வரலாறு முக்கியம்

தமிழன் மறந்துபோன சில வரலாற்றுக்குறிப்புகள்
சோழர்களின் நிர்வாகம்

காஞ்சி மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த பழையசீவரத்தில் ஒரு பழைமையான கோயில் கண்டுகொள்ளப்பட்டு, புனரமைக்கப்பட்டு வருகிறது. 1000 ஆண்டுகளுக்கு முன்னர் சோழர்களால் கட்டப்பெற்றதாக கூறப்படும் இக்கோயில் திருச்சுவர்களில் பண்டைய தமிழர்களின் பல்வேறு கலாச்சாரங்களையும், பாரம்பரியங்களையும் பறைசாற்றும் கருத்துகள் காணப்படுகின்றன.


செங்கல் பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் உள்ளது பழையசீவரம்.பாலாற்றங்கரையில், ஒரு சிறுகுன்றை ஒட்டி அமைந்திருக்கும் அழகிய கிராமம். குன்றின் மீது மிகவும் சிதிலமான நிலையில் ஒரு மகாவிஷ்ணுகோயில் உள்ளது. பல ஆண்டுகளாக யாராலும் யாராலும் கண்டுகொள்ளப்படாத இக்கோயில் மிகவும் புராதனமானது.


முற்றிலும் கற்களினால் ஆன கர்ப்பகிரகம், அர்த்தமண்டபம், பெரிய கல் தூண்களுடன் மகாமண்டபம் என சர்வ லட்சணங்களுடன் காணப்படும் இக்கோயில் பல ஆண்டுகளாக புதருக்குள் மறைந்திருந்தது. கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் இங்கு வந்த ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் இக்கோயிலை பார்வையிட்டு,இக்கோயில் சீரமைக்கப்படும் பணியையும், பொருளுதவியும் செய்து துவக்கி வைத்தார்.

இக்கோயில் 9 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது. சிதிலமான இத்திருக்கோயிலின் இடிபாடுகளில் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. கர்ப்பகிரக இடிபாடுகளிலிருந்து மொத்தம் 18 கல்வெட்டுக்கள் படிஎடுக்கப்பட்டுள்ளன. கல்வெட்டுக்கள் உத்திரமேரூர் கல்வெட்டுக்களை ஒத்துள்ளன என கூறப் படுகிறது. இங்கு கிடைத்துள்ள கல்வெட்டுக்களில் இருந்து அறிய செய்திகள்...


கி.பி.17 ஆம் நூற்றாண்டு அளவில், சீயபுரம் உத்தங்க சோழ சதுர்வேதிமங்கலம் எனும் பெயரிலும், ஜீயர்புரம் என்றும் அழைக்கப்பட்டது. புதிதாக ஊரின் மையத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பெருமாள் கோயில் கல்வெட்டுக்களில் பெருமாள் வின்னபுற ஆழ்வார் என குறிக்கப்படுகிறார். இவ்வூரை ஊர் பொதுச் சபையாகிய பெருங்குறி சபையார் ஆட்சி புரிந்து வந்தனர் என்பது கல்வெட்டுக்கள் மூலம் தெரிகிறது. கி.பி.9 ஆம் நூற்றாண்டு அளவில் தமிழகத்தில் தழைத்தோங்கிய ஊராட்சிமன்றம் இவ்வூரில் மிக சிறந்த முறையில் செயல்பட்டு வந்தது.

ஊர்வாரியம் செய்கின்ற பெருமக்கள், ஊர் வாரியத் தேர்தலுக்கு நிற்பதற்கு முன்னர் தங்கள் சொத்துக் கணக்கை காட்டவேண்டும் என்றும், சத்தியம் செய்து ஊர் வாரிய பெருமக்கள் பணியேற்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏரி வாரியம், சம்வத்சா [ஆண்டு] வாரியம் என இரண்டு வாரியங்கள் இவ்வூரில் இருந்துள்ளதை கல்வெட்டுக்கள் சுட்டி காட்டுகின்றன. மற்றொரு கல்வெட்டில், வாரியத்தில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுகிற பெருமக்கள் தங்கள் சொத்துக் கணக்கை பிறிதொரு முறை காட்டி, கணக்கு எழுதும் போதும், விடும் பொழுதும் சத்தியம் செய்து கணக்கு எழுத வேண்டும் என்று குறிக்கப் பட்டுள்ளது. இதனை போவ்வொரு ஆண்டும் வாரியம் செய்வோர் கடைப்பிடித்தல் வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டுள்ளது.

 சோழப் பேரரசன் முதலாம் பராந்தக சோழனின் 15 வது ஆட்சியாண்டில்[கி.பி.922 ] வின்னபுரத்து பெருங்குறி சபையார் இவ்வூரின் சீர்கூட்டி அம்பலத்திலே கூடி, அவ்வாண்டு முதல் வாரியஞ் செய்கிறவர் குடும்பத்தின் மூலமாகவும், சபை மூலமாகவும் தேர்ந்தெடுக்கப் படுவர் என்றும் அதற்கு இரண்டு கழஞ்சு பொன் ஊதியமாக பெறுவார் என்றும் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிற சலுகைகள் மற்றும் தனி ஊதியம் பெறுதல் கூடாது என்றும், ஒவ்வொரு ஆண்டும் ஊர் சபைக்கு வாரியப் பெருமக்கள் கணக்கு காட்டுதல் வேண்டும் என்றும் வாரியப் பணியை செய்யாது இருத்தல் கூடாது என்றும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.





Comments