போக்குவரத்து கழகம் எப்படி இருக்க வேண்டும்?

போக்குவரத்து நாகரிக உலகின் அடயாளம் மட்டுமல்ல அடிப்படை உரிமைகளில் ஒன்று.



விரைந்து  பொருளீட்டும் விழைவு கொண்ட சமூகத்தில் போக்குவரத்துத்துறை சேவை என்கிற நிலையில் இருந்து வணிகம் என்கிற நிலைக்கு நகர்ந்து நூறாண்டுகள் ஆகின்றது.

எந்த ஒரு நிறுவனமும் லாபமீட்டுவது அவசியம். ஆனால் அது பணமாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

அரசு பொறுப்பில் இருக்கும் பொதுப் போக்குவரத்துத் துறை லாபமாக பணத்தை மட்டுமே கருதுவது சரியான பார்வை ஆகாது.  குறைந்த கட்டணத்தில் எளிய மக்களை வெகுதூரம் பயணிக்க வைப்பதே லாபம் என்று கருதப்பட வேண்டும்.

இதற்கு இடையூறான காரணிகளைக் கண்டறிந்து அவற்றை நீக்குதல் அவசியம்.

அதற்கு நோக்கங்களில் தெளிவு அவசியம்.

கழகத்தின் நோக்கமாக இருக்க வேண்டியது.
பாதுகாப்பான, துரிதமான பயணச்சேவை.
குறைந்த கட்டணவிகிதம்.

ஊழியர்களுக்கு சரியான ஊதியம் இன்னும் ஏனைய பணப் பலன்கள்.

அடிப்படையான நோக்கங்களில் இவை இருந்தாலும்  இன்னும் சில மேம்பட்ட  நோக்கங்கள் பின்இணைப்பாக சேர்த்துக் கொள்ளலாம்.

இப்போது இந்த நோக்கங்களுக்கு ஊறு செய்வன எவை என்கிற பட்டியலைப் பார்க்கலாம்.

அரசியல் வியாதிகள்.
அவர்களுக்குத் துணைபோகும் மேல்மட்ட அதிகாரிகள்.

இவர்கள் இருவரின் கூட்டணிதான் அரசுப் போக்குவரத்துக் கழகத்தை நட்டத்தில் தள்ளுகிறது என்பதே உண்மை.

இவர்களுக்குப் பின்னால் இருக்கும் தனியார் பேருந்து முதலாளிகள், அவர்கள் செலுத்தும் கப்பம், அவர்களின் திருவிளையாடல்கள் என  இன்னும் சில காரணிகள் இருக்கின்றன.


இவற்றை நாம் சரிசெய்யவே இயலாதா?
திருடனைப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்கிறது போல  தீர்வுகள் இல்லவே இல்லையா?

சிந்தித்தால் சுலபம்தான்.

பேருந்துக்கு உதிரி பாகங்கள் வாங்குவதை பொது தணிக்கைக்கு உட்படுத்துவது, தணிக்கையில் பொதுமக்கள், ஊடகத்துறை, கல்லூரி மாணவர்கள் என ஒரு பெரும் குழுவை ஈடுபடுத்துவது என்பதே சரியான தீர்வாக இருக்கும்.

ஒரு கழகத்தின் தேவைகள் என்ன? அவற்றை நிறைவு செய்யும் வழிமுறைகள் என்ன என்பதை பொதுமக்கள் அறியவும் செயல்படவும் வாய்ப்புத்தரப்பட வேண்டும்.

இது ஒரு விசயம் நடந்தாலே கிட்டத்தட்ட அறுபது சத நட்டம் லாபமாக மாறிவிடும்.

உதாரணத்திற்கு டயர்களை மட்டும் வாங்கிவிட்டு ட்ரம்மில் போடுகிற பிளாப்பை வாங்காமல் விட்டால் தொகை மிச்சமானது போலத் தெரியும் ஆனால் வெறும் ட்ரம்மில் டியூப் மோதி மோதி டயரின் ஆயுட்காலமும் குறையும்.

மேம்போக்கான பார்வையில் லாபகரமான கொள்முதல் ஒன்று சில மாதங்களில் கேலிக் கூத்தான நட்டமாக மாறிவிடும்.

ஆனால் என்ன சம்பத் பட்டவர்கள் சில ஏக்கர் நிலங்களை வாங்கிச் சேர்த்திருப்பார்கள்.

பின்னர் அவர்களே கழகம் நட்டத்தில் ஓடுகிறது என்கிற தகவலையும் கவலையுடன் தெரிவிப்பார்கள்.

எந்த ஆட்சி வந்தாலும் இம்மாதிரிக் காட்சிகள் மாறுவதே இல்லை.

மாற்றங்கள் மக்கள் மனதிலும் அவர்கள் குழுவாக இணைந்து செயல்படுவதிலும்தான் இருக்கிறது.

போக்குவரத்துக் கழகம் செய்ய வேண்டிய கடமைகள் சில இருக்கின்றன.

முதற்கண் இருக்கை அமைப்பு மாற்றி  அமைக்கப்பட வேண்டும்.

முதியோருக்கு நட்பான விதத்தில் சில இருக்கைகளாவது அமைக்கப்பட வேண்டும்.

பேருந்துகளின் தரம் மேம்படவேண்டும்.
ஜவஹர்லால் நேரு நகரிய மேம்பாட்டு நிதியில் கர்நாடகவில் இயங்கும் வண்டிகள் வெகு நேர்த்தியாக இருகின்றன.

ஆனால் தமிழகத்தில் அதே நிதியில் இயங்கும் பேருந்துகள்  அமரர் ஊர்திகள் போலவே வடிமைக்கப்படுகின்றன.  இந்த நிலை மாற வேண்டும்.

ஏனைய பேருந்துகள் வடிமைப்பு காலத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட வேண்டும்.

இந்த மாற்றங்கள் வரவேண்டும் என்றால் மக்கள் ஒரே புள்ளியில்  ஒன்றிணைத்து கேட்பதுதான் ஒரே வழி.

அது ஒன்றே விடிவு.

அதுவரை அரசுப் பேருந்துகள் நட்டத்தில்தான் ஓடும்.

விழிக்குமா தமிழினம்.

அன்பன்
மது.

Comments

  1. ஆலோசனைகள் நன்று... மேம்பட்டால் மகிழ்ச்சி...

    ReplyDelete
  2. அரசுத்துறை நிறுவனம் மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும் ,ஆனால் இன்று ..எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக் காட்டாய் உள்ளது :)

    ReplyDelete
  3. நம் அரசுத்துறை நிறுவனங்களைப் பற்றிச் சொல்லி முடியாதுதான். கேரளத்தில் கூட ஒரு காலத்தில் பேருந்து போக்குவரத்து மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இப்போது பலவகையிலும் முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்று சொல்லலாம். இருந்தாலும் பல கிராமங்களுக்கு அதுவும் மலைப்பிரதேசம் இருக்கும் பகுதிகளில் பேருந்துப் போக்குவரத்து மிகவும் குறைவு. இன்றும் புதிய வண்டிகள் விடப்பட்டாலும், பராமரிப்பு என்று பார்த்தால் குறைவுதான்.பேருந்து ஓட்டும் முறையும் பல விபத்துகள் நிகழ்வது என்பதும் சகஜமாகிவிட்டது.

    ReplyDelete

Post a Comment

வருக வருக