கீழடி -தமிழர் தொல் நாகரீகம்_3



இரண்டாம்  உலகப் போரின் பொழுது நாட்டின் தானிய இருப்பு அபாயகரமாக குறைய மக்கள் அன்றாட உணவுக்கே அல்லல்படும் நிலை.


ஆனால் ஒரு இடத்தில் தானியங்கள்  குவிக்கப்பட்டிருந்தன. 

அரசு வேறு வழியில்லாமல் இங்கே இருக்கும் தானியங்களை எடுத்துக் கொள்கிறீர்களா என மக்களைக் கேட்க அவர்களோ வேண்டாம் என மறுத்துவிட்டனர்.

ஆம் தானியக் குவிப்பு விதை ஆய்வுப் பண்ணையில்  ஆய்வுக்காக இருந்த கையிருப்பு. 

மக்கள் சொன்னார்கள் அது எங்கள் எதிர்கால சந்ததியின் நம்பிக்கை. அதை எங்கள் உணவாக்கிக் கொள்ள எங்களுக்கு விருப்பம் இல்லை. 

அவர்கள் ரஷ்யர்கள், அந்த நாடு ரஷ்யா. 

இன்னொரு புரட்சியின் பொழுது ஏன் உங்கள் தெருக்களில் இருக்கும் நினைவுச் சின்னங்களின் மீது உங்கள் வெறுப்பைக் காட்டவில்லை என்ற பொழுது அவை எங்கள் நாட்டின் அடையாளங்கள் அவற்றை எப்படி நாங்கள் தகர்ப்போம் என்று திரும்பக் கேட்டவர்கள் அவர்கள். 


நாம் எப்படி இருக்கிறோம்?

சித்தன்ன வாசல் ஓவியங்களை சுரண்டிப் பார்க்கிறோம், திருமலை நாயக்கர் மகாலில் நமது ஆசைக் காதலின் பெயரை எழுதுகிறோம், தாஜ் மகாலை சுரண்டி அதன்  ஒரு பளிங்குச் சில்லை நினைவுக்கு எடுத்து வருகிறோம்.

பொதுத்தளத்தில் இது குறித்த விவாதங்களும் விழிப்புணர்வு செயல்பாடுகளும் அவசியம்.

கீழடியின்  தொல்கால வேதித் தொழிற் சாலை குறித்து இன்னமும் பெரும்பான்மை மக்கள் அறியாமல் இருக்கிறார்கள்.

மூன்று பதிவுகள் எழுதிய நானே கீழடியை தூர்க்கப் போகிறார்கள் என்ற செய்தி அறிந்தவுடன்தான் அங்கே போனேன்.

நண்பர் சீ.அ.மணிகண்டன் சில தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

ஏன் மூட வேண்டும் ?

கீழடிப் பள்ளிச் சந்தை என்பது நூற்றி நாற்பது ஏக்கர்கள் பரந்த பரப்பு. பல ஆண்டுகளாக தனியார் பட்டா நிலமாக இருந்துவருகிறது. தற்போது அகழ்வு நடந்த இடத்தின் வாரிசு வழி உரிமையாளர் திரு. சந்திரன் அவர்களுடன் பேசினோம்.

ஒரு கூரையை குழிகளின் மீது அமைத்து பார்வையாளர்களிடம் நூறுரூபாய் வசூல் செய்தால் கூட லாபகரமாக இருக்குமே ஏன் மூடச் சொல்கிறீர்கள்?


அதெல்லாம் வேண்டாம். எனக்கு மூடிக் கொடுத்துவிட வேண்டும்.

ஏங்க இந்த இடம் எவ்வளவு  முக்கியமான இடம் தெரியுமா இதை மூடச் சொல்கிறீர்கள் என்று மணிகண்டன் வினவ.

சார் இது எங்கஅப்பா இடம். நாங்க ஐந்து பங்காளிகள். இடத்தைக் குறித்த எந்த முடிவையும் நான் மட்டுமே எடுக்க முடியாது என்றார்.

தொடர்ந்த உரையாடலில் அவர்கள் திருப்திப்படும் ஒரு தொகையைத் தந்தால் இடத்தை கொடுக்க தயராக இருப்பதாகவே மறைமுகமாகச் சொன்னார்.

அவருக்கு தனது நிலத்தை  தினமும் எங்கிருந்தோ வந்து பார்பவர்கள் மீதும் மரியாதை இருக்கிறது.

அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிமனித சொத்துரிமை மட்டுமே இங்கே சவால். முதலில் ஒரு ஒப்பந்தத்தில் அகழ்ந்துவிட்டு மூடிவிடுகிறோம் என்று சொன்னவுடன்தான் அகழ்வுக்கு அனுமதி கிடைத்திருகிறது.

அகழ்வில் வெற்றி கண்டவுடன் பேச்சு மாறுவது சரியில்லைதானே.

அத்துடன் இல்லாமல் இவரது நிலத்தை அகழ்ந்துவிட்டு அருகே இருக்கும் தோட்டத்தில் அகழ்வுப் பணிக்கு அனுமதி கேட்டால் அவர்கள் எப்படி நிலத்தைத் தருவார்கள்?

கீழடியின் அகழ்வு நடந்த பரப்பு ஐந்து சதவிகிதம் மட்டுமே என்கிற பொழுது அருகே அகழ்வைத் தொடர வேண்டிய அவசியமும் இருக்கிறது.

இப்படிப்பட்ட நடை முறைச் சிக்கல்களால் மட்டுமே அகழ்வுக் குழிகள் மூடப் பட இருக்கின்றன.

இதற்குள் வேறு ஏதும் தமிழர் எதிர்ப்பு, தமிழர் வரலாற்றுத் திரிபு இருப்பதாகத் தெரியவில்லை என்றார் சீ.அ. மணிகண்டன்.

கனத்த மனதுடன் மீண்டும் மீண்டும் அந்த தொழிற்சாலையை பார்த்தவாறே வந்தோம்.

குழந்தைகளை அகழ்வுக் குழிகள் மூடப் படும் முன்னர்  ஒருமுறை அழைத்து செல்லவேண்டும் என்று முடிவெடுத்தேன்.

பள்ளிக் குழந்தைகளை அழைத்துக் செல்ல ஒரு மிக நீண்ட அனுமதிக் கடிதத்தை புரியாத புதிர் திட்டைக்குள் அனுப்பி திரும்பப் பெறவேண்டும்.

அனுமதி இல்லாமல் என்றால் சாத்தியம்தான்.

குறைந்த பட்சம் எனது குழந்தைகளாவது பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

மண்ணிட்டு நிரப்பும் முன் பார்க்க இயலுமா ?

அல்லது வழக்கம் போல திட்டத்துடன் நின்று போகுமா இந்தப் பயணம் என்கிற கேள்விகள்.

ஒருவழியாக பார்த்தோம்.

ஆனால் ஏன் பார்த்தோம் என்கிற நிலையில்தான் இருந்தது அகழ்வுக் குழிகள்.
பக்கத்து நிலத்தின் உரிமையாளர் ஒருவரையும் பார்த்தோம்.

நீங்க நிலத்தை அகழ்வுப் பணிக்கு கொடுப்பீர்களா என்ற போது பளிச்சென பதில்  சொன்னார்

நோ சான்ஸ்.

தொடர்வோம்

அன்பன்
மது. 

Comments

  1. அரிய விடயங்கள் தொடர்கிறேன் தோழரே...
    த.ம.2

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி தோழர்

      Delete
  2. வேதனையான விஷயம்..... அடுத்த பயணத்தில் அங்கே வர விருப்பம். அதற்குள் மூடி விடுவார்களா என்று தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. இணையமெங்கும் விரவியிருக்கும் படங்களை பார்த்துக்கொள்ளுங்கள் தோழர்..
      வேறு வழியில்லை
      வரிகளை அடிக்கும் பொழுது இதயம் ஒருமுறை நின்று துடிக்கிறது..

      Delete
  3. முதல் இரு பகுதிகள் படிக்க வேண்டும்! படித்துவிட்டு வருகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. வருக சுரேஷ் ஜி
      பதிவர் ஒருவர் தொடர்ந்து பத்திரிக்கைகளில் எழுதுவது மகிழ்வு..
      வாழ்த்துகள்
      தொடருங்கள்

      Delete
  4. மூன்று பகுதிகளையும் படித்தேன் நண்பரே! வயிறு எரிகிறது. அரசியலாளர்களின் ஒருநாள் வருகைக்குப் பாதுகாப்பு, விழா ஏற்பாடு, கொண்டாட்டம் என எத்தனையோ இலட்சங்களைக் காற்றாய்ப் பறக்க விடும் இந்நாட்டில், தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக நாடாளுமன்றத்தை நாட்கணக்கில் முடக்கிப் போட்டு கோடிக்கணக்கில் பணத்தை வீணாக்கும் நாட்டில், தமிழர்களின் பழம்பெரும் அடையாளத்தை இவ்வளவு தலையாய வரலாற்றுக் கருவூலத்தைப் பாதுகாக்க ஓரிரு கோடிகள் செலவு செய்யக்கூடாதா? இதே போன்ற வடநாட்டு வரலாற்றிடங்களான அரப்பா, மொகஞ்சதாரோ போன்றவையெல்லாம் பொத்திப் பாதுகாக்கப்படவில்லையா? கொடுமை! உணர்வாளர்கள் யாராவது அருள் கூர்ந்து நீதிமன்றத்தை நாட முயற்சி செய்யுமாறு இரு கரங்கள் கூப்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. நீதிமன்றம் தடை உத்தரவுதான் போட முடியும்.

      மூடுவது என தொல்பொருள் துறை முடிவெடுத்த பின்னர் ...வேறு வழியில்லை தொடர்கிறேன் அடுத்த பதிவில்

      Delete
    2. மறுத்துப் பேச வேண்டியிருப்பதற்காக வருந்துகிறேன் நண்பரே! எனக்கென்னவோ அப்படித் தோன்றவில்லை. நாட்டின் முதன்மையான வரலாற்றுச் சுவடுகளுள் ஒன்று எனும் வகையில் இதைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில, நடுவண் அரசுகளுக்கு ஆணையிடக் கோரி பொதுநல வழக்குத் தாக்கல் செய்தால் ஏதேனும் விடிவு பிறக்க வழியுண்டு என்றே எண்ணுகிறேன். மேலும், இது ஒன்றும் அரசுரீதியான கொள்கை முடிவு இல்லையே, நீதிமன்றம் தலையிட முடியாது எனச் சொல்வதற்கு?

      Delete
  5. அருமையான தகவல்
    தொடருங்கள்

    ReplyDelete
  6. மகிழ்சசி தருகின்ற,அதே சமயம் வேதனை தருகின்ற பதிவு கீழடி பற்றியது. தொடர்ந்து படித்துவருகிறேன். நானும் நேரில் சென்று பார்த்தேன். நம் வாழ்நாளில் நம் கண்கள் முன்பாக தோண்டப்படும் வரலாறு, மூடப்படவுள்ளதே என நினைக்கும்போது வேதனையாக உள்ளது.

    ReplyDelete

Post a Comment

வருக வருக