விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் - 21

ஆக்கம் ஷாஜகான்
pudhiavan.blogspot.in
நன்றி

தொடராக வெளிவந்த நூலின் பின்னட்டையில் இடம்பெற்ற சில கவிதைகளும் பாடல்களும் -
(படத்தில் கவிஞர்கள்)




பறையருக்கும் இங்குதீயர் புலையருக்கும் விடுதலை
பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை
திறமை கொண்ட தீமையற்ற தொழில்புரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி வாழ்வம் இந்த நாட்டிலே.
- மகாகவி சுப்பிரமணிய பாரதி

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்!
காந்தியென்ற சாந்த மூர்த்தி தேர்ந்து காட்டும் செந்நெறி
மாந்தருக்குள் தீமை குன்ற வாய்ந்த தெய்வ மார்க்கமே.
- நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை

பண்டம் மலிய வேண்டும் - எங்கும் பயிர் செழிக்க வேண்டும்
சண்டைகள் ஓய வேண்டும் - எவரும் சகோதரர் ஆக வேண்டும்
குடியரசு வேண்டும் - சுதந்திரக் கொடி பறக்க வேண்டும்
அடிமை வாழ்வும் இனி - உலகில் அறவே ஒழிய வேண்டும்.
- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

தடுப்பவர்கள் யாரினி? - எந்தாயின் சேவை செய்வதை
விடுப்பவர்கள் யாரினி? விடுதலை முயற்சியை
சோம்பல் விட்டெழுந்தனம் சுயமதிப் புணர்ந்தனம்
நாம் பிறந்த நாடிதே நமக்குரிய வீடிதே!
- கவியோகி சுத்தானந்த பாரதியார்

தாயின் மணிக்கொடி வானிலுயர்ந்தே
சென்று பறந்திடவே அதன்கீழ் நின்று பணிந்திடுவோம்
ஜாதிமதம் முதல் பேதமறந்து நமது மகாத்மா ஆணை உணர்ந்து
சத்திய மதனைப் பற்றியே நின்று சமத்துவம் பெறுவோமே.
- பாபநாசம் சிவன்

சாதிநிற மொழிநாடு சமயவெறிச்
சண்டையெல்லாம் தாண்டித் தாண்டி
நீதியிலே விளங்குகின்ற நின்மலமாய்
நித்தியமாய் நிறையாய் அந்தம்
ஆதிநடு வில்லாத அகண்டிதமாய்
ஆனந்த அறிவாய் நின்று
போதலொரு வரவேற்ற பூரணமே
சுதந்திரமே போற்றி போற்றி!
- தமிழ்த்தென்றல் திரு.வி.க.

கொச்சை யடிமைக் குறைபடும் கோழைக ளஞ்சவே - கொடுங்
கூற்று மெதிர் கொளு மாற்றல் படைத்தவர் விஞ்சவே
உச்சியின் மேருமலை சிகரந்தனிற் பாருமே - தோன்றும்
உன்னத பாரதச் சீர்க்கொடி வாழ்த்துவம் வாருமே.
- பாலபாரதி ச.து.சு. யோகி

Comments

  1. பாடலகள் ஒவ்வொன்றும் அருமை நண்பரே
    நன்றி

    ReplyDelete

Post a Comment

வருக வருக