மாண்புமிகு மகளிர்-ஓவியர்கள்

Pan Yuliang aka Zhang Yuliang (22 May 1899 – 1977)

பான் யுலியாங் என்கிற பெண்தான் சைனாவின் ஓவியர்களில் முதல் முதலாக ஐரோப்பிய பாணியைக் கொணர்ந்தவர். இவரது வாழ்வு நாவலாகவும் திரைப்படமாகவும் வந்திருக்கிறது. சாதனைப் பெண் என்று மட்டுமே நினைத்திட வேண்டாம். இவரது கடந்துவந்த பாதை முட்கள் நிறைந்தது. நம்பவே முடியாத வாழ்வு இவரது. 

1899இல் சீனாவின் ஜியாங்சு பகுதியில் பிறந்த இவர் சிறிய வயதிலேயே பெற்றோரை இழந்தவர். இவரது மாமா இவரை ஒரு விபச்சாரவிடுதிக்கு விற்றுவிட அங்கே இவருக்கு பல்வேறு கொடுமைகள் நிகழ்த்தப்பட்டது. விபச்சாரியாக பயிற்சி பெறுவது என்பது கொடுமையானது. ஒரே குவளை மருந்தில் இவரது கருத்தரிக்கும் திறனை நீக்கிவிட்டு தொழிலில் தள்ளினார்கள் என்றால் இவரது நிலையை யோசித்துக்கொள்ளுங்கள்.

விடுதிக்கு வந்த பான் ஜான்ஹுவா என்கிற சுங்க அதிகாரியின் கவனத்தைப் பெற்றார். இந்த சுங்க அதிகாரி இவரை விபச்சார விடுதியில் இருந்து விடுவித்து இரண்டாவது மனைவியாக்கிக்கொண்டார். இதோடு இல்லாமல் இவரை கல்வி கற்க அனுமதித்தார். 1920இல் ஷாங்காய் நகரில் இருக்கும் ஓவியக் கல்லூரியில் பயிற்சி பெற்றார். இங்கே கிடைத்த பட்டத்துடன் மேற்படிப்பிற்காக காதல் கணவரின் உதவியால் பாரிஸ் சென்றார்.

1925இல் இத்தாலிய கல்வி உதவித் தொகை கிடைக்க ரோமன் ராயல் ஆர்ட் அகடமியில் பயிலும் வாய்ப்பும் கிடைத்தது. சைனாவின் ஓவியப் பேராசான் லு ஹசுவின் அழைப்பின் பேரில் ஷாங்காய் ஓவியப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்ற சைனா திரும்பினார். நான்ஜிங்கில் இருக்கும் தேசிய மையப் பல்கலைக் கழகமும் இவரை ஆசிரியராக இருக்க அழைத்தது. தொடர்ந்த ஆண்டுகளில் இவரது ஓவியக் கண்காட்சிகளை ஐந்துமுறை நடத்தினார். மக்களால் புதுமையின் தூதுவர் என்று அழைக்கப்பட்ட இவரது ஓவியங்கள்  சைனாவில் இருந்த கலை விமர்சகர்களிடமும் அரசு அதிகாரிகளிடமும் கடும் அதிர்வை ஏற்படுத்தியது. இவரது ஓவியங்களில் பெண்கள் நிர்வாணமாக வரையப்பட்டிருந்ததால் எழுந்த அதிர்ச்சி இது.

இது சரிப்பட்டு வராது என்கிற முடிவிற்கு வந்த பிறகு பான் மூட்டை முடிசுகளைக் கட்டிக்கொண்டு 1937இல் பாரிசுக்குத் திரும்பினார். பரிசின் புகழ்  வாய்ந்த  ஓவியப்  பள்ளி ஒன்றில் ஆசிரியராக இணைந்த இவரது கடைசி நாற்பது ஆண்டுகளும் பாரிசிலேயே கழிந்தன.

சீனாவில் இருந்து பாரிசில் தஞ்சமடைந்திருந்த ஓவியர்கள் பலரும் பான் யுலியாங்கை சீன ஓவியர்களின் சங்கத்தின் தலைவியாக தேர்ந்தெடுத்தனர். பான் யூலிங்கின் ஓவியங்கள் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் கண்காட்சியில் வைக்கப்பட்டன.


இவரது மரணத்திற்கு பிறகு இவரது பல்வேறு ஓவியங்களை சீனா அரசு விலை கொடுத்து வாங்கி தன் நாட்டிற்கு கொண்டு சேர்த்தது.
வாழ்வின் சூன்யங்களில் இருந்து சில பெண்கள்தான் தைரியமாக வெளிவருகிறார்கள். அவர்களில் பான் யுலியாங் தனித்துவம் மிக்கவர். இவரது வாழ்வு ஓவியத்தால் துரத்தப்பட்ட ஆன்மா என்கிற தலைப்பில் திரைப்படமாக வந்திருக்கிறது. மிக அற்புதமான திரைப்படம் அது.

சந்திப்போம்
மது 




Comments

  1. அருமையான பதிவு

    ReplyDelete
  2. அருமையான பதிவு! உண்மைதான் ஒரு சில பெண்களே வெளிவருகின்றனர். பலரும் தைரியமின்றித் தன்னை மாய்த்துக் கொள்கின்றனர்...இல்லை என்றால் சூனியம் அவர்களை விழுங்கிவிடுகின்றது..நல்லதொரு பகிர்விற்கு மிக்க நன்றி

    ReplyDelete
  3. Nice sir we expect like this only sir great☺☺☺☺

    ReplyDelete
  4. அருமையான பகிர்வு. தனித்துவம் வாய்ந்த பெண்மணி...

    ReplyDelete
  5. அருமை. நல்ல பல தகவல்கள்.

    ReplyDelete

Post a Comment

வருக வருக