இருமுனை -தூயன் சிறுகதைத்தொகுப்பு

ஒரு படம் வரும்முன்னர் அசத்தலாக ஓர் ட்ரைலர் வருவதுபோல அண்ணன் தங்கம் மூர்த்தி அவர்கள் தூயனின்  கதையொன்றைக்  குறித்து ஏகத்துக்கும்  சிலாகித்து என்னுடைய எதிர்பார்ப்பை எகிற வைத்தார்.



தூயனை ஒரு தேர்ந்த வாசிப்பாளராக மட்டுமே அறிந்திருந்த எனக்கு இது ஆச்சர்யத்தைத்தந்தது.

கூட்டங்களில் தயங்கி தயங்கி தனது  ரசனையைப் பகிர்ந்து கொள்ளும் தூயன் ஒரு படைப்பாளி என்பது ஒரு இனிய ஆச்சர்யம்.

தூயன் தேர்ந்தெடுத்து படிக்கும் நூற்களின் கணமும் அவற்றை அவர் பகிர்ந்து கொள்ளும் ரசனை மிக்க அனுபவப் பகிர்வும் அவர்மீது எனக்கு ஒரு தனி  மரியாதையை ஏற்படுத்தியது.

போதாக் குறைக்கு பயிற்சி ஒன்றிற்கு திருவரங்குளம் அரசினர் மேல்நிலைப் பள்ளி சென்றிருந்த பொழுது ஹால் ஆப் பேம்மில் ஒரு பெயர் மிக வித்யாசமாக இருந்துது. தூயன்!

அழைத்துக் கேட்ட பொழுது அவரேதான், தூயன் அவரது இயற்பெயர்தான் என்றும் அறிந்தேன்.

அதீத வாசிப்பும், ரசனையும், எவ்வளவு நாட்களுக்குத்தான் ஒரு வாசகனை வாசகனாகவே வைத்திருக்கும்.

அதிகமாய்ப் படிப்ததற்கு பின்னர் எழுதாமல் இருப்பது மலச்சிக்கல் போல என்பார் ஒரு எழுத்தாளர்.

தூயனின் படைப்புகளை படிக்கும் பொழுது இத்துணைத் தரவுகளும் எனது மனதில் வந்தது.

ஏழு சிறுகதைகளும் ஒரு குறுநாவலையும் கொண்ட தொகுப்பு இருமுனை.

யாவரும் பதிப்பகம் சென்னையில் நூலை வெளியிட்டபொழுதே அடம் பிடித்து வாங்கிக் கொண்டேன்.

காணொளிப் பதிவாகத்தான் விமர்சிக்க வேண்டும் என்ற திட்டதில் இருந்ததால் தள்ளிப் போய்விட்டது.

முதல் கதை இன்னொருவன் ஒரு வட இந்தியத் தொழிலாளிக்கும் தமிழக நண்பருக்கும் இடையே கமழ்ந்த நட்பு.

இந்தக் கதையில் தூயன் காட்டியிருக்கும் விளிம்பு நிலை தொழிலாளர்களின் துயர், உடலெங்கும் புண்கள் வந்து, அவற்றில் புழுக்கள் நெளிய வாழ்ந்து மடியும் அவலத்தை போகிற போக்கில் ஏதோ புதுக்குளத்தின் கரைகளில் பூத்திருந்த பூக்களை வர்ணிப்பது போல வர்ணிப்பது வாசிப்போரின் உடலைச் சில்லிட வைக்கிறது.

முதல் கதையிலேயே படைப்பாளியின் மொழிச் செழுமை நம்மை ஆகர்சிக்கிறது.

நோயுற்ற வட இந்திய தொழிலாளியின் மருத்துவமனை பாடுகளை அதீத விவரணைகளின் மூலம் சொல்கிறார்.

மனத்துணிவு உள்ளோர் மட்டுமே படிக்கலாம்.

மிகச் சவாலான ஒரு சப்ஜெக்டை முதல் கதையில் தொட்டிருக்கிறார். கதையின் கடைசி வரியில்தான் நண்பர்கள் இருவருக்கும் நட்பை மீறிய உறவு ஒன்று இருப்பதை நம்மை ஊகிக்க வைக்கிறார்.

அதுவும் ஆம்பிகுவஸ், நீங்கள் விரும்புகிற மாதிரி ஒரு முடிவை எடுத்துக் கொள்ளலாம்!


இரண்டாவது கதையும் உச்சம்தான்

இருமுனை

பைபோலார் சிதைவுள்ள கதாநாயகன், அதே பாதிப்புள்ள ஒருத்தியை சந்திப்பதும் அதன் விளைவுகளும்தான் கதை.

என்ன டீடைல்ப்பா, குறிப்பாக ஓவியங்கள் பற்றி பேசும், அஜந்தாக் குகையின் ஓவியங்களை வர்ணிக்கும் தோழியும், உன்னதமான தளத்தில் விரியும் கதை எதிர்பாரா முடிவில் நிறைவுறுகிறது.

முகம் எனும் மூன்றாம் கதை பன்றிகளை வேட்டையாடும் விளிம்பு நிலை வில்லனுக்கும் கதாநாயகனின் தாய்க்கும் உள்ள உறவைப் பேசுகிறது.

இந்தக் கதையின் விவரணைகளும் அதீதமானவை.

உண்ணும் பன்றிகளின் இயல்பை, வில்லனைக் கொல்ல முடியாமல் பன்றிகளைக் கொன்றுபோடும் கடைசியில் மிகக் கொடூரமாக கொலையாகும் நாயகன் ஒருவனைக் குறித்தது இந்தக் கதை.

நான்காவதாக வரும் மஞ்சள் நிற மீன் வெகு நேர்த்தி.

தொகுப்பின் மிக அருமையான கதையில் இதை நான் வைத்திருக்கிறேன்.

வாசிக்கும் ஒவ்வொருவரும் தங்கள் பால்யப் பிராயத்திற்கு செல்லும் வாய்ப்பை வழங்கும் கதை.

முடிவு நீங்கள் ஊகித்த படி துன்பியலேதான்.

வேசி ஒருவள் குறித்த தலைப்பிரட்டைகள், சாதீய வன்கொடுமைக்குஆளாகும் ஒருவனின் மனப்போராட்டங்கள், அவனது தந்தையின் கடை குறித்த நினைவுகள் என ரொம்ப பார்த்துப் பார்த்துச் செதுக்கப்பட்ட கதை.

என் தேர்வில் இரண்டாவது கதை.  என்ன நாயகன் பிழைத்துக் கொள்ள வேசி காணமல் போகிறாள்!

எஞ்சுதலில் மட்டுமே நேர்மறையாகக் கதை முடிகிறது. பிள்ளை இல்லாதவளின் மனப்போராட்டங்கள் குறித்துப் பேசும் கதை.

பேராழத்தில் மீண்டும் ஒரு யூ டர்ன்.

தான் செய்த சிற்பங்களின் மீதே காமுறும் மனப்பிறழ்வு கொண்ட சிற்பியின் கதை.

தொகுப்பின் இறுதியில் இருக்கும் குறுநாவல் ஒற்றைக்கை துலையன்.

இந்தக் குறுநாவலுக்காக நீங்கள் இந்தத் தொகுப்பை வாங்கித்தான் ஆகவேண்டும்.

தூயனின் மாஸ்டர் பீஸ் இது.

அமானுஷ்ய உலகின் தளங்களுக்குள் அமிழ்ந்து பரவும் இந்த கதை சான்சே இல்லாத ஒரு கதை.

தூயனின் அடையாளமாக இந்த குறுநாவல் பின்னாட்களில் அறியப்படலாம்.

செமையான வாசிப்பு அனுபவத்தை தரும் இந்த படைப்பு நிச்சயம் நீங்கள் ஒருமுறையாவது படிக்க வேண்டிய ஒன்று.


இன்னும் கொஞ்சம் தூயன்.

வாசிப்பின் போழ்து தூயன் குறித்த வாவ்கள் பல இடத்தில்.

குறிப்பாக ஓவியங்கள் குறித்துப் பேசும் பொழுதும், மென்பொருள் கொண்டு கதை எழுதும் ஒரு பாத்திரத்தை காட்டிய பொழுதும், வியப்பு ஏற்பட்டால்

பெருவாரியான கதைகளின் மார்பிட் தன்மை (நோயுற்ற மனநிலை) பெரும் அச்சத்தைத் தந்தது.

ஒரு படைப்பாளியை பற்றி, அவரது பின்புலம் குறித்து அறிந்து கொள்வது படைப்பை அணுகுவதை ரொம்பவே பாதிக்கிறது.

தூயன் பன்றிகள் மேயும் ஒரு முட்காட்டை காட்டினால், ஒ இது திருவரங்குளமா என்றோ இந்தப் பெயிண்டர் தோப்புக் கொள்ளை முகாமில்  இருப்பவரோ என்றோ தோன்றுவது இடையூறு.

அதே போல மார்பிட் உணர்வுகள், இனி தூயனுடன் பழகலாமா என்கிற கிலியையும் தருகிறது.

யோவ் தூயன் நமக்கு ஒரு பாலா போதுமப்பா, கொஞ்சம் எஞ்சுதல் போல எழுதுங்கள்,

ஏகப் பட்ட வலிகளை பகிர்ந்தாலும் எஞ்சுதல் நேர்மறையாக முடிந்திருப்பது அருமை.

இப்படிப் பட்ட கதைகளை நிறையவே தூயன் எழுத வேண்டும்.

ஓரினச் சேர்க்கை, மனப் பிறழ்வு, இருமுனை பாதிப்பு என பல்வேறு பிரச்சனைகளைப் பற்றி பேசும் இந்தக் கதைகள் தமிழ் இலக்கிய உலகின் மிக முக்கியமான கதைகள்தான்.

காத்திருக்கிறோம் அடுத்த தொகுப்புக்கும்.


வாழ்த்துகள் தூயன்.

அன்பன்
மது



Comments

  1. பணி நிறைவுப்பணிகள் காரணமாக சில நாள்கள் வலைப்பக்கம் வர முடியவில்லை. பணி நிறைவு விழா தொடர்பான பதிவு இதோ, வாய்ப்பிருக்கும்போது வாசிக்க வருக. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாக சந்திப்போம் : http://drbjambulingam.blogspot.com/2017/05/blog-post_4.html நல்லதோர் விமர்சனத்திற்கு நன்றி. என் வாசிப்பில் இனி இந்நூலும் சேரும்.

    ReplyDelete
  2. நல்லதொரு அறிமுகம். நன்றி மது.

    ReplyDelete
  3. உடனே வாங்கிப் படிக்கத் தூண்டும் விமர்சனம்
    அவசியம் வாங்கிப் படிப்பேன் நண்பரே
    நன்றி

    ReplyDelete
  4. வணக்கம்
    விமர்சனம் நன்று படிக்க தூண்டுகிறது....
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

Post a Comment

வருக வருக