மெரீனாவில் எழுந்து வீதியில் விளைந்த கவிதை selvakkumar kavithai

வீதி கலை இலக்கியக் களத்தில் பங்களிப்பு தருமாறு கவிஞர் மீரா செல்வக்குமார் அவர்களை வேண்டினேன்.

நேற்று அரங்கில் அவர் வாசித்த பொழுதே அனைவரையும் ஆகர்சித்த கவிதையை நீங்களுமே படிக்கலாம்.







நூறு இளைஞர்களை

கேட்ட

விவேகானந்தரே..

லட்சம்

விவேகானந்தரை

கொடுத்திருக்கிறோம்.


தலைவாரிப்

பூச்சூட்டி

தம் பிள்ளை

அனுப்பிவிட்டு

தாயெல்லாம்

கிளம்பிவிட்டார்..


அதிகார கண்களுக்கு

சொப்பனங்கள்

வாராத

ஒரு வார இரவுகளில்..


கற்பனைகள்

சிதைத்துவிட்டு

கடும் பயத்தை

விதைத்துவிட்டோம்.


படகு மறைவுகளில்

படர்ந்திருந்த

பாவங்களை..

குப்பையள்ளி

கொளுத்திவிட்டார்..

பாதகத்து

போலிகளை

மயிர்பிடித்து

உலுக்கிவிட்டார்..


என் பிள்ளை

அவர் பிள்ளை

பெண்பிள்ளை

எல்லாமே

நம் பிள்ளை

ஆகிவிட்டார்..

அலை கொஞ்சும்

கரைவெளியில்

காவியமே

பாடிவிட்டார்..


கொள்ளைச் சுனாமி

என்னும்

கொடும்பாவம்

தொலைப்பதற்கு..

அலையாலே

கால் கழுவி

கடல்கரைத்த

கடந்த வாரம்...

நடந்த கதை

அறிவீர்கள்..


நிகழ்ந்த கதை

நான்

சொல்வேன்...


காந்தி சிலை

சிரித்த கதை..


கண்ணகி தலை

முடித்த கதை..


கல்லறையில்

கடிகார சத்தத்தை

நிறுத்திவிட்டு..

செவி குவித்து

சிறுவரெல்லாம்

சீறியதை

ரசித்த கதை...


புதைக்கத்தான்

கரைவெளியா?

விதைத்து

விட்டார் வரலாற்றை..

வீரியமாய்

விளைச்சல் வரும்..


சிறுபிள்ளை

வேளாண்மை

வீடு வாரா

என்பார்கள்..

என் பிள்ளை

வெற்றி பெற்றான்..

விவசாயி

தினம் சாகும்

விபரீதம்

தெரிந்து கொண்டான்..


பாலெடுத்து

அபிஷேகம்

செய்துவிட்ட

பாவத்தை...


பாட்டிலுக்குள்

அடைபட்ட

பெருநதிகள்

ஈரத்தை..


அரிதார முகங்களிலே

தங்கிவிட்ட

வேடத்தை..


கரைவேட்டி

மூடிவைத்த

கரையான

தேசத்தை..


புரையோடிப்

போயிருந்த

இன்னும் பல

நாற்றத்தை..


ஒன்றாகிப்

புரிந்துவிட்டான்..

நன்றாம்

இது தொடர்ந்தால்

நாளையே

நாம்

வல்லரசு..


கடைக்கோடி

குமரியிலும்..

கடல் கடந்த

தேசத்திலும்..

தமிழ் பேசும்

மனிதர் கூட்டம்

தானாகச்

சேர்ந்துவிட்டார்..

அமிழ்தினிக்கும்

மொழியாலே

அகிலத்தின்

துயில் கலைத்தார்..


மேடையில்லை..

மது இல்லை

மயக்கும் ஒரு

உரையில்லை..


வெளுத்த ஆடைக்

கூட்டமில்லை..

கொளுத்தாத

கொடுமையில்லை..


மாலைச்சூரியன்

மங்குலில்

மறைந்து

எம் காளையர்

கரங்களின்

கைப்பேசி

உதித்துவிட்டான்..


காளைகள்

தெளிந்த கதை..


கரைவேட்டி

மறைந்த கதை..


காவிகள்

கிழிந்த கதை..

காவியமாய்

மிளிர்ந்த கதை..


உலகத்து

ஊடகங்கள்

உருமாறிப்

போன கதை..


உள்ளிருந்தே

உருக்குலைத்த

உளுத்தர்களின்

உண்மைக்கதை..


காவலர்கள்

எரித்த கதை..

கட்டின்றி

புனையும் கதை..


குப்பத்து மனிதரெல்லாம்

கோபுரமாய்

உயர்ந்த கதை..


பேதையெல்லாம்

அடிவாங்க

பேடியர்கள்

ரசித்த கதை..

ஒரு

பெருங்கிழவி

கரைமணலில்

பிள்ளைகளை

காத்த கதை..


கல்லெடுத்து

காவலர்கள்

காட்டி நின்ற

வீரத்தை..

வாகனங்கள்

மீது கொண்ட

வஞ்சினத்தின்

கோரத்தை..

ஆட்டோக்கள்

தீப்பிடிக்க

ஆசைப்பட்ட

அவலத்தை..

பெண்ணொருத்தி

வைத்ததனால்

குமுறியழும்

குடிசைத்தீ

துயரத்தை..


மாட்டுக்குப்போராட

வந்த ஒரு

கூட்டத்தை..

மாடெனவே

நினைத்துவிட்ட

மனித மன

ஊனத்தை..

நாடென்றால்

அவருமென்ற

மறந்துவிட்ட

ஞானத்தை..


காணொளியில்

காணுகிறோம்

சமூகத்தின்

காயத்தை..

காலம்

சரிசெய்து

நிகழ்த்தும்

ஒரு மாயத்தை...


தை

தை

தை என

குதித்த ஒரு வீரத்தை..

வரிகளிலே

எழுதிவிட்டு

துடைக்கின்றேன்

ஈரத்தை.

கவிஞர் செல்வா 
நான் ஒன்று சொல்வேன்  

Comments

  1. வாவ்..... அருமை....

    கடலோரக் கவிதை சொல்லும் கதை... பாராட்டுகள் செல்வா.....

    ReplyDelete
  2. அருமையான வரிகள் செல்வா..இளைஞர்கள் மற்றும் மக்களின் விறுகொண்டெழுச்சிக்குச் சமர்ப்பணம் என்றிடலாமோ...இன்று எம்மை நீங்கள் தீ வைத்து அடக்கியது போல் இருந்தாலும் உள்ளே கனன்றுகொண்டுதான் இருக்கிறது....இனியும் எழுவோம் என்று அரசியல்வாதிகளுக்கு ஓர் எச்சரிக்கையாகவும் இருக்கிறதுதானே....இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி கஸ்தூரி.

    ReplyDelete
  3. கவிஞர் மீரா.செல்வக்குமார் அற்புதக் கவிஞர் என்பதை நானறிவேன், அவரது கவித்திறத்தை அறியவைத்த வீரத்தை, அதன் இறுதி சோகத்தை, அதைக்கண்ட வீதிக் கூட்டத்தை, நீங்கள்கண்டு மகிழ்ந்ததை, நான் காணாததை இங்குக் கொண்டு தந்ததைக் கண்டு மகிழ்ந்ததை எப்படிச் சொல்ல? நன்றி

    ReplyDelete
  4. நன்றி கஸ்தூரி சார்..

    ReplyDelete
  5. ஆகா
    அற்புத வரிகள்
    மனதை நெகிழச் செய்கின்றன
    நன்றி நண்பரே
    கவிஞருக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  6. ஜனவரி 2017இல் விக்கிபீடியா போட்டியில் கலந்துகொண்டதால் தங்களின் சில பதிவுகளைக் காண்பதில் தாமதமேற்பட்டுவிட்டது. உணர்வின் வெளிப்பாட்டை அப்படியே உணர்த்தும் கவிதை. நெகிழவைத்தது.

    ReplyDelete
  7. உள்ளம் தொடும் ....அல்ல அல்ல... உள்ளம் சுடும் கவிதை. உண்மைக்கு உரைகல்லாய் விளங்கும் கவிதை. மனதில் பட்டத்தை பட்டவர்த்தனமாக உரைக்கும் கவிதை. இது கவிதை அல்ல . கல்வெட்டு.

    ReplyDelete

Post a Comment

வருக வருக