவ்வளவு எளிதா என்ன? அப்பாவி பக்தர்களுக்கும், அந்தணர்களுக்கும் கொலைவெறி வந்துடுமேண்ணா!

    நீங்க டைரியில் எழுதுவதையெல்லாம் பதிவா எழுதி விட்டீங்கனா... கொஞ்சம் யோசிச்சுச் செய்ங்க, மது! :)

    ReplyDelete
  12. வணக்கம்
    தொடருங்கள்... படிக்க ஆவலாக இருக்கோம்... த.ம 7
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  13. என்னை மிகவும் பாதித்த ,பகத்சிங்கின் 'நான் ஏன் நாத்திகன் ஆனேன் 'நூலை நீங்களும் வாசித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் !

    ReplyDelete
  14. ஆவலாகவே உள்ளேன் தயக்கம் வேண்டாம் உங்கள் மனதில் பட்டதை சொல்லப் போகிறீர்கள் நாம் மனதில் படுவது எல்லாமே எப்பவும் சரியாகவும் இருப்பதில்லை பிழையாகவும் இருப்பதில்லையே. கேள்விகள் எழும்போது தானே நியாயம் தெளிவு எல்லோர்க்கும் பிறக்கும். இதையிட்டு சங்கடங்கள் எவருக்கும் தோன்றவேண்டிய அவசியம் இல்லை. அப்படி நேரவும் கூடாது. சர்வ சாதாரணமாக சரி பிழைகளை ஆராயலாம். தொடருங்கள் சகோ வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  15. வாருங்கள் மது உங்கள் எண்ணங்கள், கருத்துகளோடு. வரவேற்கின்றோம். ஏன் தயக்கம்? உரக்கப் பேசுங்கள். தவறே இல்லை. ஏற்பவர்கள் ஏற்கட்டும். ஏற்காதவர்கள் ஏற்காமல் போகட்டும். போற்றுபவர்கள் போற்றட்டும். தூற்றுபவர்கள் தூற்றட்டும்.

    கருத்து வேறுபாடுகள் எழுவது என்பது உலகில் நடப்பதுதானே. அதனால் தூய்மையான அன்பும் நட்பும் முறிந்துவிடுமா என்ன? அதன் அன்பும் நட்பும் உண்மையான புரிதல் இருந்தால்? அப்படி அது முறிந்தால் அது உண்மையான நேர்மையான அன்பே இல்லையே கஸ்தூரி. உங்கள் பதிவு எப்படியாக இருந்தாலும், உங்கள் மீதும், சகோ மைதியிலியின் மீதும், உங்கள் குழந்தைங்கள் (நிறை எங்கள் தோழியாகிப் போனாள்!!!!!!) மீதான அன்பும் நட்பும் என்றுமே இருக்குமே அல்லாமல் மாறாது..கஸ்தூரி. பதிவுகள் வேறு அன்பும் நட்பும் வேறு. இதைப் பரித்துப் பார்க்க முடியாது என்றால் அது மெச்சூர் நட்பே அல்ல....இதை இங்கு நாங்கள் உரக்கச் சொல்லிப் பதிகின்றோம்...பொளந்து கட்டுங்கள் கஸ்தூரி!!! ஆவலுடன் காத்திருக்கின்றோம்...

    ReplyDelete
  16. அட! மதுரைத் தமிழனும் எங்களை ப் போல கிட்டத்தட்ட அதே!

    ReplyDelete
  17. மனதில் உள்ளதை தைரியமாக எழுதிவிடுங்கள்! மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் உங்கள் கருத்துக்களை நீங்கள் சொல்வதில் தவறேதும் இல்லை! காலம் தோறும் பிராமணியம் என்ற நூலை வாசிக்க என்னுள்ளும் ஆவல் புகுந்துவிட்டது. எங்கு கிடைக்கும்? தகவல் சொல்ல முடியுமா? நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மதுரையில் உள்ள வசந்தம் வெளியீடு. நூலாசிரியர் அருணன் தற்போது சென்னையில்தான் இருக்கிறார் (புதியதலைமுறை தொலைக்காட்சியில் போட்டுவாங்கி தூள் கிளப்புகிறாரே? அவரேதான்..) பதிப்பகம் - vasanthamtamil@yahoo.co.in
      இப்படி ரெண்டுபேரும் பத்தவைக்கக் கிளம்பிட்டீங்களே மது? இருந்தாலும் நல்ல் நெருப்பைத்தான் வைத்திருக்கிறீர்கள்!

      Delete
  18. வரப்போகும் பதிவுக்காக காத்திருக்கிறேன் சார்...

    ReplyDelete
  19. காலம்தோறும் ‘பிராமணியம்’ என்று நூலின் பெயர் இருந்தாலும், , ‘காலம்தோறும் ஜாதியம்’ என்பதே சரி என்று நினைக்கிறேன். ஏனெனில் பிராமணியத்தை அதிகம் தூக்கி பிடித்தவர்கள், இன்றும் தாங்கிக் கொண்டு இருப்பவர்களில் பிராமணர் அல்லாதவர்களே அதிகம்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா, நூலின் முகவுரையில் இதுபற்றிப் பெரிய ஆய்வே நடத்தியிருக்கிறார் ஆசிரியர் அருணன். இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே ஜாதிய உணர்வின் தோற்றம் வளர்ச்சி எல்லாமே பிராமணியம்தான் என்பதால் அந்தத் தலைப்பு..புத்தகத்தை வாசித்தால் ஒப்புக்கொள்வீர்கள்

      Delete
  20. புத்தகம் பற்றிய தகவலும் தந்திருக்கலாமே மது.

    உங்கள் கருத்துகளை தயக்கமில்லாது எழுதுங்கள். உங்களுக்கு சரி எனப் படுவதை நீங்கள் எழுதப் போகிறீர்கள். இதில் தயக்கமேன்.

    ReplyDelete
  21. அவர் எழுதிய சரயு என்ற புத்தகமும் ஒரு புது உலகைக் காட்டும்...நல்ல பதிவு...http://swthiumkavithaium.blogspot.com/

    ReplyDelete
  22. தொடர்கிறேன்.


    நன்றி

    ReplyDelete
  23. எட்டு பாகங்கள் கொண்ட மாபெரும் ஆய்வுநூல் இது என்பதையும் நூலின் சாரத்திற்கு பாகங்களின் தலைப்புகளையாவது கொடுத்திருக்கலாம் மது. அட்டைப் படங்களில் சிலவற்றை அங்காங்கே எடுத்துப் போடுங்கள். நல்லது தொடரவேண்டுகிறேன்.

    ReplyDelete
  24. நான் இந்தத் தளத்திற்கு வந்தேன் என்று சொல்வதற்காக இந்த கமெண்ட்..இனி தொடர்வேன்...என் வலை தளமும் பார்க்க வாருங்கள்.http://chinnavalsurya.blogspot.in/2015/11/blog-post.html...நன்றி

    ReplyDelete

Post a Comment

வருக வருக