மறுக்கப்படும் உண்மை - கண்ணகி கோயில்

தேனீ மாவட்டம் உத்தம பாளையம் தாலுகாவில் வண்ணாத்திப்பாறை என்ற இடத்தில் அமைந்திருக்கிறது இக்கோயில். சேரன் செங்குட்டுவன் இமயம் வரை சென்று கல்லெடுத்து வந்து இக்கோயிலை கட்டியதாக சொல்லப்படுகிறது. சோழமன்னன் ராஜராஜன், பாண்டிய மன்னன் மாறவர்மன் குலசேகரன், விஜய நகர மன்னர்கள் இக்கோயிலுக்கு மானியங்கள் வழங்கியதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. தமிழக எல்லையில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் 4380 அடி உயரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. இது அமைந்திருக்கும் பகுதியிலிருந்து நிலப்பகுதி தமிழகத்தின் பக்கம் சரிவாக இருக்கிறது.



1893 - 95 ன் நில அளவை ஆவணங்கள், 1916 ன் இந்திய சர்வேயர் ஜெனரல் வரைபடம் ஆகியவை இக்கோயில் தமிழகத்திற்குள் அமைந்திருப்பதைக் காட்டுகின்றன. 1975 ல் இரு மாநில நிலப் பதிவேடுகள் துறையினரும் மேற்கொண்ட சர்வேயின்படி கேரள எல்லையிலிருந்து 40 அடி தூரத்தில் அமைந்துள்ளதை ஒப்புக்கொண்டனர்.

70 களின் இறுதியில் அக்கோயிலை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. அக்கோயிளுக்குள் செல்லும் வலி கேரளாவுக்குள் இருப்பதால் கேரள அரசிடம் அனுமதி கேட்டது தமிழக அரசு. உடனே அப்பகுதி தங்களுக்கு சொந்தமானது என உரிமை கொண்டாட ஆரம்பித்தது கேரளா. இதற்கு ஆதராமாக கோயில் கேரளபாணி கட்டிட முறையில் இருப்பதை சுட்டிக் காட்டுகிறது.

இக்கோயிலுக்கு வழிபாட்டு ரீதியாக எந்த முக்கியத்துவமும் இல்லாவிட்டாலும், வரலாற்று ரீதியாக மிக முக்கியமான கோயில் இது. வருடா வருடம் சித்திரை பௌர்ணமி சமயத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் கண்ணகியை வழிபடச் செல்லும்போது அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. கேரள அரசின் அனுமதியின் பேரிலேயே தமிழக பக்தர்கள் அங்கு சென்று வழிபடமுடிகிறது

Comments