நீர்ப்பறவை



வெகுநாட்களுக்கு பின் ஒரு நல்ல நாவலை திரையில் காட்டியதற்காகவே சீனு ராமசாமியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். சமுக பிரச்சினைகளை சொன்னால் தியட்டரை விட்டு ஓடிவிடுவார்கள் என்று நடிகைகளின் சதைபிரதேசங்களை காண்பித்து பார்வையாளனை மழுங்கடிக்கும் சாமர்த்தியக்கார இயக்குனர்களுக்கு மத்தியில் சீனு பளிச்சென வேறுபட்டிருக்கிறார் .

நாட்டை உலுக்கும் குடிநோய், யாரும் தீர்வுக்கான இயலாத இலங்கை கடற்படையின் தமிழ் மீனவ பாசம் என இரண்டு பிரச்சனைகளை எடுத்துக்கொண்டு அவற்றை சுவாரஸ்யமாய் கையாண்டு ஒரு அருமையான திரைப்படத்தை தந்திருக்கிறார் இயக்குனர்.

விஷ்ணுவிற்கு இது ஒரு ஜாக்பாட் வாய்ப்பு. ஒரளவு பயன்படுத்திக்கொள்ள முயற்சித்திருக்கிறார். குடிகாரனாக நடிப்பது தமிழ்நாட்டில் அவ்வளவு சுலபமில்லை! பாண்டி விஷ்ணுவுடன் அடிக்கும் கூத்து 20 ரூபாய்க்கு பாவ மன்னிப்பு கேட்பது என முதல் பகுதியை நகர்த்தும் காமடி டிராக்.


விஷ்ணு, சுனைனா, நந்திதா தாஸ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி,  அழகம்பெருமாள், பாண்டி என ஒரு பெரும் பட்டாளமே கதையை நகர்த்தி செல்கிறது  .

 ஆழமான மத நம்பிக்கையுடன் வரும் சுனைனா தனக்கு கிடைத்த வாய்ப்பை பற்றிக்கொண்டு பயன்படுத்தியிருக்கிறார் . அப்பாவியாய் விஷ்ணுவிற்கு 50 ரூபாய் தருவதும், அவனை புரிந்துகொண்டு அவன் தலையில் கைவைத்து பிரார்திப்பதுமாய், சுனைனா நடிப்பில் மிளிர்கிறார். இதில் விஷ்ணுவிற்கு காதல் பல்பு எரிந்து பாதி போதையில் சுனைனா பின்னால் அசட்டு  சிரிப்போடு அலைவது கூல் மாமே.


விளக்குமாறோடு சாத்தானே அப்பால் போ என்று சொல்வது கொஞ்சகாலம் கல்லூரிகளில் கேட்கும். சுனைனாவின் இயல்பான நடிப்பு அழுத்தமான நந்திதா தாசின் நாடகபாணி நடிப்பின் முன் சற்று பிசிறடிக்கிறது.

பல காட்சிகளில் இயக்குனர் கடுமையாக உழைத்திருப்பது தெரிகிறது.
குறிப்பாக ஒரு மீனவனின் படகு கடலில் முதல்முதலில் இறங்கும்போது நடக்கும் விழா ரொம்ப அருமை. சீனு தமிழ் திரைக்கு ஒரு ஆரோக்கியமான  வரவு. பாலாவின் காமரா அருமை. செம்மண் கலர் கடல், உப்பங்கழி என சில
அருமையான பதிவுகள் வசப்பட்டிருக்கிறது. என் பி ரகுநாதனின் இசை நிறைவு.

Comments

  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே...

    ReplyDelete

Post a Comment

வருக வருக